-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
சனி, 17 ஏப்ரல், 2010
1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்……
நடந்த வன்கொடுமைகள்! (பகுதி 24)
(கிறேசியன், நாவாந்துறை)
தொடர்ந்து கேள்வி கேட்டால் இவர்கள் பதில் சொல்வார்கள் என்று நினைத்துக் கொண்டு நடராஜ் அவர்கள் விடாமல் கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருந்தார். நாங்கள் இருந்த வீட்டின் ஹோலின் வாசலில் நடராஜ் அவர்களை இருக்கும்படி பணித்திருந்தனர். அவர் வாசலில் இருக்கும் போது எந்தப் புலி விலங்கு உள்ளே வந்தாலும் முதலில் அவரைத்தான் அடிப்பார்கள். அனைவருக்கும் அடித்து முடித்துவிட்டு வெளியில் செல்லும் போது மீண்டும் அவரை அடித்துவிட்டுத்தான் செல்வார்கள்.
எதற்காக அவரை மட்டும் திரும்பத் திரும்ப அடிக்கின்றனர் என்று பார்த்தால், அவர் ஒருவர்தான் எதிர்த்துக் கேள்வி கேட்பவர், அதிலும் தூசண வார்த்தைகளைப் பேசிக் கேள்வி கேட்பவர். தூசண வார்த்தைகளைப் பேசும் உரிமை புலி விலங்குகளுக்கு உண்டு என்று புலிகள் நினைத்துள்ளனர் போலும். அதனால் நடராஜ் அவர்களின் ஏச்சுகள், அவர்களது உரிமை மீது ஆதிக்கம் செலுத்துவதாகக் கண்டு வரும்போதெல்லாம் அவரைத் தாக்கினர்.
புதிதாக வந்தவர்களில் யோன்சனும் ஒருவர். இவர் ஈ.என்.டி.எல்.எப். இயக்கத்தைச் சேர்ந்தவர். யாழ்ப்பாணம் சென்மேரீஸ் வீதியைச் சேர்ந்தவர். சிறந்த உதைப்பந்தாட்ட வீரர். இவரை முன்னரே பிடித்து பிறிதொரு முகாமில் வைத்து சித்திரவதை செய்துள்ளனர். இதனால் இவரது இருகைகளும் செயலிழந்து இருந்தன. இரண்டு கைவிரல்களையும் மேசை மீது வைத்து அதன் மீது கட்டைகளால் அடித்துள்ளனர். இதனால் விரல்கள் அனைத்திலும் உடைவுகள் ஏற்பட்டு அவற்றினை மடக்க முடியாமலும், பயன்படுத்த முடியாமலும் அவதிப்பட்டு வந்தார். காலைக்கடன் கழித்து அதை சுத்தம் செய்ய முடியாமல் அவதிப்பட்டார். அவருடன் செல்பவர்கள்தான் அந்தப்பணியைச் செய்து விட்டனர்.
வழங்கப்படும் உணவை அவரால் எடுத்து உண்ண முடியாது. எனக்கு சந்தர்பம் கிடைக்கும் போதெல்லாம் உணவைக் குழைத்து அவரது கைகளில் வைப்பேன் அவர் அதனை உண்ணுவார். ஏனைய நேரங்களில் மற்றவர்கள் இப்பணியைச் செய்துவிடுவர்.
என்னிடம் என்னக் கேள்வி கேட்டனரோ அதே கேள்வியைத்தான் இங்கிருக்கும் அனைவரிடத்திலும் கேட்டு விசாரிப்பார்களாம். ஜோன்சனிடமும் இதே கேள்விகள்தான் கேட்கப்பட்டனவென்று அவர் சொன்னார்! ஓங்கொம்மாவை கூட்டிக்குடுத்தியா? கொக்காவைக் கூட்டிக் குடுத்தியா? ஆயுதங்கள் எங்கே வைத்திருக்கிறாய்? அடிதாங்க முடியாமல் அனைத்தையும் ஏற்றுக் கொள்வாராம் ஜோன்சன். அடித்து முடிந்ததும், ஆ, சொல்லு சொல்லு என்று கேட்டார்களாம் புலிகள். என்னத்தைச் சொல்கிறது! ஏதும் இருந்தால்தானே சொல்வதற்கு என்று ஜோன்சன் கேட்பாராம். என்னடா சொல்கிறாய் என்று மீண்டும் அடிப்பார்களாம் விலங்குகள்.
