வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 18 ஏப்ரல், 2011

'வெள்ளை மாளிகையை ஆளத் தகுதியான நீ தலைமை செயலகத்துக்கு தயங்குவது ஏன்?' - மதுரை ரஜினி ரசிகர்கள்

போ ஸ்டர்கள் மற்றும் சுவர் விளம்பரங்களுக்கு தனிச் சிறப்பு பெற்ற ஊர் மதுரை. கல்யாணம், காதுகுத்து, ஜல்லிக்கட்டு என எல்லா நிகழ்வுகளுக்கும் அசத்தலாக போஸ்டர்கள், ப்ளெக்ஸ் பேனர்கள் வைப்பதில் இவர்களுக்கு நிகரில்லை.

சாதாரண நிகழ்வுகளுக்கே இப்படி என்றால், ரஜினி ரசிகர்கள் தங்கள் தலைவருக்கு எப்படியெல்லாம் போஸ்டர் அடிப்பார்கள் என்பது கற்பனைக்கும் அப்பாற்பட்டது.
இதோ அந்த போஸ்டர்களில் ஒரு வாசகம்: 'வெள்ளை மாளிகையைக் கூட ஆளத் தகுதியான தலைவா, நீ தலைமை செயலகத்துக்கு வரத் தயங்குவது ஏன்?'
-இந்த வாசகங்களுடன் 20 அடி நீளத்துக்கு பிரம்மாண்டமான ரஜினி போஸ்டர்கள் மதுரையெங்கும் நேற்றும் இன்றும் களைகட்டின. இதனால் யார் பரபரப்படைந்தார்களோ இல்லையோ, அரசியல்வாதிகள் கொஞ்சம் ஆடித்தான் போனார்கள். ரஜினி திடீரென்று ஏதாவது அறிக்கை விட்டுவிட்டாரா என்று ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டனர்.
இந்தப் போஸ்டர்களை அடித்தவர்கள் மதுரை நகரைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள்தான். "சமீபத்திய அரசியல் நிகழ்வுகளைப் பார்த்தும், அரசியல் கட்சிகளின் லட்சணத்தைப் பார்த்தும் வெறுத்துப் போய்தான் நாங்கள் இந்த போஸ்டரை அடித்தோம். ரஜினி சார் நிச்சயம் இந்த தமிழக மக்களுக்காக சில திட்டங்களை வைத்திருக்கிறார். அவற்றை வெளிப்படுத்த இதுதான் சரியான தருணம்," என்றார் ஆரப்பாளையத்தைச் சேர்ந்த ரசிகரான சங்கரன்.

"பொறுமையாக இருந்தது போதும். இனியாவது ரஜினி அரசியலில் இறங்கி இப்போதுள்ள ஊழல்வாதிகளையும், ஆணவக்காரர்களையும் விரட்டியடிக்க வேண்டும்", என்றார் இன்னொரு ரசிகர்.
தேர்தல் கமிஷன் விதிகள் நடைமுறையில் உள்ள இந்த சூழலில் இதுபோன்ற போஸ்டர்கள் அடிப்பது விதிகளை மீறிய செயல் என தேர்தல் ஆணையத்திடம் சிலர் புகார் கூற, உடனடியாக இது குறித்து விசாரணையில் இறங்கியது தேர்தல் ஆணையம். இதில் போஸ்டர் அடித்து ஒட்டிய ரஜினி ரசிகர் ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’