வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

ஆலய வாசலில் 'சுடவேண்டாம்' என எம்.பி.கத்தினார்:மகேஸ்வரன் கொலை வழக்கில் சாட்சியம்

லய வாசலில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டன. அப்போது சுடவேண்டாம் சுடவேண்டாம் என்று மகேஸ்வரன் எம்.பி. கத்தும் சத்தம் கேட்டது.
துப்பாக்கிச் சூட்டு சத்தத்தினை அடுத்து ஆலயத்திற்குள் இருந்த மக்கள் வெளியே ஓடினர்
.ஆலயத்தை விட்டு வெளியே வந்த நான் உள்ளே ஓடிச் சென்று பார்த்த போது இரத்தம் தோய் ந்த நிலையில் ஆலய வாசலில் மகேஸ்வரன் எம்.பி. விழுந்து கிடந்தார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தி. மகேஸ்வரன் படுகொலை வழக்கில் நேற்று சாட்சியமளித்த சோதிலிங்கம் தெரிவித்தார்.
மகேஸ்வரன் எம்.பி. படுகொலை வழக்கில் நேற்று கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஷ முன்னிலையில் விசாரிக்கப்பட்டது. இதன் போது மூன்று சாட்சிகள் சாட்சியமளித்தனர். சாட்சிகளை அரச சட்டவாதி குமாரரட்ணம் நெறிப்படுத்தினார். வழக்கின் எதிரியான ஜோன்ஸ்டன் கொலின் வெலண்டைன் சார்பில் ஆஜரான சட்டத்தரணி எஸ். ஜெயக்குமார் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்தார்.
இதன் போது சாட்சியமளித்த சோதிலிங்கம் மேலும் தெரிவிக்கையில் ; 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி கொழும்பு கொச்சிக்கடை பொன்னம்பல வானேஸ்வரர் ஆலயத்திற்கு காலை 6 மணியளவில் நான் சென்றேன். அங்கு இரண்டு மூன்று மணித்தியாலங்கள் வரை நான் நின்றிருப்பேன். ஆலயத்திற்குள் மகேஸ்வரன் எம்.பி. நின்றிருந்தார். அவர் அவரது கடைசிமகள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தருடனேயே அங்கு வந்திருந்தார். சிறுவயதிலிருந்தே அவரை நான் நன்கு அறிவேன். எமது ஊரைச் சேர்ந்தவரே அவர் ஆவார். ஆலயத்திற்கு அவர் வந்தால் சுற்றி கும்பிடுவது வழக்கமாகும். அதன் படி அன்றைய தினமும் அவர் ஆலயத்தைச் சுற்றி வந்தார்.
ஆலயத்தைச் சுற்றி அவர் வந்த போது நான் அவருக்கு முன்பாக வந்து வெளி வாசலை அடைந்தேன். அப்போது அவர் என்னிலிருந்து 20 அடி தூரத்தில் நின்றிருந்தார். நான் பிரதான வாசலால் வெளியே வந்த போது துப்பாக்கிச் சூட்டு சத்தங்கள் கேட்டன. சுட வேண்டாம் சுட வேண்டாம் என மகேஸ்வரன் எம்.பி. கத்தியது எனக்கு கேட்டது. ஆனால் அவர் யாருடையதாவது பெயரைச் சொல்லி கத்தினாரா என்பது எனக்கு தற்போது ஞாபகமில்லை .
துப்பாக்கிச் சூட்டு சத்தத்தை அடுத்து உள்ளிருந்த பக்தர்கள் முட்டிமோதிக்கொண்டு வெளியே வந்தனர். இதன் போது நானும் வெளியே வந்தேன். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது இரத்தம் தோய்ந்த நிலையில் மகேஸ்வரன் எம்.பி. கீழே விழுந்து கிடந்தார் என்று தெரிவித்தார்.

எதிரியின் சேட்டை அடையாளம் காட்டிய சாட்சி:

வழக்கு ஆரம்பிக்கப்பட்ட போது முதலாவது சாட்சியாக மகேஸ்வரன் எம்.பி. யின் பாதுகாப்பு உத்தியோகஸ்தராக கடமையாற்றிய சார்ஜன்ட் தர்மசிறி பெரேரா சாட்சியமளித்தார். இதன் போது வழக்கின் தடையப் பொருட்களாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள எதிரியான ஜோன்ஸன் கொலன் வெலண்டைன் சம்பவதினம் அணிந்திருந்ததாகத் தெரிவிக்கப்படும் சேட் சாட்சியிடம் காண்பிக்கப்பட்டது. இது எதிரி சம்பவதினம் அணிந்திருந்த சேட் தான் என்று சார்ஜன் தர்மசிறி பெரேரா அடையாளம் காட்டினார்.
இதேபோல் எதிரி மீது தனது ரிவோல்வரால் சுட்டதாகவும், இதனால் எதிரி காயமடைந்ததாகவும், தெரிவித்த தர்மசிறி பெரேரா தடயப் பொருளாக சமர்ப்பிக்கப்பட்ட தனது ரிவோல்வரையும் அடையாளம் காட்டினார்.
இங்கு சாட்சியமளித்த அவர் நான் கடமையின் போது ரிவோல்வரையே பாவித்து வந்தேன். அதில் ஒரே தடவையில் ஆறு ரவைகளைப் போட்டு சுட முடியும். சம்பவதினம் நான் 15 தடவைகள் வரை எனது துப்பாக்கியால் சுட்டிருப்பேன். எனது ரிவோல்வரினால் சுட்ட குண்டின் காரணமாகவே எதிரி காயமடைந்தார் என்று தெரிவித்தார். இந்த சாட்சியை குறுக்கு விசாரணை செய்த எதிரி தரப்பு சட்டத்தரணி எஸ். ஜெயக்குமார், கடந்த தவணை தான் சாட்சியமளித்த போது உங்களது துப்பாக்கிக் குண்டு பட்டு எதிரி காயமடைந்தாரா என்பது குறித்து தெரியாது என தெரிவித்துள்ளீர்கள். தற்போது உங்களது ரிவோல்வர் குண்டினாலேயே எதிரி காயமடைந்ததாக பொய் சாட்சியம் கூறுகின்றீர்கள் என்று தெரிவித்தார். இதற்கு பதிலளித்த சாட்சி இல்லை எனது ரிவோல்வர் குண்டினாலேயே எதிரி காயமடைந்தார் என்று தெரிவித்தார்.
எதிரி எந்த ஆயுதத்தினால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டார் என்பதனை நான் காணவில்லை. ஆனால் எனது துப்பாக்கிச்சூட்டில் அவர் கையில் காயமடைந்திருந்ததை நான் கண்டேன் என்றும் அவர் தெரிவித்தார்.