அடியின் வலியால் செய்யாததைக் கூட செய்தேன் என்று சொல்வார்களா, என்று நான் ஆச்சரியப்பட்டேன்! எனக்கும் இந்த நிலை ஏற்படும் என்று நான் அப்போது அறிந்திருக்கவில்லை! ஜோன்சன் சில மாதங்களில் காந்தியின் இறச்சிக்கடைக்கு அனுப்பப்பட்டார். அங்கும் சில மாதங்கள் சித்திரவதையை அனுபவித்த அவர், தன் உறவினரது தொல்லையால் புலி விலங்குகள் அவரை விடுவித்தனர். அவர் இப்போது ஐரோப்பாவில் இருக்கிறார் என்று அறிந்து மகிழ்ந்தேன். ஏனெனில் இறச்சிக் கடைக்குச் சென்ற யாரும் உயிருடன் வெளியில் வந்தது இல்லை என்று பலரும் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படி வெளியில் வந்தவர்களில் ஜோன்சனும் ஒருவர். ஜோன்சன் அவரது கைவிரல்களுக்கு ஐரோப்பாவில் மருத்துவம் செய்து ஓரளவு குணப்படுத்திக் கொண்டதாகவும் கேள்விப்பட்டேன்.
எனது அறையில் ஜெகோவா பாலன் என்றொரு சகோதரர் இருந்தார். இவர் கிளிநொச்சி அரசு மருத்துவமனையில் பணியாற்றியவர். சுpறந்த சமூக சேவகர். மருத்துவமனைக்கு வரும் நோயாளர் முதல்கொண்டு அவசர உதவிக்கான அனைத்துப் பணிகளையும் தானே முன்நின்று செய்வார். எக்காளத் தொனி (வுசரnpநவ ளுழரனெ) என்னும் கிறிஸ்துவ ஆலயத்தின் பகுதி நேர ஊழியருமாவார். கிளிநொச்சி அரசு மருத்துவமனையின் மருந்துப் பிரிவில் பணியாற்றும் ஓடலி இவரது பணியாகும்.
நோய்வாய்ப்பட்டு மருத்துவ மனையில் யாராவது மரணித்தால் மருத்துவமனையின் சட்டநடவடிக்கைகள் உட்பட அனைத்தையும பாலனே முன்நின்று முடித்து அந்த உடல் உறவினரது வீடுபோய்ச் சேரும் வரை இவர் தனது வீட்டுக்குப் போகமாட்டார். இது கடவுளுக்கான பணிவிடை, எனது ஆலயத்தின் வேண்டுதலால் இவற்றை நான் செய்கிறேன் என்றும் விளக்கம் கூறுவார்.
கிளிநொச்சி மருத்துவமனையின் எதிரில் ஈ.என்.டி.எல்.எப். முகாம் இருந்தபடியால் உனக்கும் அவர்களுக்கும் என்ன தொடர்பு என்று விசாரிக்க வரும்படி அழைத்து பலதரப்பட்ட சித்திரவதைகளைச் சந்தித்து இருபாலை முகாமுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளார்.
