வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 15 பிப்ரவரி, 2010

நளினி விடுதலை : சீக்கியர்களுக்கு ஒரு நியாயம்; தமிழருக்கு ஒரு நியாயமா? : இளந்தமிழர் இயக்கம் கேள்வி


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, வேலூர் சிறையில் கடந்த 19 ஆண்டுகளாக வாடி வரும் நளினியை விடுதலை செய்யக் கூடாது என, கடந்த மக்களவைத் தேர்தலில் நின்று தோற்றுப் போன முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், வார இதழ் ஒன்றுக்குப் பேட்டி அளித்திருக்கிறார்.

அவர் மட்டுமின்றி பல்வேறு காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் தொடர்ந்து இவ்வாறு நளினி விடுதலைக்கு எதிராக பேசி வருகின்றனர்.

நளினியின் விடுதலை அளிக்கக்கூடாது என்று பேச, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ஒன்றும் நீதிபதிகள் அல்லர் என்பதை இளந்தமிழர் இயக்கம் நினைவூட்ட விரும்புகின்றது. இது குறித்த வழக்கு இன்றும் நிலுவையில் உள்ள நிலையில், நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாக பேசி வரும் காங்கிரஸ் கட்சியினரை இளந்தமிழர் இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

நளினி விடுதலை குறித்த விவாதம் எழுந்துள்ள நிலையில், இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி படுகொலை குறித்த சில செய்திகளை இளந்தமிழர் இயக்கம் தமிழ் மக்களுடன் பகிர்ந்து கொள்கின்றது.

இந்தியப் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவருமான இந்திரா காந்தியை, சீக்கியர்களின் புனிதத் தலமான பஞ்சாப் பொற்கோவிலுக்குள் இராணுவ நடவடிக்கை எடுத்ததன் விளைவாக, அவர் பதவியில் இருந்த போதே சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவரை சுட்டுக் கொன்ற, சீக்கிய இனத்தைச் சேர்ந்த பியாந்த் சிங், சத்வந்த் சிங், கேஹர் சிங் உள்ளிட்டோரை இன்றளவும் சீக்கியர்கள் தியாகிகளாகப் போற்றி வருகின்றனர். அவர்களது நினைவு நாள் இன்றும் போற்றுதலுக்குரியதாக சீக்கியர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.

சீக்கிய இனத்திற்காக தியாகம் செய்தவர்கள் என சீக்கியர்களின் அதி உயர் பீடமான 'அகால் தக்கட்' அவர்களுக்கு 2008 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆந் திகதி பட்டம் சூட்டிக் கௌரவித்தது. பியாந்த் சிங் உள்ளிட்டோரின் நினைவாக, சிரோன்மணி அகாலி தளம் அமைப்பு, அக்டோபர் 31, 2008 அன்று 'தியாகிகள் தினம்' கடைபிடித்தது.

தற்போது, நியூசிலாந்தில் அமைந்துள்ள சீக்கிய மதக் கோவில் ஒன்றில், இவர்களுக்குப் படம் வைத்து அஞ்சலி செலுத்தப்படுவது குறித்து செய்திகள் வெளியாகியுள்ளன.

அதே போன்று, இந்திரா காந்தியைச் சுட்டுக் கொன்ற சீக்கியர்களுக்கு, இன்றளவும் சீக்கியர்களின் புனிதத் தலமான பஞ்சாப் பொற்கோவிலில் அஞ்சலி செலுத்தப்பட்டும் வருகின்றது. இது குறித்த புகைப்பட ஆதாரத்தை இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி, கடந்த சனியன்று(13.02.2010) சென்னை தாம்பரத்தில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் நடத்தப்பட்ட மாவீரன் முத்துக்குமார் வீரவணக்கப் பொதுக்கூட்டத்தில், மக்கள் முன்னிலையில் வெளியிட்டார்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் அந்நிகழ்வில் கலந்து கொண்டு காங்கிரஸ் கட்சியினரின் பாசிசப் போக்கைக் கண்டித்தனர்.

தமது இனத்தின் மீது தாக்குதல் தொடுத்த பிரதமரை, சுட்டுக் கொன்ற சீக்கியர்களை அவ்வின மக்கள், இன்றும் போற்றுகிறார்கள் என்பது, அந்த இனத்தின் மீது சீக்கியர்களுக்கு உள்ள பற்றுறுதியை நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றது.

தமிழகக் காங்கிரஸார் இன்றும் 'அன்னை' என்று போற்றுகின்ற இந்திரா காந்தியைச் சுட்டுக் கொன்றவர்களை இன்றளவும் சீக்கியர்கள் தியாகிகளாக போற்றுகின்ற நிலையில், அந்த இனத்திற்கே பிரதமர் பதவி கொடுத்தும் அலங்கரித்துப் பார்க்கிறது, காங்கிரஸ் கட்சி.

ஆனால், இன்னொருபுறத்தில், ராஜீவ் கொலையுடன் தொடர்புடையவர் என்ற ஒரே காரணத்திற்காக நளினியை அவரது குழந்தையின் எதிர்காலம் உள்ளிட்டவற்றை கூட எண்ணாமல், சாகும் வரை சிறைவைக்கக் கூறும் காங்கிரஸாரின் நிலை, பாரபட்சமானது.

. இந்த நிலையிலும் கூட, இன உணர்வுடன் சீக்கியர்கள் ஏற்றுக் கொண்டதைப் போல, தமிழக மக்கள் ராஜீவ் காந்தி கொலையை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனை துன்பியல் நிகழ்வாகவே கருதுகின்றனர்.

இருந்தபோதும், தமிழகக் காங்கிரஸ் கட்சியினர், சீக்கியர்களுக்கு எதிராக சீறாமல், தமிழர்களுக்கு எதிராக மட்டும் தொடர்ந்து சீறுவது ஏன்? சீக்கியர்களுக்கு ஒரு நியாயம், தமிழருக்கு ஒரு நியாயமா? என இளந்தமிழர் இயக்கம் தமிழகக் காங்கிரஸ் கட்சித் தலைவர்களிடம் கேள்வி எழுப்புகின்றது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’