-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
சனி, 10 ஏப்ரல், 2010
1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்……
நடந்த வன்கொடுமைகள்! (பகுதி 12)
(கிறேசியன், நாவாந்துறை)
ஒருவாரம் அந்தப்பக்கம் வராமல் இருந்தவர் பழையடி தனது கைவரிசையைக் காண்பித்துக் கொண்டுதான் இருந்தார். கே.டி.யின் சொந்த இடம் வட்டக்கச்சி, இவர் பலதரப்பட்ட ஒழுங்கீனங்களைச் செய்ததாகவும், புலி விலங்குகளின் கட்டுப்பாட்டையும் மீறி தன்னிச்சையாகச் செயல்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டு, புலி இயக்கத்தை விட்டு விரட்டியடிக்கப்பட்டதாகவும் அறிந்தேன்.
நான் இந்த மில் சிறைக்கு வந்த போது இருந்த கைதிகளில் பாதியளவு குறைந்து அந்தக் குறைந்த அளவைப் புதியவர்களைக் கொண்டு வந்து நிரப்பியிருந்தனர். நான் வருவதற்கு முன்னர் ஏறக்குறைய 1500 பேர்வரையில் புலி விலங்குகள் கொலை செய்துவிட்டதாக அறிந்தேன். நான் வந்த பின்னரும் இதே அளவு சகோதரர்களை புலி விலங்குகள் கொன்றிருப்பார்கள். விடுதலை செய்யப்படுபவர்கள் பகல் நேரங்களில்தான் அழைத்துச் செல்லப்படுவார்கள். அப்படி நான் வந்த இவ்வளவு காலங்களிலும் பகல் நேரத்தில் அழைத்துச் சென்று விடுதலை செய்யப்பட்டவர்கள் இரண்டு பேர் மட்டுமே.
நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன. எங்களுக்கு வெளியுலகத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியாது. செய்தித் தாள்கள் கிடையாது. வானொலி, ரி.வி எதுவும் கிடையாது. அவர்களது சித்திரவதை அவர்கள் கொடுக்கும் இரண்டு வேளை உணவு, அருகில் இருப்பவர்கள் சொல்லும் அவர்களது அனுபவங்கள், கால் விலங்கு இவைகள்தான் எங்களுடன் பிணைந்திருந்தன. நாங்கள் தினமும் பரிதாபப்படும் விடயம் அந்தக் குழிகளுக்குள் வாழும் சகோதரர்கள் பற்றியதுதான். தரையில் வைத்திருக்கும் எங்களுக்கே இவர்கள் இவ்வளவு கொடுமைகள் செய்திருக்கையில் அந்த குழிகளுக்குள் இருக்கும் இளைஞர்களுக்கு எப்படியான கொடுமைகளைச் செய்திருப்பார்கள் என்பது கற்பனைகூட செய்து பார்க்க முடியாது.
விடுதலை இயக்கங்களைச் சேர்ந்தவர்களை புலிவிலங்குகள் எதிரியாகக் கற்பனை செய்து பழிதீர்த்தார்கள். ஆனால் பொதுமக்களை இழுத்து வந்து எதற்காக பிற இயக்கங்களுக்கு உதவி செய்தாய் என்று கொடுமைப்படுத்தி கொலை செய்தது மனிதத் தன்மைக்கும் நியாயத்துக்கும் பொருத்தமில்லாதது.
என்னுடன் செட்டி என்றொரு சகோதரர் எனது பகுதியில் கால்விலங்குடன் பல துயரங்களைச் சந்தித்து வந்தார். இவர் யாழ்ப்பாணம் கெனடி வீதியைச் சேர்ந்தவர். சிறந்த கடல் ஓட்டி, இவர் அனைத்து இயக்கங்களுக்கும் உதவிகள் பல செய்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்கும், இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கும் இலங்கை இந்திய நேவிகளின் கண்களில் படாமல் படகு ஓட்டக்கூடியவர். ஆயிரக்கணக்கானவர்களை இந்தியாவுக்கு படகுகளில் ஏற்றி கரைசேர்த்துள்ளார். இறுதியாக ஈ.பி.ஆர்.எல்.எப். தோழர்களையும் இந்தியாவில் இறக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து வழக்கம் போல் பெட்டிசன் வர இவரை அழைத்து வந்து கொடுமைகள் பல செய்தனர். இவருக்கு நான்கு குழந்தைகள்.
