வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 7 மார்ச், 2013

இலங்கை விவகாரம்; லோக்சபாவிலிருந்து தமிழக எம்.பி.க்கள் வெளிநடப்பு



லங்கை விவகாரம் தொடர்பில் இந்திய லோக்சபாவில் இன்று வியாழக்கிழமை கடுமையான வாத விவாதங்கள் இடம்பெற்ற நிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சரின் கருத்து திருப்தியளிக்கவில்லை எனக்கூறி, தி.மு.க, அ.தி.மு.க என அனைத்து கட்சி தமிழக எம்.பி.க்களும் பா.ஜ.க எம்.பிக்களும் கூட்டாக வெளிநடப்பு செய்துள்ளனர் என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
லோக்சபாவில் இன்று காலை முதல் பல்வேறு கட்சி எம்.பி.க்களும் இலங்கை மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களைச் சுட்டிக்காட்டி இந்திய அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த விவாதத்தின் முடிவில் பதிலளித்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், 'இலங்கையில் தமிழர்கள் சம உரிமையுடன் வாழ வகை செய்வோம். 13ஆவது அரசியல் சாசன திருத்தத்தைத் தாண்டியும் கூடுதலான அதிகாரங்களைப் பெற்றுத் தருவோம். இலங்கை அயல் நாடு. அந்த நாட்டின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான ஆதாரங்கள் வெளியாகி இருக்கின்றன' என்றார். அத்துடன், 'ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் பற்றி இன்னமும் முடிவெடுக்கவில்லை. முடிவெடுக்கும் போது உங்களின் உணர்வுகள் கவனத்தில் கொள்ளப்படும். இலங்கை மீது கோபப்படுவது மட்டும் தீர்வாகிவிடாது. இலங்கையில் நடந்திருப்பது மிகப் பெரிய மனிதாபிமான பிரச்சினை. இதற்கு தீர்வு காண நீண்டகாலமாகும். இந்தியா பெரியண்ணன் பாணியில் அல்லது உலக பொலிஸ்காரனாக செயல்பட முடியாது' என குறிப்பிட்டார். அமைச்சரின் பேச்சுக்கு குறுக்கிட்ட திராவிட முன்னேற்றக் கழக எம்.பி.யான டி.ஆர்.பாலு, 'எப்பவுமே இதே பதிலை சொல்லிக் கொண்டிருந்தால் எப்படி' என்று கேள்வி எழுப்பினார். அதன் பின்னர் அவருக்கு ஆதரவாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் எம்.பி தம்பித்துரையும் குரலெழுப்பியுள்ளார். இந்நிலையில், வெளிவிவகார அமைச்சர் தனது உரையை மீண்டும் தொடர்ந்ததை அடுத்து, 'நீங்க இப்படி பேசிகிட்டே இருங்க... நாங்கள் வெளியே போகிறோம்' எனக் குறிப்பிட்டுள்ள தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட அனைத்து தமிழக எம்.பி.க்களும் கூட்டாக வெளிநடப்பு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து சல்மான் குர்ஷித் மீண்டும் பேசத் தொடங்கியதை அடுத்து, பாரதீய ஜனதா கட்சியின் எம்.பி.யான யஷ்வந்த் சின்ஹா, 'தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழ என்ன செய்யப் போகிறீர்கள்?' என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த வெளிவிவகார அமைச்சர், 'வீடு கட்டிக் கொடுத்தோம்' என்றார். அவரது பதிலுக்கு அதிருப்தி வெளியிட்ட பா.ஜ.க. எம்.பி.க்களும் தங்களது கண்டனத்தை வெளியிட்டவாறு வெளிநடப்பு செய்துள்ளனர். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’