வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 23 ஜூன், 2010

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பம்

கோவையில் 5 நாட்கள் நடைபெறும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை, குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் இன்று தொடங்கி வைத்தார்.
முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் இம்மாநாடு இன்று காலை 10.30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் மைய நோக்க பாடலுடன் தொடங்கியது.
அதைத் தொடர்ந்து, துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்புரையாற்றினார். பின்னர், தமிழக சுர்ஜித்சிங் பர்னாலா மாநாட்டு சிறப்பு மலரை வெளியிட்டார்.
சிவதம்பி வேண்டுகோள்...
இந்நிகழ்ச்சியில் முதலில் வாழ்த்துரை வழங்கிய அமெரிக்காவை சேர்ந்த பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட், மகாகவி பாரதியார், பாரதிதாசன் கவிதைகளையும், புறநானூறு பாடல்களையும் இருந்து மேற்கோள்காட்டி வாழ்த்திப் பேசினார்.
தமிழ்ச் செம்மொழியில் சிறப்பினை தனது வாழ்த்துரையில் குறிப்பிட்ட முனைவர் வா.செ.குழந்தைசாமி, "தமிழ் ஆராய்ச்சிக்கென நோபல் பரிசு இருந்தால் அது, பேராசிரியர் ஜார்ஜ் ஹார்டுக்கும், அஸ்கோ பர்போலாவுக்கும் வழங்கப்பட்டிருக்கும். அந்த அளவுக்கு அவர்களின் பங்களிப்பு தமிழுக்கு உண்டு.  'கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதே' தமிழ்  நோபலுக்கு நிகரானது என்பதை இங்கே உறுதியாக கூறுகிறேன்.
இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர் கா.சிவதம்பி வாழ்த்திப் பேசுகையில், "முதல்வர் கருணாநிதி தமிழ் மொழியில் பன்முக ஆற்றல் கொண்டவர். அவரது காலத்தில் நடக்கும்  இம்மாநாடு சிறப்பானது. தமிழின் பெருமைகளை முழுமையாக அறிந்து உணர்ந்தவர்.
தமிழ் மொழி உலகின் தொன்மையான மொழி; வளமையான மொழி; மதச் சார்பற்ற, சமயச் சார்பற்ற ஒரே மொழி உலகில் தமிழ் மட்டும் தான். உலக மொழிகள் வேறு எதற்கும் இந்த பெருமை கிடையாது.
இந்தியாவின் இலக்கிய, கலாச்சார மரபுகளையும், இன்றைய கணினியுக சொல்லாட்சியையும் பெற்ற ஓரே மொழி தமிழ் மொழி மட்டுமே. இத்தகு தமிழ் மொழியின் பெருமை உலக மக்களுக்குத் தெரிய வேண்டும். உலகம் அறிய வேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெற்றுள்ள நாட்டு மக்கள் அனைவரும் தமிழின் பெருமைகளை அறியும் வகையில் உலக மொழிகளில் தமிழின் மாண்பை விளக்கும் ஒரு சிறப்பான புத்தகம் எழுதப்பட வேண்டும். அப்புத்தகம் எல்லா உலகமொழிகளிலும் பதிப்பிக்கப்பட்டு, உலக மக்களைச் சென்றடைய வேண்டும். இப்பணியை முதல்வர் கருணாநிதி முன்னெடுத்துச் செய்ய வேண்டும்," என்றார் சிவதம்பி.
அதைத் தொடர்ந்து, நிதியமைச்சர் அன்பழகன் தகுதியுரை ஆற்றினார். அப்போது, பேராசிரியர் அஸ்கோ பர்போலாவின் தமிழ்த் தொண்டினை விவரித்தார்.
அஸ்கோ பர்போலாவுக்கு விருது...
இந்நிகழ்ச்சியில், பின்லாந்து நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்போலாவுக்கு 'கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது' வழங்கப்பட்டது. அவர் ஏற்புரையாற்றினார்.
அஸ்கோ பர்போலா தனது ஆராய்ச்சி மூலம், சிந்து சமவெளி நாகரிகத்தையும் அங்கு கிடைத்துள்ள எழுத்து வடிவங்களையும் ஆராய்ந்து, அவை திராவிட நாகரிகத்தைச் சேர்ந்தவை என்று தெளிவுபடுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆளுனர் சுர்ஜித்சிங் பர்னாலா சிறப்புரையாற்றிய பிறகு, முதலமைச்சர் கருணாநிதி மாநாட்டு தலைமையுரையாற்றினார்.
 உலக முதல் தாய்மொழி தமிழே : கருணாநிதி பெருமிதம்
இந்நிகழ்ச்சியில் மாநாட்டுத் தலைமையுரையாற்றிய முதல்வர் கருணாநிதி, தமிழ் மொழியின் வரலாறு மற்றும் தமிழ், செம்மொழியாக அறிவிக்கப்பட்டதன் பின்னணியையும் விரிவாக விளக்கினார்.
அவர் தனது தலைமையுரையில், "இதுவரை உலகத் தமிழ் மாநாடு என்ற பெயரில் எட்டு மாநாடுகள் நடைபெற்றிருக்கின்றன. முன்னர் நடந்த எட்டு மாநாடுகளுக்கும், இப்பொழுது  நடைபெறுகிற இந்த மாநாட்டுக்கும் வேறுபாடு உண்டு. முன்னர் நடந்தவை உலகத் தமிழ்  மாநாடுகள். இப்பொழுது நடைபெறுவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு.

