இலங்கை அதிபர் ராஜபக்ஷே இந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
இப்போராட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்பட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே 3 நாள் சுற்றுப் பயணமாக இன்று இந்தியா வருகிறார். இந்தியாவுடன் ஒருங்கிணைந்த கூட்டு பொருளாதார ஒப்பந்தம் ஒன்றை செய்து கொள்ள இலங்கை விரும்புகிறது. இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தவுள்ளார். அவருடன் ஓர் உயர்மட்ட குழுவும் இலங்கையில் இருந்து வருகிறது.
இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு பணிகள், உலக மற்றும் மண்டல விவகாரங்கள் உள்பட இரு நாட்டு நல்லுறவு பிரச்னைகள் குறித்தும் அவர் ஆலோசனை நடத்துவார் எனத் தெரிகிறது. ஐக்கிய ஜனநாயக முன்னேற்ற கூட்டணி தலைவர் சோனியா காந்தியையும் அவர் சந்தித்து பேசுவார் என்று தெரிகிறது.
இந்நிலையில், 'கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான உதவிகளை இந்தியாவிடம் இருந்து பெற்று, இலங்கை போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு சரியான நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவில்லை; இலங்கை தமிழர்களை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தவில்லை என்று குற்றம்சாட்டி, தமிழ்நாட்டில் பல்வேறு கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
தலைவர்கள் கைது...
சென்னையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கைது செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மயிலாப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பழ.நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலர் நல்லகண்ணு, மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான், நடிகர் டி.ராஜேந்தர் உள்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கை தூதரகம் நோக்கி பல்வேறு கட்சியினர் பேரணி நடத்த முற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டம் வலுவானது...
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ராஜபக்ஷேவின் கொடும்பாவி எரிக்கப்பட்டும், அவரது வருகைக்கு எதிராக கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. திருப்பூரில் ராஜபக்ஷேவின் உருவ பொம்மையை எரித்த சிவசேனா கட்சியை சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டனர். அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ம.தி.மு.க.வினர் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவையில் ரயில் மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் பேர் கைது செய்யப்பட்டனர். நாகர்கோவில் ராஜபக்ஷேஉருவ பொம்மையை எரித்த அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் பேரணி செல்ல முயன்ற புதிய தமிழகம் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். ஓசூரில் ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல் நாமக்கல், மயிலாடுதுறை, சிவகங்கை, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. மாநிலம் முழுவதும் ஆங்காங்கே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’