வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 26 ஏப்ரல், 2011

கனிமொழியை கைது செய்ய வேண்டும்; கலைஞர் டிவியை முடக்க வேண்டும்-ஜெயலலிதா

தி முக எம்பி கனிமொழி உள்பட 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் குற்றப் பத்திரிகையில் பெயர் இடம் பெற்றுள்ள அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரியுள்ளார்.

கொடநாட்டில் தோழி சசிகலாவுடன் ஓய்வெடுத்து வரும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2ஜி அலைக்கற்றை ஊழலில் சிபிஐ தாக்கல் செய்துள்ள இரண்டாவது குற்றச்சாட்டு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதன் மூலம் மத்திய தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராசாவால் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்ட முக்கிய பயனாளிகளுக்கும் முதல்வர் கருணாநிதி யின் குடும்பத்தினருக்கும் இடையே உள்ள சட்ட விரோத பணப் பரிமாற்றம் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
2ஜி அலைக்கற்றை ஊழலின் முக்கிய பயனாளி நிறுவனமான ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தை ஆரம்பித்த ஷாகித் பால்வா தொடர்புடைய பல நிறுவனங்கள் வழியாக கலைஞர் டி.விக்கு ரூ. 214 கோடி அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கருணாநிதி குடும்பத்துக்கு உள்ள தொடர்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கலைஞர் டி.வியின் 60 சதவீத பங்குகளை கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் வைத்திருக்கிறார். 20 சதவீத பங்குகள் கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு சொந்தமானது.
சில வாரங்களுக்கு முன்பு தயாளு அம்மாளையும் கனிமொழியையும் சிபிஐ விசாரித்தது. இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பத்திரிகையில் கனிமொழியின் பெயர் இடம் பெற்றிருப்பதில் வியப்பு ஏதுமில்லை. இருப்பினும் 20 சதவீதம் பங்குகளை வைத்திருக்கும் கனிமொழி மற்றும் சரத்குமார் ஆகியோரின் பெயர்கள் குற்றப் பத்திரிகையில் இடம்பெற்றுள்ள நிலையில், 60 சதவீத பங்குகளை வைத்துள்ள தயாளு அம்மாளின் பெயர் விடுபட்டிருப்பது வியப்புக்குரிய அம்சம்.
அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட கலைஞர் டி.விக்கு ரூ. 214 கோடி பணம் கொடுக்கப்பட்டதை ஷாகித் பால்வாவால் எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது. 2ஜி ஸ்பெக்டம் உரிமத்தை ஒதுக்கீடு செய்ததற்கு பிரதிபலனாகவே கலைஞர் டி.விக்கு ரூ. 214 கோடி அளிக்கப்பட்டுள்ளது. அப்போதையே தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராசா கேட்டுக் கொள்ளாமல் இந்தப் பணத்தை கலைஞர் டி.விக்கு ஷாகித் பால்வா அளித்திருக்கமாட்டார்.
இதேபோல் தன்னுடைய தலைவர் கருணாநிதி கேட்டுக்கொள்ளாமல் தனக்கு தொடர்பில்லாத கலைஞர் டி.வி. நிறுவனத்துக்கு ரூ. 214 கோடி அளிக்க வேண்டும் என்று ராசாவும் வலியுறுத்தியிருக்கமாட்டார்.
எனவே ஷாகித் பால்வாவால் கொடுக்கப்பட்ட ரூ. 214 கோடி லஞ்சப் பணம். இது தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறை வழக்குப் பதிவு செய்யவில்லை என்றால் இந்த ரூ. 214 கோடி கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களைச் சென்றடைந்து இருக்கும். எனவே நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்றால் கருணாநிதி உள்பட அவரது குடும்பத்தினர் அனைவரின் பெயர்களும் குற்றப் பத்திரிகையில் இடம் பெற வேண்டும்.

முதல்வர் கருணாநிதியுடன் நீண்ட காலமாக நெருங்கிய தொடர்புடைய ஜெனிக்ஸ் எக்சிம் வென்சர்ஸ் நிறுவனம் அலைக்கற்றை வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதை தற்செயலாக ஏற்பட்டிருக்கும் நிகழ்வாகக் கருத முடியாது. கலைஞர் டி.விக்குச் சென்ற ரூ. 214 கோடிக்கும் மேல் பல கோடி ரூபாய் ஹவாலா பணப் பரிமாற்றம் மூலம் வெளிநாடுகளில் பாதுகாப்பாக பதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறது என்ற வாதத்தினை இந்தத் தொடர்பு மேலும் வலுப்படுத்துகிறது.

2ஜி அலைக்கற்றை வழக்கின் குற்றப் பத்திரிகையில் கனிமொழியின் பெயர் இடம் பெற்றதுடன் இந்தப் பிரச்சனை நிச்சயம் நின்றுவிடாது. லஞ்சப் பணத்தின் மூலம் ஆரம்பிக்கப்பட்ட கலைஞர் டி.வியின் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும். அதன் ஒளிபரப்பு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

கனிமொழி உள்பட அலைக்கற்றை ஊழலில் நேர்முகமாகவும் மறைமுகமாகவும் பயனடைந்த கருணாநிதி குடும்ப உறுப்பினர் அனைவரின் பெயர்களும் குற்றப் பத்திரிகையில் இடம் பெற வேண்டும். இந்த ஊழலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயனடைந்த கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் கைது செய்யப்பட வேண்டும். இந்த லஞ்சப் பணம் சென்றடைந்த இடம் முழுமையாக கண்டறியப்பட வேண்டும். இந்தியாவுக்கு வெளியே எடுத்துச் செல்லப்பட்ட பணம் அனைத்தும் திரும்பப் பெறப்பட வேண்டும். அப்போது தான் ஊழலின் தாயாக விளங்கும் ஸ்பெக்ட்ரம் ஊழலின் விசாரணை நியாயமான முடிவை அடையும்.

விஞ்ஞான ரீதியில் ஊழல் புரிவதில் வல்லவரான ஒருவர் தான் இந்த மாபெரும் ஊழலை நிகழ்த்தி உள்ளார் என்பதை சிபிஐ கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’