கடை ஊழியர் சாட்சியம்;

வழக்கில் கொட்டாஞ்சேனை சங்கமித்த மாவத்தையில் அமைந்துள்ள ஹோட்டலில் பணிபுரியும் நவரட்ணம் தினேஷ் சுபராஜா என்பவரும் சாட்சியமளித்தார். இவர் தனது சாட்சியத்தின் போது 10 வருடங்களாக நான் கொழும்பில் தங்கியிருக்கிறேன். 2008 ஜனவரி மாதம் முதலாம் திகதி நான் சங்கமித்த மாவத்தையிலுள்ள ஹோட்டலில் பணியாற்றி வந்தேன். சம்பவதினம் 8 மணிக்கும் 9.30 மணிக்கும் இடையில் எமது கடைக்கு முன்னால் ஒருவர் விழுந்து கிடப்பதாக தெரிவித்தனர். அவருக்கு நீர் வழங்குமாறு சிலர் கூறினர். நான் தண்ணீர் எடுத்துக் கொண்டு அங்கு சென்ற போது சேட்டும், டவுசரும் அணிந்த ஒருவர் கீழே விழுந்திருந்தார். அவரது முகத்தில் ஒருபக்கத்தில் இரத்தம் காணப்பட்டது. அவர் அணிந்திருந்த சேட்டின் நிறம் எனக்கு ஞாபகமில்லை.
அப்போது அவ்வழியால் பொலிஸ் ஜீப் ஒன்று வந்தது. மக்கள் அந்த இடத்தில் கூடி நின்றமையினால் என்ன நடந்தது என பொலிஸார் கேட்டனர். நாம் ஒருவர் விழுந்து கிடக்கின்றார் எனக் கூறியபோது அனைவரையும் விலகிச் செல்லுமாறு பொலிஸார் தெரிவித்தனர். அப்போது முச்சக்கர வண்டியில் வந்த இருவர் விழுந்து கிடப்பவர் நன்கு தெரிந்தவர் எனக் கூறி ஆட்டோவில் அவரை ஏற்றிச் சென்றனர்.
கோவிலில் அமைச்சர் ஒருவருக்கு வெடி வைத்து விட்டனர் என்று பின்னர் சிலர் அவ்விடத்தில் பேசிக் கொண்டனர். எமது கடைக்கு முன்னால் விழுந்திருந்தவரை அப்போது நான் அடையாளம் காணவில்லை.

நீதிபதி கேள்வி:

விழுந்து கிடந்ததாகத் தெரிவிக்கும் நபர் இந்த நீதிமன்றத்தில் எங்காவது இருக்கின்றாரா?
சாட்சி: எதிரிக்கூண்டில் இருந்த எதிரியைக் காண்பித்து இவர்தான் அவர் என தெரிவித்தார்.
நீதிபதி கேள்வி: அவர் அணிந்திருந்த சேட்டின் நிறம் தெரியுமா?

சாட்சி: அரைக்கட்டை கையுடைய சேட்டே அணிந்திருந்தார்.

சம்பவம் இடம் பெற்று ஓரிரு தினங்களில் குற்றப்புலனாய்வுப் பொலிஸார் என்னிடம் விசாரணை நடத்தினர். கடைக்கு முன்னால் விழுந்திருந்த இளைஞனை அடையாளம் காட்ட முடியுமா எனக் கேட்டனர். இதனையடுத்து குற்றப்புலனாய்வுப் பொலிஸ் தலைமையகத்திற்கு சென்ற நான் அங்கு வாக்கு மூலம் அளித்ததுடன் எதிரியையும் அடையாளம் காட்டினேன்.

அத்துடன் விழுந்து கிடந்த நபரை ஆட்டோவில் ஏற்றிச் சென்ற மற்றொருவரையும் நான் அங்கு அடையாளம் காட்டினேன் என்று தெரிவித்தார். இந்த சாட்சியங்களை அடுத்து வழக்கு விசாரணையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். நேற்றைய வழக்கு விசாரணையின் போது சாட்சிகளான தியாகராஜா பரமேஸ்வரன், தியாகராஜா துவாரகேஸ்வரன், ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’