தினமும் அவர் முழங்காலில் நின்று வழிபடுவார். இங்கிருக்கும் அனைவருக்கும் விடுதலை கிடைக்க வேண்டும், புலிகள் தங்களை அறியாமல் பல தவறுகளைச் செய்கின்றனர். அவர்களையும் நீர் மன்னிக்க வேண்டும், அவர்களுக்கு நல்ல புத்தியைக் கொடுக்க வேண்டும் ஆண்டவரே! சின்னகேடியும், திசையும், பாபுவும் அடிக்கும் போது வலி ஏற்படாமல் இருக்க ஆண்டவரே நீர் உதவி செய்வீராக! வலதுகுறைந்த நடராஜ் அவர்களை இவர்கள் மிருகத்தனமாகத் தாக்குகின்றனர், அவருக்கு வலிக்காமல் இருப்பதற்கும் , விடுதலை அடைவதற்கும் நீர்தான் வழி செய்ய வேண்டும் ஆண்டவரே! பல இடங்களில் சித்திரவதை முகாம் வைத்து எங்கட பெடியன்களை கொடுமைப்படுத்துகின்றனர் ஆண்டவரே! இந்தக் கொடுமைகளைத் தடுத்து நிறுத்தும் ஆண்டவரே! புலிகளுக்கு படிப்பினை ஒன்றினை புகட்டும் ஆண்டவரே என்று தினமும் ஜெகோவா பாலன் இறைவனிடத்து தினமும் வேண்டிக்கொள்வார்!
என்னைப் பார்த்து ஒரு நாள் கூறினார், கிரேசியன், நீங்கள் இந்த முகாமிலிருந்து விடுதலை அடைவீர்கள், பல கசப்பான அனுபவங்களுடன் உங்களுக்கு விடுதலை கிடைக்கும், ஆனால் நான் இறச்சிக்கடைக்கு போகவேண்டி ஏற்படும். சிலவேளை உயிருடன் திரும்புவேன், சிலசமயம் உயிருடன் திரும்பாமலும் போகலாம், எல்லாம் இறைவனது கைகளில் என்று கூறினார். எப்படி இவ்வளவு திடமாகச் சொல்கிறீர்கள் என்று கேட்டதற்கு, எனது உள்ளுணர்வு சொல்கிறது என்றார்.
பாலனது கால்களில் போடப்பட்டிருந்த சங்கிலியின் பூட்டுக்கள் துருப்பிடித்து இருந்ததால் அவரது கால்களில் உரசி புண் ஏற்பட்டிருந்தது. அந்தப் பூட்டை மாற்றும்படி பலதடவைகள் கேட்டும் அவர்கள் மாற்றவில்லை! இதனால் பாலன் பெரும் அவஸ்தைபட்டு வந்தார். அவர் சொல்லியபடி நான்கு மாதங்களில் அவரை இறச்சிக்கடைக்குக் கொண்டு சென்றுவிட்டனர் புலிவிலங்குகள். புறப்படும் போது என்னிடம் வந்து கூறினார், நான் போகிறேன் உயிருடன் திரும்பினால் உங்களை வந்து சந்திப்பேன். செத்துப்போனால் என்னுடைய வீட்டுக்குப் போய் ஆறுதல் சொல்லிவிடுங்கள், ஆண்டவர் அவர்களைக் காப்பாற்றுவார் என்று சொல்லி விடைபெற்றுச் சென்றார் பாலன்!
1995 ஆண்டு யாழ்ப்பாண வெளியேற்றத்தின் போது நானும் கிளிநொச்சி சென்றிருந்தேன். வட்டக்கச்சி கட்சன் றோட்டில் இருந்த ஜெப ஆலயத்தின் அருகில் ஜெகோவா பாலனைச் சந்தித்தேன். கட்டித் தழுவிக் கண்கலங்கினார். இறச்சிக் கடையில் இரண்டு வருடங்கள் இருந்ததாகச் சொன்னார் அவர். தான் அவர்களிடத்தில் பட்ட கொடுமைகளை விபரித்தார்.
சாவகச்சேரி இறச்சிக் கடைக்குக் கொண்டு சென்றதும் பாலன் தனிமைப்படுத்தப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். முள்ளுக் கம்பிகளால் வேலி போன்று அமைக்கப்பட்டு அதன் நடுவில் இரண்டு நாடகளாக நிறுத்திவைக்கப்பட்டார் பாலன். அந்த முள்ளுக்கம்பிகளுக்குள் நிற்க மட்டுமே முடியும், இருக்கவோ படுக்கவோ முடியாது. இரண்டு நாட்கள் வெய்யிலில் இது போன்று நின்றுள்ளார் பாலன்.
