கடந்த கால மோதல்களுக்கான அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து அந்தக் காரணிகளின் அடிப்படையில் தீர்வுகாண்பதன் மூலமே நல்லிணக்கத்தையும் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையையும் ஏற்படுத்த முடியுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற முன்னாள் கல்வி அமைச்சர் ரிச்சட் பத்திரண மீதான அனுதாப பிரேரணையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த சம்பந்தன் மேலும் கூறியதாவது;உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழு அமைப்பது தொடர்பாக பல்வேறு பேச்சுகள் அடிபடுகின்றன. இதன் மூலம் கடந்த கால மோதல்களுக்கான காரணங்கள் கண்டறியப்படவுள்ளதாகவும் கேள்விப்படுகின்றோம்.
நல்லிணக்க ஆணைக் குழு விசாரணைகளை செய்வதாகவிருந்தால் மோதல்கள் ஏற்பட்டதற்கான காரணம், அதன் விளைவுகள் என்ன, என்ன விதமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன, அதற்குரிய தீர்வுகள் என்னவென்பது தொடர்பில் பக்கச்சார்பற்ற விதத்திலும் நீதியாகவும் சுதந்திரமாகவும் விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மை நிலை அறியப்படவேண்டும்.மோதலுக்கான அடிப்படைக் காரணங்களை அறிந்து அதன் அடிப்படையிலேயே தீர்வு காணப்படவேண்டும்.
மக்களின் கௌரவம் மீண்டும் நிலைநாட்டப்பட வேண்டும். தமக்கு உரித்துடைய உரிமைகள், ஆட்சியதிகாரம், நல்லிணக்கம் என்பதைத்தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஜனநாயக ரீதியில் தீர்வுகாணப்பட வேண்டும். நல்லிணக்க ஆணைக்குழு செய்ய வேண்டிய பல பணிகள் இருக்கின்றன.
அப்பட்டமான மனித உரிமை மீறல்கள், யுத்தக்குற்ற விசாரணைகள் என பல விடயங்கள் இருக்கின்றன. இவை தொடர்பில் ஊடகங்களில் பல்வேறு கருத்துகள், கட்டுரைகள், செய்திகள் வெளிவந்துள்ளன. இவ்வாறான விடயங்கள் உண்மைகளைக் கண்டறியும் நல்லிணக்க ஆணைக்குழு முன் கொண்டுவரப்பட்டு விசாரணைகளுக்குட்படுத்தப்படல் வேண்டும்.
தற்போதைய இந்தச் சூழ்நிலையில் முன்னாள் கல்வி அமைச்சர் அமரர் ரிச்சட் பத்திரண இருந்திருந்தால் எவ்வளவு சிறப்பானதாக இருந்திருக்கும். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் ஆட்சிக்காலத்தில் அரசியலமைப்பு மாற்றங்கள் தொடர்பில் அவர் பல முன்மொழிவுகளை வழங்கியிருந்தார்.
மத்தியில் இருக்கின்ற அதிகாரங்கள் பிராந்தியங்களுக்குப் பகிரப்பட வேண்டும். சட்டம், ஒழுங்கு,காணி மற்றும் கல்வி உள்ளிட்ட விடயங்களில் அதிகாரம் பகிரப்பட வேண்டுமென்ற முற்போக்குச் சிந்தனை கொண்டவர் ரிச்சட் பத்திரண.
இதேநிலைப்பாட்டை அப்போது அமைச்சராகவும் பின்னர் பிரதமராகவுமிருந்த தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் ஏற்றுக்கொண்டிருந்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இம்முன்மொழிவுகள் வெற்றிபெறவில்லை.
1970,1980,1990 களின் காலப் பகுதிகளில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசியல் ரீதியாக தப்பிப் பிழைப்பதற்காகவும் தனது இருப்பிற்காகவும் போராடியபோது அதற்கு தூணாக செயற்பட்டவர் ரிச்சட் பத்திரண.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க தென் மாகாணத்தில் ஆட்சியைப் பிடித்து அதன் மூலம் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சிக்குள் இலங்கையைக் கொண்டுவர பெரும்பங்காற்றியவர் அமரர் ரிச்சட் பத்திரண.
பழகுவதற்கு இனிமையானவர், ஏனையோருக்கு உதவிக்கரம் நீட்டத் தயங்காதவர். அனைவருடனும் நட்புறவுடன் பழகக்கூடியவர் ரிச்சட் பத்திரண. தற்போதைய நிலையில் அவர் இல்லாதிருப்பது உண்மையில் எமக்கெல்லாம் பேரிழப்பாகும்.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’