வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 8 மார்ச், 2010

செய்தியறிக்கை


இராக் நாடாளுமன்றத் தேர்தல் நிறைவு

இராக் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு
இராக் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு

இராக் நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குபதிவு ஞாயிற்றுக்கிழமையன்று முடிவடைந்தது. அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படைகள் இராக்கிற்குள் 7 வருடங்களுக்கு முன்னர் நுழைந்த பின்னர் நடத்தப்படும் இரண்டாவது வாக்களிப்பு இதுவாகும்.

கணிசமான இராக்கியர்கள் தேர்தலில் வாக்களித்ததாக இராக்கின் பல நகரங்களில் இருக்கும் பிபிசி செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மக்கள் வாக்களிக்க செல்வதை ஊக்குவிக்கும் முகமாக கார் போக்குவரத்து மீதான தற்காலிக தடையை அதிகாரிகள் அகற்றியிருந்தனர்.

இதற்கிடையே, கிளர்ச்சியாளர்களின் பல தொடர் தாக்குதல்களில் மொத்தம் 35 பேர் கொல்லப்பட்டிருந்தாலும், தேர்தல் நடைபெற்று முடிந்தது.

தலைநகர் பாக்தாத்தில் குண்டுத்தாக்குதல் ஒன்றில் அடுக்குமாடி தொடர் வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன.


''இரானில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பல நிறுவனங்களுக்கு அமெரிக்கா நிதியுதவி அளித்துள்ளது''- அமெரிக்க சஞ்சிகை

அமெரிக்க அதிபர் ஒபாமா
அமெரிக்க அதிபர் ஒபாமா
இரானில் மூலதன முதலீடுகளை ஊக்குவிப்பதில்லை என அமெரிக்காவின் அதிகார கொள்கையாக இருந்தாலும் கடந்த 10 ஆண்டுகளில் இரானுடன் வர்த்தகம் செய்யும் அமெரிக்க நிறுவனங்களுக்கு 100 பில்லியன் டாலரை அமெரிக்க அரசு வழங்கியிருப்பதாக நியூயார்க் டைம்ஸ் என்ற அமெரிக்க சஞ்சிகை எழுதியுள்ளது.

இரானுடன் வர்த்தகம் புரிந்த அமெரிக்க மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் அமெரிக்க ஒப்பந்தந்தகாரர்களுக்கும் இதர சலுகைகளையும் ஒபாமா மற்றும் புஷ் நிர்வாக அரசுகள் வழங்கியுள்ளன என்றும் அந்த சஞ்சிகை தெரிவித்துள்ளது.

ஆனால் இரானில் முதலீடுகள் இடம்பெறுவதை ஊக்குவிக்காமல் இருக்கும் வகையிலேயே தாங்கள் செயற்படுவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.


ஆப்கனில் போராளிக்குழுக்களிடையே மோதல்

குல்புடின் ஹெக்மத்தயார் -2009
குல்புடின் ஹெக்மத்தயார்-2009
ஆப்கானிஸ்தானில் குல்புடின் ஹெக்மத்தயார் என்ற போராளிக்குழுத் தலைவரின் படைகளுக்கும் தாலிபன்களுக்குமிடையே தீவிரமான சண்டைகள் ஆரம்பித்துள்ளன.

வடகிழக்கேயுள்ள பகியாலான் மாகாணத்தில் நடந்த இந்த சண்டைகளில் குறைந்தது 60 தீவிரவாதிகளும் பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

மத்திய அரசாங்கம் தலையிடாத பல கிராமங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அங்கிருந்து கிடைக்கும் வருமானங்களைப் பெறுவதற்காகவே இந்த முன்னாள் தோழமை போராளிக்குழுக்கள் தம்முள் மோதிக்கொள்கின்றன.


ஸ்பெயினில் கருக்கலைப்பை இலகுபடுத்தும் புதிய சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு

ஸ்பெயினில் ஆர்ப்பாட்டப் பேரணி
ஸ்பெயினில் ஆர்ப்பாட்டப் பேரணி
ஸ்பெயின் நாட்டில் கர்ப்பிணி பெண்கள் தமது கருவை கலைப்பதை இலகுவாக்கும் புதிய சட்டத்தை கண்டித்து பல்லயிரக்கணக்கான ஸ்பானிஷ் பொதுமக்கள் தலைநகர் மாட்ரிட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

கர்ப்பம் அடைந்த 14வது வாரம் எந்தவித சிரமும் இல்லாமல் தனது கருவை கலைக்க தாய்க்கு அனுமதிக்க கொடுக்கும் புதிய சட்டம் ஸ்பெயின் நாட்டில் எதிர்வரும் ஜுலை மாதம் முதல் அமலுக்கு வருகிறது.

கருக்கலைப்பை அரசு இலகுவாக்கியுள்ளது என்று சிலர் கண்டித்துள்ளார்கள். இன்னும் சிலரோ கருகலைக்கும் உரிமையை 24 வாரங்கள் வரையில் வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுள்ளார்கள்.

ஸ்பெயின் நாட்டில் பழமைவாதிகளையும் கத்தோலிக்க மத பீடத்தையும் மிகவும் ஆத்திரப்பட வைத்துள்ள சட்டச்சீர்திருத்தங்களில் இது புதியது.

