
கண்டியில் நாளை வியாழக்கிழமை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட பௌத்த மாநாடு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மல்வத்த, அஸ்கிரிய மற்றும் அமரபுர பீடங்களின் தேரர்கள் அறிவித்துள்ளனர்.
நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக பௌத்த பீடங்கள் தெரிவித்துள்ளன. மல்வத்த பீடத்தின் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர், அஸ்கிரிய பீடத்தின் ஸ்ரீ புத்தரகித்த தேரர் உள்ளிட்ட தேரர்கள் இந்த அறிவிப்பை செய்துள்ளனர்.
இது தொடர்பில் மல்வத்த, அஸ்கிரிய மற்றும் அமரபுர உள்ளிட்ட பீடங்களின் தேரர்கள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ஆரம்பகாலத்திலிருந்து இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் மற்றும் பொது மக்களுக்கு தர்ம ஆலோசனைகளை நாட்டின் சங்க பீடங்களே வழங்கிவந்தன.
வரலாற்றிலிருந்து பிக்குமார்கள் ஆற்றிய இந்த தேசிய பொறுப்பின் அடிப்படையில் நாட்டில் அமைதியையும் நல்லாட்சியையும் ஏற்படுத்தும் நோக்கில் நாளை வியாழக்கிழமை பௌத்த பீடங்களின் பங்களிப்புடன் பௌத்த மாநாடு ஒன்றை நடத்த ஏற்பாடு செய்திருந்தோம்.
எனினும் நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் மக்களினதும் தேரர்களினதும் பாதுகாப்பு ஸ்ரீ தலதா மாளிகையின் கௌரவம் போன்ற விடயங்களை கருத்திற்கொண்டு குறித்த மாநாட்டை காலவரையறையின்றி ஒத்திவைக்க தீர்மானித்துள்ளோம்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’