உலக மொழிகளில் மிகத் தொன்மைக் காலம் முதலே இயல், இசை, கூத்து எனும் முத்தமிழ், வளர்ச்சியை எய்தியதால், தமிழ் நிலையான தன்மையை அடைந்தது. இலக்கியம் தழுவிய கலை வளர்ச்சி, தமிழுக்கு நிலைத்து நிற்கும் ஆற்றலைத் தந்திருப்பதால், தமிழை உலகத் தாய்மொழி என அறியலாம்.

கி.மு. 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அரசனாகிய சாலமனுக்கு தமிழகக் கப்பல்கள் மயில் தோகையையும், யானைத்தந்தத் தையும், வாசனைப் பொருள்களையும் கொண்டு சென்றன. வடமொழியில் வேதங்களில் இருபதுக்கும் மேற் பட்ட தமிழ்ச் சொற்கள் இருப்பதை ஆய்வறிஞர் கால்டுவெல் கண்டுபிடித்து அறிவித்தார்.

பேரறிஞர்களான ஜான் மார்ஷல், ஈராஸ் அடிகள், சர் மார்டிமர் வீலர், கமில் சுவலபில் போன்றோர் திராவிடர்களே சிந்துவெளி நாகரிகத் தோற்றத்தின் உரிமையாளர்கள் எனவும், அவர்களின் மொழி திராவிடமொழிதான் எனவும் உறுதிபடுத்தியிருக்கின்றனர்.

