வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 14 மே, 2010

தாய்லாந்தில் 5 பேர் பலி



தாய்லாந்தின் தலைநகர் பாங்காக் நகரின் மையப்பகுதியில் இருந்தபடி கடந்த இரண்டு மாதகாலமாக அரசுக்கு எதிராக போராடிவரும் போராட்டக்காரர்களிடமிருந்து அந்தப் பகுதியை மீட்பதற்காக ராணுவத்தினர் கடுமையாக போராடிவருகிறார்கள்.
அந்த பகுதியில் வெடிச்சத்தங்களும் துப்பாக்கிச்சூட்டு சத்தங்களும் தொடர்ந்து கேட்டுவருகின்றன.
செஞ்சட்டைக்காரர்கள் என்று அழைக்கப்படும் போராட்டக்காரர்கள் அங்கே இருந்த பேருந்துக்கு தீவைத்தனர். தங்களை நோக்கி முன்னேறிவரும் ராணுவத்தினரை தடுப்பதற்காக மற்ற வாகனங்களுக்கும் அவர்கள் தீவைத்தனர்.
ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதோடு, கண்ணீர்ப் புகை குண்டுகளையும் வீசினார்கள்.
போராட்டம் நடத்துபவர்களில் சிலர் ஆயுதங்களை வைத்திருந்ததாகவும், அவர்களிடமிருந்து ராணுவத்தினர் தங்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டதாகவும் அரசாங்கத்தின் சார்பில் பேசவல்லவர் தெரிவித்தார்.
தற்போதைய மோதல்களில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இரண்டு மாதகாலமாக போராட்டக்காரகளிடம் இருக்கும் நகரின் மையப் பகுதியை மீட்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. ஆனால் போராட்டக்காரர்களோ பிரதமர் அபிஷித் வெஜெஜிவா நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.
இந்தப் போராட்டக்காரர்கள், நாடு கடந்து வாழும் முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷெனவத்ரவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர பாடுபடும் கொள்கையற்ற அரசியல் கூட்டாளிகள் என்று அரசாங்கம் கூறுகிறது.
இந்த செஞ்சட்டைக்காரர்களுக்கும் மீண்டும் தாய்லாந்தை ஆளவிரும்பும் தக்ஷின் ஷெனவத்ரவுக்குமான தொடர்புகள் மறுக்க முடியாதது என்றாலும், இந்தப் போராட்டம் என்பது அந்த வட்டத்தை தாண்டி விரிவடைந்து வருவதுபோல் தோன்றுகிறது.
முக்கியமாக, நாட்டின் கிராப்புற மக்கள், அதிலும் குறிப்பாக வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதி மக்களின் விரக்திக்கு இந்த போராட்டம் ஒரு வடிகாலாக மாறிவருகிறது. இவர்களோடு கூட நகர்ப்புற ஏழைகளும் இந்த செஞ்சட்டைக்காரர்களுக்கு ஆதரவாக திரண்டிருக்கிறார்கள். இடதுசாரி அறிவு ஜீவிகளும், ராணுவம் மற்றும் காவல்துறையின் ஒரு பகுதியும் கூட இந்த போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக மாறியிருக்கிறார்கள்.
சர்ச்சைக்குரிய செல்வந்த சீமானான தக்ஷின் போன்ற ஒருவரை இவர்கள் ஏழை பங்காளன் என்று முன்னிறுத்துவதை அரசாங்கத்தில் இருப்பவர்களால் நம்பமுடியவில்லை.
தாய்லாந்து படையினர்
தாய்லாந்து படையினர்
ஆனால் தக்ஷினை பொறுத்தவரை, அவர் சுயமாக முன்னேறிய ஒருவர். அதுமட்டுமல்லாமல் முழுக்க முழுக்க தாய்லாந்துக்காரர் என்றில்லாமல் ஒரு பாதி சீன வம்சாவளியிலிருந்து வரும் ஒரு வெளியாள் என்பதால், அவரோடு ஏழைபாழைகள் தங்களை இணைத்துப் பார்த்துக்கொள்வது எளிதாக இருக்கிறது.
அவர் ஆட்சியில் இருந்தபோது கிராமப்புற ஏழைகள் பயன்பெறத்தக்க வகையில் மருத்துவ வசதிகளை ஏற்படுத்தினார். அத்துடன் கல்வி கற்பதற்கான வசதி  வாய்ப்புக்களும், வாகன வசதிகளும் மற்ற பல வசதிகளையும் அவர் கிராமங்களில் அதிகப்படுத்தினார்.
இப்படியான புதிதாக கிடைத்த வசதி வாய்ப்புக்களை அனுபவித்து பழகிய கிராமப்புறத்து ஏழைகள், அரசியலில் தங்களுக்கு கிடைத்த புதிய வாய்ப்பை தற்போது பயன்படுத்தி தங்களின் இருப்பை வலியுறுத்துவதன் ஒரு வெளிப்பாடாகவும் இந்த போராட்டம் பார்க்கப்படுகிறது.
செஞ்சட்டைக்காரர்களின் பார்வையில் தற்போதைய தாய்லாந்து ஆட்சி என்பது அந்த நாட்டின் பாரம்பரிய ஆளும் வர்க்கங்களான, பெருந்தனக்காரர்கள், ராணுவம் மற்றும் நீதிபதிகளின் கூட்டணி. அதை முடிவுக்கு கொண்டு வருவது தான் தங்களுக்கு நல்லது என்பது இவர்களின் கருத்து.
பழைய தாய்லாந்து என்பது இரக்க குணம் நிறைந்த, ஆணாதிக்க பழமைவாத நாடு. அதில் யார் யாருக்கு என்ன இடம் என்பதை அனைவரும் உணர்ந்திருந்தார்கள். ஆனால் சமூகத்தில் ஏற்பட்டு வரும் நவீன மாற்றங்கள் இந்த சமூக கட்டமைப்பை தலைகீழாக மாற்றிப் போட்டிருக்கிறது. இந்த மாற்றமானது பெருகிவரும் சமூக பிளவுகளை மேலும் கூர்மைப்படுத்தியுள்ளது என்பதோடு, நாட்டின் எதிர்கால வளர்ச்சியையும் பாதிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’