முதல்நாள் தாக்குப்பிடித்த பாலனால் இரண்டாம் நாள் தாக்குப்பிடிக்க முடியவில்லை. முள்ளுக்கம்பியின் மீது சாய்ந்து உறங்கிவிட்டார். இதனால் முள்ளுக்கம்பி கழுத்திலும் வயிறு, மற்றும் நெஞ்சிலும் குத்திக் கிழித்துள்ளது. அதிலிருந்து விடுபட்டப்பின்னர், அவரது கைகளை விலங்குகளினால் இணைத்து அதில் கயிற்றைக் கட்டி அக்கயிற்றை கிணற்றின் கம்பியில் போட்டு மூன்று பேர் சேர்ந்து இழுத்து கிணறறிலுள்ளே இறக்கியுள்ளனர்.
கிணற்றினுள் இருந்த தண்ணீரிலிருந்து சுமார் மூன்று அடிக்கு மேலாக இவரைத் தொங்கவிட்டள்ளனர். நான்கு மணி நேரத்துக்குப் பின்னர் வந்த விலங்குகள், சொல்லு எங்கே ஆயுதங்களை வைத்துள்ளாய்? என்று கேட்டுள்ளனர். இவரால் வாய்திறந்து பதில் சொல்ல முடியாத மயக்க நிலையை அடைந்தபடியால் கயிற்றை இழுத்து மேலே கொண்டுவந்தனர். இரண்டு நாட்கள் காலிலும் கைகளிலும் விலங்குடன் விடப்பட்ட இவரை மீண்டும் விசாரணைக்காக அழைத்து தென்னம்மட்டை, ஒஸ்லோன் பைப் போன்றவற்றால் முதுகில் அடித்தனர் என்று கூறிய பாலன் தனது சேட்டைக் கழற்றி முதுகைக் காண்பித்தார். அவரது முதுகில் காயங்கள் ஏற்பட்டு அவை ரணமாகிய தழும்புகள் தடித்துத் தடித்திருந்தன. நீளம் நீளமாக முப்பதுக்கும் மேற்பட்ட தழும்புகள் புடைத்துக்கொண்டு நின்றன.
(தொடரும்…)நடந்த வன்கொடுமைகள்! (பகுதி 25)
(கிறேசியன், நாவாந்துறை)
பாலன் மேலும் சொன்னார், இறைச்சிக் கடையில் நான் பட்ட கொடுமைகளை விட ஏனைய சகோதரர்கள் மிகவும் பயங்கரமான கொடுமைகளைச் சந்தித்துள்ளனர். தினமும் அந்த முகாமில் இரண்டு பேரையாவது கொலை செய்வார்கள். சகோதரர்கள் படும் துயரம் சொற்களால் விபரிக்க முடியாதவை. அந்த முகாமுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் இளைஞர்களைக் கொண்டு வருவார்கள். அம்பாறை முதற்கொண்டு காங்கேசன்துறை வரை உள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அங்கு இருந்தனர். கால்கள் உடைக்கப்பட்டு, கைகள் உடைக்கப்பட்டு, முகங்கள் உடைக்கப்பட்டு நாளடைவில் அனைவரையும் கொன்றுகொண்டே இருந்தனர்.
