வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 1 நவம்பர், 2012

ஸ்ரீலங்கா சிங்கள பெளத்த குடியரசாக மாற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளது: மனோ



லங்கையின் அதிகாரப்பூர்வ பெயர் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசு என்பதாகும். எனினும் அந்த பெயரில் இருக்கும் ஜனநாயகமும் சோஷலிசமும் நாட்டுக்குள்ளே கிடையாது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
"ஆனால் நாட்டில் ஜனநாயகத்திற்கும் சோஷலிசத்திற்கும் பதிலாக சிங்களமும் பெளத்தமும் நடைமுறையில் தலைவிரித்தாடுவது எல்லோருக்கும் தெரியும். இந்த நடைமுறை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் நீண்டகால திட்டத்தை முன்கூட்டியே அறிவிக்கிறது. அதுதான் ஸ்ரீலங்கா சிங்கள பெளத்த குடியரசு என்பதாகும்" என அவர் குறிப்பிட்டார். "அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம்" என்ற தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய இயக்கத்தின் அங்குரார்ப்பண ஊடகவியலாளர் மாநாடு கொழும்பு பார்ன்ஸ் பிளேசில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் உரையாற்றும் போதே மனோ கணேசன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், "முழுநாட்டையும் சிங்கள பெளத்தர்களின் நாடு என அறிவிக்கும் இலக்கை நோக்கி மஹிந்தவும் அவரது சகோதரர்களும் விடயங்களை கொண்டு போகின்றார்கள். இன்று நாட்டில் அதிகார பகிர்விற்கு எதிரான ஒரு திட்டமிட்ட இயக்கம் முன்னெடுக்கப்படுகிறது. விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க, தினேஷ் குணவர்த்தன ஆகிய அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் இதன் பின்னணியில் இருகின்றனர். இவர்கள் அரசின் அதிகாரமிக்க செல்லப்பிள்ளைகள். ஆனால், இது பற்றி கேட்டால் அரசின் ஊடக பேச்சாளர் சிறு பிள்ளைத்தனமாக பதில் சொல்கிறார். நாட்டு மக்களை முட்டாள்களாக கருதி பதில் சொல்கிறார். இன்னமும் கூட 13 பிளஸ் என்று பேசுகிறார்கள். பதிமூன்றை அகற்ற முடிவு செய்யவில்லை என்று சொல்கிறார். இந்த நாட்டு மக்களுக்கு தாய் நாடு இலங்கை. நாம் எல்லோருக்கும் தந்தை நாடு இந்தியா. அங்கிருந்து தான், இங்கே எல்லாம் வந்தது. மொழி, கலை, கலாச்சாரம், சங்கீதம், மதம் என எல்லாம் அங்கிருந்து வந்தவை தான். இன்றும் கூட அங்கிருந்து பெரும் முதலைகளின் முதலீடுகள் வருகின்றன. அவர்களுக்கு நம் நாட்டு நிலங்கள் கபடத்தனமாக வழங்கப்படுகின்றன. அங்கிருந்து எல்லாம் வேண்டும். ஆனால் இந்தியாவில் நடைமுறையிலுள்ள அதிகார பகிர்வு முறைமை மற்றும் மொழிவாரி மாநில முறைமை உங்களுக்கு வேண்டாம். அங்கு தமிழ் நாடு தமிழ் மொழி பேசும் மக்களுக்கான மாநிலம். கன்னடத்துக்கு கர்நாடகா, தெலுங்குக்கு ஆந்திரா, மலையாளத்திற்கு கேரளா என ஏறக்குறைய 28 மொழிவாரி மாநிலங்கள் உள்ளன. ஆனால் எல்லாம் ஒரே இந்தியா. அங்கும் இன, மத பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனாலும், அவை எல்லாவற்றையும் மீறி அங்கு ஐக்கியம் நிலவுகின்றது. இமயமலை முனையிலிருந்து குமரிமுனை வரை இந்தியர் என்ற உணர்வு இருக்கின்றது. இத்தனை பெரிய நாட்டில் நிலவும் ஐக்கியத்துக்கு காரணம். அங்குள்ள இந்த நியாயமான அதிகார பகிர்வு என்பதை இந்த இனவாதிகள் வேண்டுமென்றே மறைக்கிறார்கள். இன்று தமிழர்கள் ஆயுதம் தூக்க போவதில்லை. தமிழர்கள் நாட்டை பிரிக்க போவதில்லை. வடக்கு - கிழக்கில் வாழ்கின்ற தமிழர்களின் பெரும்பான்மை ஆணையை பெற்றுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இதை தெளிவுபட கூறிவிட்டார். அதற்கு மேலதிகமாக சிங்க தேசிய கொடியை அசைத்தும் காட்டிவிட்டார். இதையே நமது ஜனநாயக மக்கள் முன்னணியும் கூறுகின்றது. இந்நாட்டில் பல தமிழ் கட்சிகள் இருந்தாலும் கூட்டமைப்பின் ஐந்து கட்சிகளுடன் எனது கட்சியையும் சேர்த்து இந்த ஆறு தமிழ் கட்சிகள் தான் இந்நாட்டில் வாழும் மிகப்பெரும்பான்மை தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் என்பதை மறவாதீர்கள். ஆகவே இது தான் ஒட்டுமொத்த தமிழர்களின் எண்ணக் கருத்து. இத்துணை சொல்லியும் நீங்கள் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் நியாயமான அதிகாரங்களை பிரித்து, நாட்டை ஐக்கியப்படுத்த தயார் இல்லை. எங்களை ஒன்றுமில்லாமல் கடலிலா பாய சொல்கிறீர்கள்? தேசிய கீதம் பற்றிய பிரச்சினை பேசப்பட்ட போது, இந்தியாவில் இந்தி மொழியில் தான் தேசியகீதம் பாடப்படுகிறது என்று நாடாளுமன்றத்திலேயே சொன்ன அறிவு கொழுந்து தான் இந்த விமல் வீரவன்ச. இந்தியாவில் சிறுபான்மை மொழியான வங்காளத்தில் தான் அந்நாட்டு தேசியகீதம் பாடப்படுகிறது என்பது கூட தெரியாமல் இவர்கள் அமைச்சர்களாக இருக்கிறார்கள். புலிகளின் தோல்வியை தமிழ் மக்களின் தோல்வியாக மட்டும் இல்லாமல் முஸ்லிம் மக்களின் தோல்வியாகவும் மாற்றி முழு நாட்டையும் சிங்கள பெளத்த நாடாக மாற்ற நாம் விட மாட்டோம். சிங்கள மக்களின் மனசாட்சியை தட்டி நாம் பேசுவோம். எவருக்கும் பயந்து எமது இந்த, "அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம்" என்ற இயக்கத்தை கைவிட மாட்டோம்" என்றார். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன், புதிய இடதுசாரி முன்னியினின் தலைவவர் விக்கிரமபாகு கருணாரத்ன, ஐக்கிய சோஷலிச கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜெயசூரிய, கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி மற்றும் புதிய சிஹல உறும கட்சியின் தலைவர் சரத் மனமேந்திர ஆகியோர் கலந்துகொண்டனர். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’