வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 8 செப்டம்பர், 2010

சிறைத்தண்டனைக்குப் பதிலாக சமூக சேவை

சிறிய குற்றங்களுக்கு வழங்கப்படும் சிறைத்தண்டனைக்குப் பதிலாக சமூக சேவையில் ஈடுபடுத்தும் மேற்கத்தேய நாடுகளில் காணப்படும் முறையை இங்கும் கொண்டுவருவதற்கு சட்ட ஏற்பாடுகள் கொண்டுவரப்படவுள்ளதாக சீர்திருத்தம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டியூ.குணசேகர தெரிவித்தார்.
இதனால், தற்போது 27,000 ஆகவுள்ள சிறைக் கைதிகளில் 6 மாதத்தில் 18000 ஆக குறைப்பதற்கு முடியும் என அவர் கூறினார்.
இதனால் சிறையில் இட நெருக்கடி குறைவதுடன் சிறைக் கைதிகளை பராமரிப்பதற்கான அரசாங்கத்தின் செலவு குறையும் என அவர் இலங்கை மன்றக் கல்லூரியில் ஊடகவியலாளர்களை இன்று சந்தித்தபோது கூறினார்.
சிறைச்சாலை சீர்திருத்தம் பற்றி அமைச்சர் தொடர்ந்து கூறுகையில், வெலிக்கடை, கண்டி, காலி, மாத்தறை, யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களிலுள்ள சிறைச்சாலைகள் நகரங்களுக்கு அப்பாலுள்ள இடங்களுக்கு மாற்றப்படும். இங்கு கூட இட வசதியும் வேறு வசதிகளும் அமையும் என்றார்.
விளக்கமறியலில் உள்ளோர், சிறைத்தண்டனை பெற்றோர் வெவ்வேறாகப் பேணப்படுவர். பிள்ளைகளுடன் சிறையிலுள்ள பெண்களுக்காக கூடுதல் வசதியுள்ள சிறைச்சாலை அமைக்கப்படும்.
போதைவஸ்து தொடர்பான தண்டனை அனுபவிப்பவர்களுக்கு விசேட புனர்வாழ்வுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். 11000 பேருக்கான இடம் கொண்ட சிறைச்சாலையில் 27000 பேரை வைத்திருப்பதனால் பல துன்பங்கள் ஏற்படுகின்றன.
ஒரு கைதிக்கு ஒரு நாளைக்கு 261 ரூபாவை அரசாங்கம் செலவிடுகிறது. 500 ரூபாய் அல்லது 2000 ரூபாய் தண்டப்பணம் கட்டமுடியாமல் சிறைக்கு வந்தவர்களை சிறையில் வைத்து பராமரிப்பது அரசாங்கத்துக்கு பெரும் சுமையே.
எனவே 'சமூக சேவை' முறை குற்றவாளிக்கும் அரசாங்கத்துக்கும் பெருமளவு நன்மையை கொண்டு வரும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’