யாழ்ப்பாண வெளியேற்றத்தின் போது அந்த இறைச்சிக்கடையில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் இருந்தனர். அவர்கள் அனைவரையும் கொலை செய்து அங்கேயே புதைத்துவிட்டுத்தான் இவர்கள் வன்னிக்கு ஓடிவந்ததாகக் கேள்விப்பட்டேன். அப்படி இவர்கள் அந்த இளைஞர்களைக் கொலை செய்திருந்தால் அப்பழி இவர்களைச் சும்மாவிடாது. ஆண்டவன் தண்டிக்கத் தாமதம் ஆனாலும் இவர்களை ஒருநாள் இயற்கை தண்டிக்கும் என்று கூறிய பாலன், நாங்கள் இப்படிச் சந்தித்துக் கதைத்த நாங்கள் என்று யாராவது வெட்டிகள் போட்டால் திரும்பவும் கொண்டுபோய் சித்திரவதை செய்வார்கள். இன்னொரு நாளைக்குச் சந்திப்பம் தம்பி என்று கூறிச் சென்றார். இந்தியா வந்து சேரும்வரை அவரை என்னால் சந்திக்க இயலவில்லை!
என்னை இருபாலை முகாமுக்குக் கொண்டு வந்து நான்கு மாதங்கள் ஆகிவிட்டன. எந்த விசாரணையும் இல்லை. ஆனால் தினமும் யாராவது வரும் புதிய விலங்குகள் அனைவருக்கும் உதை விருந்து வைத்துக்கொண்டே இருந்தனர். இறைச்சிக் கடைக்கு ஏறக்குறைய நாற்பதுக்கும் மேற்பட்டவர்களைக் கொண்டு சென்றிருந்தனர்.
சின்னக்கேடியும், திசையும் வாரத்தில் மூன்று நாட்கள் தவறாமல் உள்ளே வந்து தங்களது விருப்பம் பூர்த்தியாகும் வரை அடிப்பார்கள். சித்திரவதை செய்வார்கள், கடைசியாக வெளியே செல்லும் போது நடராஜ் அவர்களை உருட்டிப் புரட்டி எடுத்துத் தாக்கிவிட்டு செல்வார்கள்.
நாவாந்துறையைச் சேர்ந்த ஜெகன் ஞானதாஸ் என்பவரையும் மேலும் ஐந்து பேரையும் ஒருநாள் இரவில் கொண்டுவந்தனர் இருபாலைக் காம்புக்கு. ஞானதாஸ் அவர்கள் ஏற்கனவே ரெலோ இயக்கத்தில் இருந்தவர். படகுகள் ஓட்டுவதில் சிறந்த பயிற்சிப் பெற்றிருந்தார். இவர் ரெலோவில் தாஸ் குழுவினரைச் சேர்ந்தவர். ரெலோ இயக்கத்தை இவர்கள் தாக்கிப் படுகொலை செய்த பின்னர் ஞானதாஸ் அவர்கள் எந்த இயக்கத்திலும் சேராது இருந்தார். அப்படியிருக்கையில் ஆறு ஆண்டுகள் கழித்து இவரை எதற்காக இப்போது இழுத்துவர வேண்டும் என்பதை அறிய ஆர்வம் ஏற்பட்டது.
ஞானதாஸ் அவர்களை இரண்டு நாட்கள் நாவல் மரத்தின் கீழ் வைத்து சித்திரவதை செய்து பின்னர் எனது அறைக்கு அருகில் விடப்பட்டார். இரண்டு மூன்று நாட்களில் அவருடன் கதைக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவர் விபரித்தார்:- தம்பி எனது இயக்கப் பெயர் ஜெகன். தாஸ் அண்ணன் தான் என்னை இயக்கத்துக்கு அழைத்து வந்தார். அவர் சுடப்பட்டதும் நான் இயக்கத்திலிருந்து ஒதுங்கிக் கொண்டேன். ஆயினும் என்னைப் பிடிப்பதற்கென்று கிட்டு தலைமையில் ஒரு குழு நாவாந்துறைக்கு வந்தது. கிட்டுவுடன் பாறூக் என்பவரும் வந்தார்.
