வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 14 ஏப்ரல், 2010

உலகம் அழிந்துவிடுமா?

விரைவில் உலகம் அழிந்துவிடுமா? அண்மைக் காலமாக மனித குலத்தின் ஆழ்மனத்தில் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கும் கேள்வி இது.

திருச்சியில் கல்லூரி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடம் ஒரு மாணவி இதைக் கேட்டார். ஒரு கணம் மெனித்த அந்த விஞ்ஞானி, அப்புறம் இப்படி பதில் தந்தார், இல்லை. பூமியில் 1000 கோடி ஆண்டுகள் சூரிய வெளிச்சம் இருக்கும் என்று விஞ்ஞானி சந்திரசேகர் தன் ஆய்வில் கண்டறிந்திருக்கிறார். தற்போது 500 கோடி ஆண்டுகளே முடிவடைந்துள்ளன. இன்னும் 500 கோடி ஆண்டுகள் உள்ளன. ஆகையால் கவலைப்படத் தேவையில்லை.


இயற்கையின் மீதும், சக மனிதர்கள் மீதும் எந்த அக்கறையும் இல்லாதவர்களையும் கூட இந்தக் கேள்வி பதற்றத்துக்குள்ளாக்குகிறது. மாயர்களின் நாகரிகத்தில் தொடங்கி புவி வெப்ப மயமாதல் கருதுகோள் வரை சகலமும் இந்தக் கேள்வியாளர்களின் மனத்தை கேள்வியை நோக்கித் தள்ளுகின்றன. பனிமலைகள் உருகுகின்றன. மலைகள் சரிகின்றன. கடல் மட்டம் உயர்கிறது. தீவுகள் மூழ்கின்றன. உலகம் அழிந்துவிடுமா?

எப்படி இந்த உலகைக் காப்பது? தேவையற்ற நேரங்களில் மின் சாதனங்களை அணைத்தா? பொலிதீன் பைகளைத் தவிர்க்க கடைக்கு துணிப் பைகளை எடுத்துச் சென்றா? இனி காருக்குப் பதில் பஸ்ஸிலேயே பயணம் மேற்கொண்டா?

உலகின் அத்தனை தொழிற்சாலைகளையும் செம்மையான தொழில்நுட்பத்தின் கீழ் மாற்றியா? எப்படி உலகைக் காப்பது? மனிதர்களின் பதற்றம் பரிதாபத்தை ஏற்படுத்துகிறது.

உலகின் மிகப் பெரிய பாலைவனமாக இன்று காட்சியளிக்கும் சஹாரா பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நீர் நிலைகள் நிறைந்த பசுமையான பகுதியாக இருந்தது. விஞ்ஞானிகள், புவியியலாளர்கள் சொல்கிறார்கள்.

பின்னாளில், ஏதோ ஓர் அறிவு சக்தியில் எரிகற்களின் மோதலில் அல்லது ஒரு கொடும் தீப்புயலில் நிலத்திலிருந்த யாவும் எரிந்தழிய பாலையானது சாஹாரா. விஞ்ஞானிகள், புவியியலாளர்கள் சொல்கிறார்கள்.

யாரால் எதனால் ஏற்பட்டது அந்த தீப்புயல்? பல கோடி ஆண்டுகளாகக் கோள்கள் இருக்கின்றன. பல கோடி ஆண்டுகளாக புவியும் இருக்கிறது. மனிதனால் எதை மாற்ற முடியும்?

மனிதன் தீயை உருவாக்கக் கற்றுக் கொண்ட போதே அழிவுச் சக்தி உருவாகி விட்டது. சக்கரத்தை அவன் கண்டறிந்த போது அந்த அழிவு சக்தி நூறு கால்களையும் கொண்டது. ஆயுதங்களை அவன் கண்டுணர்ந்த போது அழிக்க முடியாத சக்தியை அந்த அழிவு சக்தி பெற்றது. இந்தப் பயணம் நிலையானது. தவிர்க்க முடியாதது.

அடர் வனங்கள் இலட்சக் கணக்கான தாவர இனங்கள், பல்லாயிரக்கணக்கான பாலூட்டிகள், பறவைகள், உயிரோட்டமிக்க நீர் நிலைகள், நீர் வாழ் உயிரினங்கள், ஒட்டுண்ணிகள், நுண்ணுயிரிகள் யாவும் அழிந்து கொண்டிருக்கின்றன.

சிங்கங்கள், புலிகள் காட்டிலுள்ள வேங்கைகள், ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள், சோலைப்பாடிகள், பிணந்தின்னிக் கழுகுகள் யாவும் அருகிக் கொண்டிருக்கின்றன. மனிதன் மட்டும் எப்படித் தப்ப முடியும்?

சீன ஞானிலாவோட்சு சொன்னது போல வானகமும் வையகமும் நிரந்தரமாக நீடிக்க முடியாத போது மனிதன் எப்படி நீடிக்க முடியும்.

புன்சிரிப்போடு பதில் சொல்லுங்கள்; உலகம் அழிந்து விடுமா? அழிந்தால் தான் நாம் என்ன செய்யப் போகிறோம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’