வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 20 மே, 2011

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை புண்படுத்தும் செயற்பாட்டில் அரசாங்கம்: த.தே.கூ

யு த்தம் வெற்றி கொள்ளப்பட்ட இரண்டு வருட பூர்த்தியை ஒரு மாதத்திற்கு கொண்டாடுவதற்கு தயாராகி வருகின்ற அரசாங்கம் சிங்கள மக்கள் மத்தியில் தனது பொய்யான முகத்தைச் சுட்டிக் காட்டுகின்ற அதே வேளை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை வஞ்சித்து மீண்டும் மீண்டும் புண்படுத்தும் காரியங்களையே மேற்கொண்டு வருகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம். பி. செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சாட்டினார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்; யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது சமூகம் இன்றும் அவல வாழ்க்கையே அனுபவித்து வருகின்றது. மீள்குடியேற்றம் என்ற பெயரில் முகாம்களில் இருந்து முகாம்களுக்கு மக்களை மாற்றியிருக்கின்ற அரசாங்கம் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றி விட்டதாக சர்வதேசத்துக்கு படம் பிடித்துக் காட்டுகின்றது.
இந்தியா உட்பட ஏனைய நாடுகளும் இலங்கை அரசாங்கத்தின் ஏமாற்றுக் கதைகளை உள்வாங்கிக் கொண்டிருப்பது தான் வேடிக்கையான விடயமாகும்.
ஐக்கிய நாடுகள் சபையின் கணிப்பீடுகளின் பிரகாரம் இலங்கையில் மீள்குடியேற்றம் என்பது அர்த்தமற்றதாக அமைந்திருப்பதாகவும் ஒரு இலட்சத்து 17 ஆயிரம் பேருக்கு அதிகமானோர் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு உள்ளிட்ட மாவட்டங்களில் நிரந்தரமாக மீள்குடியேற்றப்படாதிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க கண்ணிவெடி அகற்றப்படவில்லை என்பதைக் காரணம் காட்டிய நிலையில் வவுனியா, செட்டிக்குளம் முகாம்களில் இன்னும் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மீள்குடியேற்றப்படாத நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் அனைவரும் முல்லைத்தீவைச் சேர்ந்தவர்களாவர்.
தற்போது மீள்குடியேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றவர்கள் எந்த விதமான அடிப்படை வசதிகளையுமே பெற்றிருக்கவில்லை. இதனை நாம் பாராளுமன்றத்திலும் கூட பல தடவைகளில் வெளிப்படுத்தி வலியுறுத்தியிருக்கின்றோம்.
தற்போது அரசாங்கத்தின் கூட்டமைப்புடனான பேச்சுகள் இடம்பெற்று வருகின்றன. ஆறு சுற்றுக்கள் நிறைவடைந்திருக்கின்ற போதிலும் அதில் சிறிதளவான முன்னேற்றத்தையும் காண முடியாதிருக்கின்றது. இதுவும் மீள்குடியேற்றத்தைப் போன்று இழுத்தடிக்கப்படுகின்ற அல்லது போலியானதாக அமைந்து விடுமோ என்ற அச்சம் எழுந்திருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் வேண்டப்படாத ஒன்றை நாம் முன்வைக்கவில்லை என்பதை பெரும்பான்மை சமூகமும் அரசாங்கமும் புரிந்து கொள்ள வேண்டும்.
நிலைமைகள் இவ்வாறிருக்கும் போது யுத்த வெற்றியின் இரண்டு வருட பூர்த்தியை ஒரு மாதத்துக்கு கொண்டாடப் போவதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.
இது அரசாங்கத்தின் பொய்யான முகத்தைக் காட்டுவதான ஒரு செயற்பாடாகும். ஒரு புறத்தில் ஐ. நா. அறிக்கையை சமாளிக்க வேண்டிய கடப்பாடும் அரசுக்கு இருக்கின்றது. அதே நேரம் இது தொடர்பிலான உண்மைத் தன்மைகள் சிங்கள மக்கள் மத்தியில் சென்று விடக்கூடாது என்பதற்காக எண்ணங்களை வேறு திசையில் மாற்றிவிடுகின்ற செயற்பாடாகவே இதனைக் காணமுடிகின்றது.
யுத்தம் நிறைவடைந்து இரண்டு வருடங்கள் ஆகியுள்ள நிலையில் பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களை அபிவிருத்தி செய்து பாதிக்கப்பட்ட மக்களை வாழ வைப்பதே ஒரு உண்மையான அரசாங்கத்தின் நோக்கமாகவும் கடப்பாடாகவும் இருக்க வேண்டுமே தவிர மீண்டும் மீண்டும் தமிழ் மக்களின் மனங்களைப் புண்படுத்தும் காரியங்களில் அரசு ஈடுபடுவது ஏற்கத்தகாத விடயமாகும் என்றார். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’