வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

"சம்பந்தனுக்கு அரசாங்கம் காட்டும் நல்லிணக்க அரசியல் அடையாளம் என்ன?"


ஜெ'னீவாவிற்கு போகாமல் கூட்டமைப்பு தலைவர் அரசாங்கத்திற்கு ஒரு நல்லெண்ண சமிக்ஞையை காட்டியுள்ளார். இதற்கு பிரதியுபகாரமாக அரசாங்கம் கூட்டமைப்பு தலைவருக்கு காட்டும் நல்லெண்ண அரசியல் அடையாளம் என்ன? இதுவே இன்று தமிழ் மக்கள் மனங்களில் எழுந்து நிற்கின்ற கேள்வி' என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் இன்றைய அரசியல் நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது, 'நெருக்கடிமிக்க ஒரு சந்தர்ப்பத்தில் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை என்ற தீர்மானத்தை எடுத்துள்ளார். கூட்டமைப்பு தலைவரின் தீர்மானம் தொடர்பில் ஒரு பிரிவு தமிழர் தரப்புகளிலிருந்து பாரிய விமர்சனங்கள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் முன்வைக்கப்பட்டுள்ளன. கூட்டமைப்பு தலைவர் எடுத்துள்ள தீர்மானத்தின் பின்புலம் பற்றிய முழுமையான விபரங்களை அறிந்துகொள்ளாமல் பிறிதொரு கட்சியின் தலைவர் என்ற முறையில் நான் கருத்து தெரிவிப்பது நாகரீகம் இல்லை. மேலும் நமது கட்சி கூட்டமைப்பு கட்சியும் கிடையாது என்பதால் அதற்கான உடனடி அவசியமும் எமக்கு கிடையாது. ஆனால் தமிழ் மக்களின் மனநிலை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் கடப்பாடும், உரிமையும், அவசியமும் எமக்கு இருக்கின்றது. கூட்டமைப்பின் தீர்மானம் அரசாங்கத்திற்கு மிகவும் நெருக்கடிமிக்க ஒரு காலகட்டத்தில் ஒரு திட்டவட்டமான நல்லெண்ண சமிக்ஞையை வழங்கியுள்ளது. இந்த நல்லெண்ண செயற்பாடு விழலுக்கு இறைத்த நீராக போய்விடக்கூடாது. அரசாங்கம் உடனடியாக சம்பந்தனின் நல்லெண்ண சமிக்ஞைக்கு பிரதியுபகாரமாக தமது நல்லெண்ண அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டும். இதற்காக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சிபாரிசுகளில் உடனடியாக அமுல் செய்யக்கூடியவற்றை நடைமுறையாக்கி காட்டவேண்டும். இதற்கான உரிய வலியுறுத்தல் கூட்டமைப்பினால் அரசாங்கத்திற்கு உரியமுறையில் வழங்கப்படும் என நான் நம்புகின்றேன். இதற்கான துணை பொறுப்பு இந்திய அரசாங்கத்திற்கும் இருக்கின்றதாக நான் நம்புகின்றேன். ஆனால் அரசாங்கத்தின் தீவிரவாத பங்காளி கட்சிகளும், அரசாங்கத்தின் தீவிரவாத ஆதரவு அணியினரும் கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழு அறிக்கையையே முழுமையாக நிராகரித்துள்ளார்கள். இதை அவர்கள் அரசாங்கத்தின் பகிரங்க ஆதரவுடனேயே செய்கின்றார்கள். இதை கட்டுப்படுத்த அரசு எதுவும் செய்யவில்லை. அரசாங்கத்தில் இருக்கும் இடதுசாரி தலைவர்கள் இது தொடர்பில் தீவிரவாத பிரிவினரை எதிர்க்க முடியாமல் இருக்கிறார்கள். அரசில் உள்ள தமிழ் பேசும் அரசியல்வாதிகளைப்பற்றி சொல்லவே வேண்டாம். அவர்களால் தமது உடனடி பிரச்சினைகளையே தீர்த்துக்கொள்ள முடியவில்லை. இதுதான் இன்றைய அரசாங்கத்தின் போக்காக இருக்கின்றது. கூட்டமைப்பின் நல்லெண்ண சமிக்ஞைக்கு பிரதியுபகாரமாக அரசாங்கம் ஆக்கப்பூர்வமாக பதிலளிக்க வேண்டும். அது வெறும் நல்லெண்ண