இவருக்கு இழைத்துவிட்ட கொடுமைகளை அவர் என்னிடம் விபரித்தார். ஒவ்வொரு சம்பவங்களையும் விபரிக்கும் போதும் அவரால் அழுகையை அடக்கமுடியவில்லை. எனது குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகுமோ என்று பல தடவை கண்ணீர் வடித்தார். உண்மையில் அவர் தியாக உணர்வு கொண்ட பாமரனாக இருந்தார்.
அவர் என்னிடத்தில் கேட்டார்! எதற்காக புலிகள் இப்படி எல்லாரையும் கொல்லினம்? எல்லாரும் தனிநாடு கேட்டுப் போராடினவர்கள்தானே! நான் எலலாருக்கும் உதவியிருக்கிறேன். எனக்கு இந்த இயக்கங்களுக்குள் உள்ள வித்தியாசங்கள் என்னவென்றே தெரியாது! யாழ்ப்பாணத்தில் எல்லாரும் எல்லாருக்கும் உதவி செய்தினம், நானும் அப்படித்தான் உதவிசெய்தென். கடல் ஓடுவது. எங்களுக்கு நாடு கிடைக்க என்னாலான உதவியைச் செய்தேன். எனக்குப் பெரிய படிப்பறிவு கிடையாது. உடல் உழைப்பை எங்கள் இனத்துக்காக வழங்கினேன். இதில் என்ன குறையைக் கண்டனர் இந்தப் புலிகள். நான் முன்பு நினைத்தேன் புலிகள் இயக்கத்தினர் படித்தவர்கள், பண்புள்ளவாகள் என்று என்னைப் பிடித்துவந்த பின்னர்தான் தெரிந்தது, படிப்பறிவு மட்டுமல்ல, நாகரீகமே தெரியாதவர்கள் என்று. அவ்வளவுக்கு இவர்கள் அரக்கர்களாக இருக்கின்றனர்.
இப்போதே இவர்கள் இப்படி என்றால் நாடுகிடைத்தால்! எனது குடும்பத்தையேஅழித்துவிடுவார்கள். நான் இல்லாமல் எனதுக் குடும்பத்தினர் உணவுக்கே கஸ்ரப்படுவார்கள். அவர்களுக்கு யார் உணவு கொடுப்பது? என்னைப் பார்ப்பதற்கு கண்டிப்பாக வந்திருப்பார்கள். இந்த மிருகங்கள் அவர்களைக் காட்டவே இல்லை. எனது மூத்த மகள் என்னைக் கொண்டு வந்த அன்றே புலிகளின் ஒப்பிசுக்கு முன்னால் நின்று சண்டை போட்டவள். தாயை விட என்னுடன்தான் பாசமாக இருப்பாள். நான் இல்லாமல் பள்ளிக்கூடம் கூட போயிருக்கமாட்டாள். எப்படியாவது அவளைப் பள்ளிக்கூடம் போகச் சொல்ல வேண்டும், இந்த விலங்குகளிடம் கேட்டேன், “ஒரு கடுதாசி போடவேனும் எண்டு” ‘உண்ட சறத்தைக் கழட்டி கடுதாசி எழுது” என்று ஏசிவிட்டுச் சென்றார்கள். பிள்ளைப்பாசம், குடும்பப்பாசம் பற்றி இந்த மனித விலங்குகளுக்கு எப்படித் தெரியப்போகுது” என்று அழுதார் செட்டி!
இவர் தினம் தினம் தன் உடல் எடையை இழந்துவந்தார். அதிஸ்ரவசமாக இவர் ஒரு நாள் விடுவிக்கப்பட்டார். செட்டி வீடு சென்ற நான்கு மாதங்களில் இறந்துவிட்டார். புலிவிலங்குகளில் சித்திரவதை அவரது நுரையீரலைப் பாதித்திருந்தது. பல மருத்துவர்களைச் சந்தித்தும் முடியாமல் போய் இறந்தார். இவரது இறப்பைப் கண்ட இவரது மனைவி ரூத் மற்றும் குழந்தைகள் புலிகளை வாழ்த்தியிருப்பார்கள்!!
செட்டி எனக்குச் சொன்ன விடயங்கள் அப்பாவித்தனமாக இருந்தாலும் அதில் மறைந்திருக்கும் நியாயம் தமிழர்களைச் சிந்திக்கவைப்பவை! இயக்கங்கள் தங்களுக்குள் மோதிக்கொண்டன. அவர்களுக்குள் என்ன போட்டி என்றே மக்களுக்குத் தெரியாது. ஆனால் இயக்கங்களுக்கு உதவிய பொதுமக்களைச் சித்திரவதை செய்வதைத் தடுத்து நிறுத்துவது யார்? தமிழர்களை வழிநடத்த தமிழருக்கென்று நியாயமான தலைமை என்று இல்லாமல் போனதுதான் தமிழினத்தின் இன்றைய நிலைக்குக் காரணம் என்றே நினைக்கிறேன்.