இன்று 'கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது' பெறும் பின்லாந்து நாட்டுப் பேரா சிரியர் அஸ்கோ பர்ப்போலா- சிந்துவெளிப்பண் பாடும், அதன் எழுத்தும் திராவிடக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்னும் கருதுகோளை ஆய்வுச் சான்றுகளோடு முன் வைத்து, அத்துறையில் தொடர்ந்து அரும்பணி யாற்றி வருகிறார். சிந்து வெளியினர் திராவிட மொழி பேசுபவர்களே என்பதற்கான தகுந்த ஆதாரங்களை அவர் விரிவாகக் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டிற்கு வட மேற்கிலிருந்து வந்த அராபிய வாணிகரும், யவனர்களும், சேரநாட்டின் முசிறித் துறைமுகத்திற்கு வந்து வாணிகம் செய்தனர். இத்தகைய வாணிகத் தின் மூலமாகவும் பல்வேறு மொழிகளின் தொடர் புகளின் காரணமாகவும் தமிழ், உலக நாடுகளில் எல்லாம் அறியப்பட்ட மொழியாற்று. அதன் தொன்மையாலும், தனித்தன்மையாலும், முதன்மைச் சிறப்பினாலும், தமிழ் உலக முதல் தாய் மொழியாக - உலகத் தமிழாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது." என்றார் முதல்வர் கருணாநிதி.
தமிழ்மொழி வரலாற்றால் இந்தியாவுக்கே பெருமை : பிரதிபா பாட்டீல்
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை தொடங்கிவைத்து துவக்கவுரையாற்றிய குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், "உலக தமிழ்ச் செம்மொழி மாநாட்டை துவக்கி வைப்பதில் மகிழ்வடைகிறேன். இந்த மாநாடு சிறப்பாக நடைபெற மனதார வாழ்த்துகிறேன். மிகச் சிறந்த கலாசாரத்தைக் கொண்ட தமிழ்ச் செம்மொழியானதையொட்டி, முதல்வர் கருணாநிதி மாபெரும் மாநாட்டை சிறந்த முறையில் நடத்தி வருவதற்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பிரசாரத்தை சென்னையில் தான் துவக்கினேன். இப்போது இங்கே மாநாட்டை துவக்கி வைத்திருக்கிறேன். தமிழ்நாட்டுடனான எனது உறவு தொடர்வதை உணர்கிறேன்.
நாட்டின் வளர்ச்சிக்கும் பண்பாட்டுக்கும் தமிழ்நாட்டின் பங்கு மகத்தானது. பல்வேறு துறைகளிலும் தமிழ் மக்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
"திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" என்று தமிழில் ஒரு பொன்மொழி உண்டு. இந்த உத்வேகமே தமிழ் மக்களை வெகுவாக வெற்றி அடைய வைத்திருக்கிறது.
தமிழ் மொழியின் வரலாறு, இந்தியாவுக்கு பெருமை தரவல்லது. தேசிய ஒருமைப்பாட்டுக்கு தமிழகமே எடுத்துக்காட்டு. எல்லா மத மக்களும் ஒற்றுமையாக வாழ்வதை இங்கே பார்க்கிறேன். தமிழ் மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். முதல்வர் கருணாநிதிக்கு பாராட்டுகள்," என்றார் பிரதிபா பாட்டீல்.
இறுதியில் தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி நன்றி கூறினார்.
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் அமெரிக்கா, கனடா, மலேசியா, இலங்கை, சிங்கப்பூர், இத்தாலி, மொரீஷியஸ், நெதர்லாந்து உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இனியவை நாற்பது...
மாநாட்டு தொடக்க விழாவுக்குப் பிறகு இன்று மாலை 4.30 மணிக்கு 'இனியவை நாற்பது' என்ற தலைப்பில் பிரமாண்டமான பேரணி நடக்கிறது. இதில் தமிழ் இலக்கியம், கலை வரலாறு, பண்பாட்டை நினைவூட்டும் வகையில் அலங்கார வாகனங்களின் அணிவகுப்பு நடக்கிறது. மேலும், தமிழ்நாட்டின் கிராமப்புற கலைகளை நினைவூட்டும் விதத்தில் கிராமிய கலைஞர்களும் பேரணியில் பங்கேற்கிறார்கள். இந்த பேரணியில் பள்ளி, கல்லூரி மாணவிகளும் கலந்துகொள்கிறார்கள். இப்பேரணி வ.உ.சி மைதானத்தில் தொடங்கி மாநாடு நடைபெறும் கொடிசியா அரங்கத்தை சென்றடைகிறது.
பலத்த பாதுகாப்பு...
இம்மாநாட்டையொட்டி கோவை மாநகரம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. போலீஸ் டி.ஜி.பி. லத்திகா சரண் தலைமையில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மாநாட்டு பாதுகாப்பு பணிக்காக கோவை மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த 11 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநாட்டு பந்தல் வளாகத்தில் அதிநவீன கேமராக்கள் பொருத்திய ராட்சத பலூன் மற்றும் குட்டி விமானங்கள் பறக்கவிடப்பட்டுள்ளன. பாதுகாப்பு நடவடிக்கைகளை போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து போலீஸ் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். மேலும் மாநாட்டு வளாகத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்தும் கண்காணிக்கப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’