அன்றைய தினம் எங்கள் சென்மேரீஸ் கோவில் திருநாள் நடந்துகொண்டிருந்தது. 29-04-1986 அன்று இரவு ஏழுமணியளவில் என்னைப் பிடிப்பதற்கென்று வந்த நபர்களை அடித்துவிட்டு பின்பக்கத்துச் சுவரால் ஏறி குதித்து கன்னியாஸ்திரிகள் இருக்கும் பகுதிக்குள் நுழைந்துவிட்டேன். என்னை நோக்கி பலதடவைகள் சுட்டார்கள் புலிகள். கிட்டு வானத்தை நோக்கிச் சுட்டுக்கொண்டு பைத்தியம் பிடித்தவர் போல் மக்களுக்குள் ஓடித்திரிந்தார். வெடிச்சத்தம் கேட்டதும் என்னை அவர்கள் சுட்டுவிட்டனர் என்று கருதி புலி நபர்களைச் சூழ்ந்துகொண்டு மக்கள் தாக்கத் தொடங்கிவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து கிட்டு ஒரு நபரையும், பாறூக் ஒரு நபரையும் சுட்டுக்கொன்று விட்டனர். இதனால் மக்கள் மேலும் ஆத்திரமடைந்து கிட்டு வந்த வானை கவிழ்த்துத் தீ வைத்துவிட்டனர். புலிகள் அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அரைமணித்தியாலத்தில் நான் மீண்டும் கோவிலுக்கு வந்தேன். அங்கே இருந்தவர்கள் என்னைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். உன்னைக் கொன்று விட்டார்கள் என்று நினைத்துத்தான் அவங்களை நாங்கள் தாக்கினோம். அவங்கள் விஜயனையும், ரெட்னசிங்கத்தையும் சுட்டுக் கொன்றுவிட்டு ஓடிவிட்டார்கள் என்று கூறினர்.
மறுநாள் இருவரது உடல்களும் அடக்கம் செய்யப்பட்டப் பின்னர் எரிந்த வானை இழுத்து ஓரமாகத் தள்ளிவிட்டு நான் கோவிலின் பின்புறத்தில் தங்கியிருந்தேன். மூன்றாம் நாள் மாத்தையாவும், கிட்டுவும் அறுபது எழுபது பேருடன் துப்பாக்கிகளுடன் வந்து ஊர்த் தலைவர் மற்றும் பாதர் சிஸ்ரர் மாருடன் கதைத்தனர். கிட்டு அவர் வந்த வாகனத்தினுள் அமர்ந்துகொண்டார். பாதர் வற்புறுத்தி கிட்டுவையும் வந்து பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும்படி கூறி அழைத்து வந்தார்கள். எங்கள் தலைவரைப் பார்த்து மாத்தையா சொன்னார்:- நாங்கள் ரெலோ இயக்கத்தைத் தடைசெய்துள்ளோம். உங்களுக்கும் அது தெரியும். நாங்கள் ஒரு விசாரணைக்காகத்தான் ஜெகனை கூட்டிக்கொண்டு போக வந்தோம், அவர் எங்கட பொடியங்களை அடிச்சுப் போட்டு ஓடிப் போய்விட்டார். அதில் நடந்த சில குழப்பத்தால எங்கட பொடியல் சுட்டுப் போட்டினம். அதனால இங்க இருந்தவையள் எங்கட பொடியன்கள் அடிச்சும் போட்டினம். இதனால எங்களுக்குப் பெரிய அவமானமாப் போச்சு. எங்கட வானையும் எரிச்சுப் போட்டினம். அந்த வான் எங்களுக்கு ஒரு ராசியான வான். அந்த வானை இழந்த எங்களுக்கு பெரிய இழப்பு! நாங்கள் இப்போது சண்டை போடுவதற்கு வரவில்லை. எங்களுக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு என்ன பரிகாரம் செய்யலாம் என்று கதைக்கத்தான் வந்தநாங்கள், என்று முடித்தார் மாத்தையா!
