இலங்கைக்கு ஜி.எஸ்.பி. வரிச்சலுகையை வழங்க நிபந் தனைகள் அடங்கிய பட்டியல் ஒன்றை அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கவில்லை என்று இலங்கைக்கும் மாலை தீவுக்குமான ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு தெரிவித்துள்ளது.
இந்த முக்கியமான வரிச்சலுகைகளை தொடர்ந்தும் அனுபவிப்பது பற்றிய பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக அரசாங்க தூதுக்குழு ஒன்று இந்த மாத பிற்பகுதியில் பிரஸல்ஸில் உள்ள ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைமைக் காரியாலயத்திற்குச் செல்லவிருக்கிறது.
இம்மாதம் 20ஆம் 21ஆம் திகதிகளில் நடைபெறவிருக்கும் இப்பேச்சுவார்த்தைகளில், வரிச்சலுகைகளைப் பெறுவதற்கு இலங்கைக்கு இருக்க வேண்டிய தகைமை குறித்து ஆணைக்குழு 2009ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிட்ட இறுதி அறிக்கையில் முக்கியமாக குறிப்பிடப்பட்டிருந்த விடயங்கள் பற்றி ஆராயப்படும் என்று கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பினருக்குமிடையே தொடர்ந்து நடைபெற்றுவரும் கலந்துரையாடலின் ஓர் அம்சமாகவே இம்மாத இறுதியில் நடைபெற இருக்கும் பேச்சுவார்த்தைகள் அமையும் என்றும் இவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
அதேவேளை, இந்த விவகாரம் தொடர்பாக, இலங்கை அரசாங்கத்திற்கு நிபந்தனைகள் அடங்கிய பட்டியல் எதுவும் அனுப்பி வைக்கப்படவில்லை என்பதை முக்கியமாக குறிப்பிட விரும்புவதாக இலங்கை ஜனநாயக சோஷலிஸ குடியரசுக்கும் மாலைதீவுக்குமான ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு தெரிவித்துள்ளது.
அதேவேளை, ஜி.எஸ்.பி பிளஸ் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ள சிபாரிசுகள் மறுமதிப்பீடு செய்யப்படுவது எந்தவொரு தனி விடயத்திலும் தங்கியிருக்கவில்லை என்றும் தூதுக்குழு வலியுறுத்திக் கூறியுள்ளது.
மேலும், இலங்கையின் நீதிச் சேவை நடைமுறைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் வைத்திருக்கும் மரியாதை பற்றி வலியுறுத்திக் கூறிய தூதுக்குழு, இந்த நிலையில் எத்தகையதொரு நீதிச் சேவை விசாரணை குறித்தும் கருத்து தெரிவிப்பது ஒன்றியத்திற்குப் பொருத்தமற்றது என்றும் குறிப்பிட்டுள்ளது
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’