(தொடரும்….) நடந்த வன்கொடுமைகள்! (பகுதி 13)
(கிறேசியன், நாவாந்துறை)
சென்ற் நீக்கலஸ் றோட்டைச் சேர்ந்த ஜேக்கப் என்பவர் எனது பகுதிக்குள் இருந்தார். அவருக்கு 5 குழந்தைகள், வயது 45 முதல் ஐம்பது இருக்கும். அவரிடம் விசாரித்தேன். சொன்னார், தம்பி, எனது தெருவில் நான் நன்றாக இங்கிலிஸ் கதைப்பேன். ஐ.பி.கே.எப். வந்ததிலிருந்து எங்கள் பகுதிக்குள் வரும் போது என்னை அழைத்துத்தான் கதைப்பார்கள். காரணம் அவர்களுக்கு தமிழ் தெரியாமல் இருந்தது. ஊரில் உள்ளவர்கள்தான் எனக்கு ஆங்கிலம் தெரியும் என்று அழைத்து வந்தார்கள்.
ஊரில் இருப்பவர்களை சந்தேகத்தில் பிடித்துச் சென்றால் சம்பந்தப்பட்டவர்களுடன் சென்று உயர் அதிகாரிகளுடன் ஆங்கிலத்தில் கதைப்பேன். பின்னர் அந்த வட்டாரத்தில் யாரையாவது பிடித்தால் என்னிடம் வந்து கேட்பார்கள், ஜேக்கப் அண்ண, “ஒருக்கா வந்து ஆமிக்காரரோட கதைச்சு எப்படியாவது என்ர பிள்ளையை எடுத்துத் தாங்கோ” என்று. நானும் அவயன்ர காம்புக்குப் போய் பிடிபட்ட பிள்ளையைப் பற்றி நல்லவிதமாகச் சொல்லி அவரை எனக்குக் குழந்தையில் இருந்து தெரியும், எந்தத் தப்பும் செய்யாது என்று பொய் சொல்லி கூட்டிக் கொண்டு வந்து விடுவேன்.
அப்படி முன்பின் பார்த்திராத பிள்ளையளை நான் கூட்டிக் கொண்டு வந்து விட்டதுக்கு இப்ப இவையள் கேக்கினம், “உன்ர பிள்ளையை உன்ர மனிசிய ஐ.பி.கே.எப். க்கு கூட்டிக் குடுத்தியா?” என்று. எந்த மனச்சாட்சியை வைத்து இந்த மாதிரி கேக்கினம் என்று தெரியவில்லை!
நான் எந்த இயக்கத்துக்கும் ஆதரவு கொடுத்ததில்லை. ஊர்ச்சனம்தான் ஐ.பி.கே.எப். ஐ இழுத்து வந்து எனது வாசலில் நிறுத்தினவையள். புலியின் ஆதரவாளர்கள்தான் அவர்களுடன் கதையுங்கோ என்று சொல்லி என்னை இப்படி மாட்டிவிட்டவர்கள். இங்கிலிஸ் படிச்சபடியால் வந்த வினை!
எனது நிலையை எடுத்துச் சொல்வதற்கு, அதனை செவிமடுத்து கேட்பதற்கு இவர்களில் யாரும் படித்தவர்கள் இல்லை. விசாரணை அதிகாரிகள் என்று வந்தவர்கள் கொழும்புச் சிறையில் தமிழ் பெடியங்களைக் கொன்ற சிங்களக் கைதிகள் போல இருக்கிறார்கள். விறகு கட்டையால் அடிக்கிறார்கள். கொழும்பில் விறகுகட்டை, அலவாங்குகளால்தான் தமிழ் கைதிகளை அடிச்சுக் கொன்றவர்கள் என்று கேள்விப்பட்டனான்.
ஒரு புலித் தம்பி கேட்டார், நீ எத்தனை புலிகளைக் காட்டிக் குடுத்தனீ? என்று. ஊரில் இருந்த புலிகளின் ஆதரவாளர்கள் ஏனைய புலி ஆதரவாளர்களை தங்களது பகையின் மூலம் காட்டிக் கொடுத்தார்கள். நான் ஐ.பி.கே.எப். யிடம் போய், தவறாக போட்டியில் சொல்லியிருக்கினம் என்று கூறி பிடித்து வைத்திருந்த புலி ஆதரவாளர்களை எடுத்து வந்தனான்.