நடவடிக்கைக்கான தேவை மட்டும் அல்ல. அது அரசாங்கத்தின் கடப்பாடும் ஆகும். வெறும் வாக்குறுதிகளுக்கான காலம் கடந்து விட்டது என்பதை அரசாங்கம் உணர வேண்டும். இப்பொழுது செயற்படுவதற்கான காலம் வந்து விட்டது என்பதையும், தெருக்களில் நடத்தப்படும் போராட்டங்களை விட இது முக்கியமானது என்பதையும் அரசாங்கம் அறிந்துகொள்ளவேண்டும். இதை ஆளுமையுடன் கூட்டமைப்பு அரசாங்க தலைவருக்கு எடுத்து கூற வேண்டும். அதற்கான உரிமை கூட்டமைப்பு தலைவருக்கு இன்று இருக்கின்றது. அரசாங்கத்திற்கு எதிராக பாரதூரமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் அரசாங்கம் தமது கற்றுக்கொண்ட பாடங்கள் அறிக்கையை மனித உரிமை ஆணைக்குழுவிடம் அதிகாரபூர்வமாக சமர்பிக்காமல் அடம் பிடிக்கின்றது. அதை நடைமுறைப்படுத்துவோம் என சொல்கின்றதே தவிர, அதை சமர்பித்து மனித உரிமை ஆணைக்குழுவுடன் இணைந்து செயற்பட மறுக்கின்றது. இதுதான் உண்மை. வரலாற்றிலிருந்து இந்த அரசாங்கம், கற்றுக்கொண்ட பாடங்களைவிட, கற்றுகொள்ளாத பாடங்கள் அதிகம் என்று நினைக்கின்றேன். கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழு தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணி தெளிவான கொள்கையை கொண்டுள்ளது. இந்த ஆணைக்குழு அறிக்கையில் எமது எல்லா பிரச்சினைகளுக்கும் பதில்கள் கிடையாது. பொறுப்புகூறல் அங்கே இல்லை. அது முழுமை இல்லாத அறிக்கை. எனினும் அந்த ஆணைக்குழுவின் சிபாரிசுகளில் சிலவற்றை இந்த அரசாங்கம் விரும்பினால் உடனடியாக நடைமுறை படுத்தலாம். கூட்டமைப்பிற்கு காட்டும் நல்லெண்ண நடவடிக்கைகளாக உடனடியாக அவற்றை அரசாங்கம் செய்து காட்டலாம். கற்றுக்கொண்ட பாடங்கள் சிபாரிசுகள் சிலவற்றை அரசு உடன் நடைமுறை படுத்த வேண்டும். கூட்டமைப்புடன் அரசு பேச்சு வார்த்தைகள் ஆரம்பித்த முதல் சுற்றிலேயே தடுத்து வைக்கப்பட்டு உள்ளோர்களது பெயர் விபரங்கள் வெளியிடும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் அது இதுவரையில் நடக்கவில்லை. தற்போது அதுபற்றி கற்றுக்கொண்ட ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. உடனடியாக இந்த விபரங்கள் வெளிடப்பட்டு சம்பந்தப்பட்ட குடும்பத்தவர்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும். இதன்மூலம் காணாமல் போனோர் தொடர்பில் ஒரு கட்டத்தை நாம் அடைய முடியும். தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் விசேட நீதிமன்ற நடைமுறை கொண்டுவரப்பட்டு இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். முன்னாள் ராணுவ அதிகாரிகளான வட கிழக்கின் ஆளுநர்கள் மாற்றப்பட்டு, சிவில் நபர்கள் ஆளுநர்களாக நியமிக்கப்படுவதுடன், சிவில் நடவடிக்கைகளில் ராணுவ தலையீடு திட்டவட்டமாக குறைக்கப்படவேண்டும். வடகிழக்கில் துணை ராணுவகுழுக்கள் கலைக்கப்படவேண்டும் என்பதையும், மலையகத்தில் தோட்ட தொழிலாளர்களின் சுகாதாரம், கல்வி, வீடமைப்பு ஆகியவை தொடர்பில் விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையும் கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழு சிபாரிசு செய்துள்ளது' என்று மனோ கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’