உடனே எங்கள் ஊர்த் தலைவர் நீங்கள் சுட்டுக் கொன்ற இரண்டு பேருக்கும் என்ன பரிகாரம் செய்யப் போறியள் என்று சொல்லுங்கோ என்றார். கிட்டுவுக்கு ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது. ஆயினும் மாத்தையா, அன்றைக்கு ஆயுதங்களைப் பறித்த படியால்தான் சுடவேண்டி வந்தது. அது தவறுதலாக நடந்த ஒன்றுதான் என்று கூறி பரிகாரப் பிரச்சினையைத் திசை திருப்பினார். எங்கள் பகுதியில் உயிரிழப்பு ஏற்பட்டதையிட்டு அவர்கள் கவலையடையவில்லை. ஆனால் அவர்களுக்கு அவமானம் ஏற்பட்டதையிட்டு வருத்தப்பட்டனர்.
இறுதியாக மாத்தையா கூறினார், பாதர் எங்களுக்கு பெரிய அவமானம் ஏற்பட்டுவிட்டது, நீங்கள் ஜெகனை எங்களிடம் ஒப்படைத்தால் நாங்கள் நாளைக்கே உங்களிடம் கொண்டு வந்து ஒப்படைத்துவிடுவோம். இது ஓர் கௌரவப் பிரச்சினை! எங்கட பொடியள் எங்களை மதிக்கவே மாட்டார்கள். நாவாந்துறையில அடிச்சு விரட்ட ஓடியந்தவயள்தானே என்று எங்களை ஏளனமாகக் கதைப்பார்கள். அதனால நாங்கள் ஜெகனைப் பிடித்துவந்து விசாரிச்ச நாங்கள் என்று எங்கட ஆக்களுக்குக் காட்ட வேண்டும், அப்படிச் செய்தால் எல்லாரும் அமைதியாகி விடுவார்கள், எங்களுக்கும் பிரச்சினை இருக்காது. ஆகையால் சத்தியமாகச் சொல்றன் பாதர் நான் எனது பொறுப்பில் கூட்டிக் கொண்டுபோய் நாளைக்கு திரும்பவும் உங்களிடம் கூட்டிக்கொண்டு வந்து விட்டிரன் என்று மாத்தையா சத்தியம் செய்தார்.
இதனைத் தொடர்ந்து, ஊர்த் தலைவரும் பாதரும் என்னுடன் கதைத்தனர். பாதரிடமும் தலைவரிடமும் உறுதி கூறினால் நான் அவர்களுடன் சென்று வருகிறேன் என்று கூறி அவர்களுடன் கிளம்பினேன். அவர்கள் என்னை வேம்படிக்குக் கொண்டுச் சென்றனர். அங்கிருந்து கண்னைக் கட்டி மேலும் ஓரிடத்துக்கு கொண்டு சென்றனர். சிலர் வந்து என்னைப் பார்த்தனர். அப்போதும் எனது கண்களைக் கட்டித்தான் இருந்தனர். யாரும் எனக்கு அடிக்கவில்லை. ஆனால் தூசண வார்த்தைகளால் வறுத்து எடுத்தனர்.
இப்போது நீ தப்பிவிட்டாய் ஒருநாள் மீண்டும் அகப்படுவாய் அப்போது பார்த்துக்கொள்வோம் உன்னை என்று மிரட்டினர். செல்வம் எங்கே இருக்கிறான். பொபி எங்க இருக்கிறான், என்று கேட்டனர். எனக்கும் அவர்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது என்றேன்! அவர்களுக்கும் அது தெரியும். தெரிந்தே வேண்டுமென்று கேட்டனர். ஏனெனில் என்னிடம் கேட்பதற்கு எதுவுமே இருக்கவில்லை. தாங்கள் ஓர் ஆதிக்க வாதிகள் என்பதைக் காண்பிக்கவேதான் என்னைப் பிடிக்க வந்தார்கள்.
மறுநாள் என்னை வான் ஒன்றில் ஏற்றினர். முன் இருக்கையில் திலீபன் ஏறி அமர்ந்தார். மாத்தையாவுடன் வந்தவர்களில் திலீபனும் இருந்தார் முதல் நாளில். அப்போது அவர் திலீபன் என்பது எனக்குத் தெரியாது. அழைத்து வந்து பாதரிடம் ஒப்படைத்தனர் என்னை.
(தொடரும்…)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’