இவையள் என்னவென்றால் ஐ.பி.கே.எப். யோட உனக்கு என்ன வேலை? என்று கேட்டு கொடுமைப் படுத்துகின்றனர். இங்க பாருங்க தம்பி எனது அலகை என்று காண்பித்தார். மல்லி என்ற கொடிய மிருகம் தனது முரட்டுக் கையால் குத்தினதால் எனது அலகு ஒரு பக்கத்துக்கு இழுத்துக் கொண்டுவிட்டது என்று கூறி தனது இடது பக்கத்து தாடையைக் காண்பித்தார். உண்மையில் நான் அவரைப் பார்க்கும் போது அவரது தாடை வலது பக்கம் சரிந்து பக்கவாட்டாக இழுத்துக் கொண்டு இருந்தது.
இயற்கையிலேயே அவருக்கு இப்படித்தான் கீழ்வாய்ப் பகுதி அமைந்துள்ளது போலும் என்று நினைத்திருந்தேன். மண்ட மல்லியின் வேலைதான் இதுவென்று சொன்னபோதுதான் அவரைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.
2005ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் அவரது வீட்டுக்குச் சென்றேன். புலி விலங்குகளிடமிருந்து விடுபட்ட பின்னர் நான் அவரைப் பார்த்ததில்லை. ஒரு நாள் அவர் பற்றி நினைவு வந்தது. பார்த்து வரலாம் என்று தோன்றியது. பார்த்தேன், அவரது வாய் முற்றாகக் கோணலாகி கதைபேச்சு எதுவுமற்றவராகி, கைகளால் ஏதோ சொல்லவந்தார். பின்னர் அழுவதற்கு ஆரம்பித்து விட்டார். அவரது மூத்தமகள் போலியோ நோயால் பாதிக்கப்பட்டவர். முப்பத்தைந்து வயதை தாண்டியிருந்தார். ஏனைய பிள்ளைகள் திருமணமாகிச் சென்றுவிட்டனர்.
அவர் எதையோ சொல்ல பல தடவைகள் முயற்சித்தார். அவரால் முடியவில்லை. ஆறுதல் கூறி புறப்படும் போது என்னைக் கட்டித்தழுவி அழுதார். அவசரமாக ஓர் வெள்ளைத் தாளை எடுத்து எழுதினார். “புலிகளோட கவனம், அவர்கள் மனிதர்கள் அல்ல! கொடிய சாத்தான்கள்! எங்களுக்கு நடந்த கொடுமைகள் உலகத்துக்குத் தெரியாது, அப்படி உலகத்துக்குத் தெரிந்தால் தமிழருக்குத்தான் அவமானம். நான் மறந்துவிட்டேன். நீயும் மறந்துவிடு! ஜேசு உன்னைக் காப்பாற்றுவார். கடவுளை வணங்கு! இப்படி எழுதிக் காண்பித்தார். அந்தத் தாளை என்னுடனேயே எடுத்து வந்தேன்.
எவ்வளவு பெருந்தன்மை ஜேக்கோப் அவர்களுக்கு, தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களை பழிவாங்க நினைக்காமல், மறந்துவிடு என்றும், தமிழர்களுககு இதனால் அவமானம் என்றும் சிந்திக்கும் அளவுக்கு ஓர் இனப் பற்றுக் கொண்ட மனிதரை இந்தப் புலிவிலங்குகள் விலங்கிட்டுக் கொடுமைப்படுத்தியுள்ளனர்.
தங்களைத் தவிர பிற இயக்கங்களையும், பொதுமக்களையும் புலிகள் எதிரிகளாகத்தான் பார்த்தனர். காரணம் சந்தேகம். குடும்பங்களுக்குள் சந்தேகம் தோன்றினால் அந்தக் குடும்பமே அழிந்துவிடும். அதே போன்றுதான் ஓர் இனத்தவருள் சந்தேகம் தோன்றினால் அந்த இனமே அழிந்துவிடும். தமிழருக்கு இது பொருந்தும். தீராத சந்தேகம் தீவிர பகையானது! ஜேக்கப் அவர்களால் பலர் காப்பாற்றப்பட்டனர், ஜேக்கப்பைக் காப்பாற்ற யாருமில்லை! விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை!
(தொடரும்…)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’