செய்தியரங்கம்
அனோமா பொன்சேகா
அனோமா பொன்சேகா

சரத் பொன்சேகா உண்ணா விரதத்தில் ஈடுபட்டுள்ளார்

இலங்கையில் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தமக்கு தொலைபேசி வசதிகள் தரப்படவில்லையென்று கண்டனம் தெரிவித்து ஞாயிற்றுக் கிழமை தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக அவரது மனைவி அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தற்போது வெளிநாட்டில் தங்கியுள்ள தமது புதல்விகளுடன் தொலைபேசியில் பேச தமது கணவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அனோமா பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

இதுபற்றி இராணுவப் பிரமுகர் ஒருவர் கருத்து தெரிவிக்கும்போது ஜெனரல் பொன்சேகாவுக்கு தொலைபேசி வசதிகள் கொடுக்கப்படவேண்டுமென்ற கட்டாயம் எதுவும் இல்லையென்று தெரிவித்தார்.

முன்னாள் படைத்தளபதி ஜெனரல் பொன்சேகா அரசாங்கத்தை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியதாகக் கூறி இராணுவத்தால் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டத்தை அவர் மறுத்துள்ளார்.


மகிந்த –நிருபமா ராவ் சந்திப்பு

மகிந்த மற்றும் நிருபமா ராவ் (ஆவணப் படம்)
மகிந்த மற்றும் நிருபமா ராவ் (ஆவணப் படம்)
இலங்கைக்கு மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இந்திய உயர் இராஜதந்திரிகளில் ஒருவரும் வெளிவிவகார செயலாளருமான நிருபமா ராவ், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது, இருதரப்பு உறவுகள் குறித்தும் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்கள் குறித்தும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டதாக இலங்கை ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் கடந்த காலங்களில் போரினால் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்துக்கும் குறைவாகியுள்ளதாகவும் இது பற்றிய சர்வதேசத்தின் கவனம் தற்போது அகன்றுள்ளதாகவும் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் குறிப்பிட்டதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்து வெளியிட்ட இந்திய வெளிவிவகாரச் செயலாளர், எதி்ர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வடக்கு கிழக்குப் பிரதேசங்களிலிருந்து ஆயிரத்துக்கும் அதிகமான வேட்பாளர்கள் முன்வந்துள்ளமை ஜனநாயகப் பாதையில் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வெளிக்காட்டுவதாக ராவ் சுட்டிக்காட்டியதாகவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பின் போது இருநாட்டு மீனவர்களின் பிரச்சனைகளும் திருகோணமலையில் அமைக்கப்படவுள்ள அனல் மின்நிலையம் பற்றிய விடயங்களும் ஆராயப்பட்டுள்ளதுடன் சுற்றுச்சூழல் நலன்கள் குறித்து இருநாடுகளும் கவனம் செலுத்தவேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் அண்மைய தேர்தல் வெற்றிக்காக இந்தியாவின் வாழ்த்துக்களை இங்கு பகிர்ந்துகொண்டுள்ள நிருபமாராவ், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், மகிந்த ராஜபக்ஸவின் இந்திய விஜயமொன்றை எதிர்பார்த்திருந்தார் எனவும் தெரிவித்ததாக இலங்கை ஜனாதிபதி செயலகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


ஐ.பி.எல் ஏலம் ரத்து

ஷில்பா ஷெட்டி, லலித் மோடி, பிரட்டி சின்டா ( ஆவணப்படம்)
ஷில்பா ஷெட்டி, லலித் மோடி, பிரட்டி சின்டா ( ஆவணப்படம்)
சைப் அலி கான் மற்றும் காத்ரீனா கபூர் ஆகிய இருவரும் ஐ.பி.எல் ஏலத்தில் பங்கேற்பதற்காக ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு வந்த போது, புன்னகை வீச காணப்பட்டனர். ஆனால் ஐ.பி.எல் லீக்கின் தலைவர் லலித் மோடி ஏலம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்ததை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து மறைந்து விட்டனர்.

இந்த விஷயம் ஐ.பி.எலுக்கு சறுக்கலான விடயம். ஒரு அணிக்கு 225 மில்லியன் டாலர் அடிப்படை தொகை என்பது பிரச்சனை அல்ல. ஆனால் ஏலத்தில் பங்கேற்பவர்கள் 1 பில்லியன் டாலருக்கு சொத்து வைத்திருக்க வேண்டும் என்ற விதி தான் பலரை ஏலத்தில் பங்கேற்பதை தடுத்து விட்டது.

ஆதலால் தற்போது ஏலம் நடப்பது நிறுத்தப்பட்டு, மீண்டும் ஏலம் நடக்கவுள்ளது. அதற்குள் முதலீட்டாளர்களை பயமுறுத்திய விதிகள் நீக்கப்படும் என கூறப்படுகிறது.

இத்தோடு ஒளிபரப்பு உரிமம் தொடர்பான சர்ச்சையால் இன்றைய அறிவிப்புகள் எதனையும் இந்திய தொலைக்காட்சிகள் கண்டுகொள்ளாமல் புறக்கணித்து விட்டன. இன்றைய தினம் ஐ.பி.எல் லீக்கிற்கு ஒரு நல்ல தினம் என கூற முடியாது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’