வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 27 பிப்ரவரி, 2010

2010 பொதுத்தேர்தல் களம் ஆரம்பம்: யாழ். மாவட்டத்தில் 9 உறுப்பினர்களை தெரிவு செய்ய 324 வேட்பாளர்கள் களத்தில்


யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திலிருந்து எதிர்வரும் ஏப்ரல் மாதம் எட்டாம் திகதி நடைபெறும் ஏழாவது பொதுத்தேர்தலில் ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டும் தெரிவு செய்வதற்காக இதுவரை இல்லாதவாறு மொத்தம் 324 வேட்பாளர்கள் களம் இறங்கி உள்ளனர்.





அதே போன்று மொத்தம் 12 சுயேச்சைக் குழுக்கள் தமது வேட்பாளர்களின் நியமனப் பத்திரத்தை நேற்றுத் தாக்கல் செய்தன.

இதேவேளை வடக்கு, கிழக்கில் உள்ள ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் முதல் தடவையாக அதிக எண்ணிக்கையாக 197 அணிகள் போட்டியில் குதித்துள்ளன. அவற்றில் 115 சுயேச்சைக் குழுக்களாகும்.

தமிழ்ப் பகுதிகளில் இம்முறை அதிக சுயேச்சைக் குழுக்கள் போட்டியிடுவது இதற்கு முன்னர் நடைபெற்ற ஆறு பொதுத் தேர்தல் களங்களை விடவும் முற்றிலும் மாறுபட்ட பின்னணி ஒன்றைத் தோற்றுவித்துள்ளதாக நோக்கர்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்று நண்பகல் 12 மணியுடன் நிறைவு பெறவிருந்ததால் யாழ். செயலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்காக கட்சி உறுப்பினர்களும், சுயேச்சைக் குழுக்களின் பிரதிநிதிகளும் ஒன்றன் பின் ஒன்றாக வருகை தந்து கொண்டிருந்தனர். இதனால் யாழ்.செயலகத்தின் முன் வாயில் வேட்பாளர்களால் நிறைந்து வழிந்ததைக் காணமுடிந்தது.

நேற்று நண்பகல் 12மணியுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவு பெற்றதும் 12.30 மணி முதல் 1.30மணி வரை வேட்பு மனுத் தாக்கல் தொடர்பாக ஆட்சேபனைகள் தெரிவிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

ஆட்சேபனைகள் நிறைவு பெற்றதும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும், அரச அதிபருமான கே.கணேஷ், யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் பொ.குகநாதன் ஆகியோர் ஊடகவியலாளர்களைச் சந்தித்து உத்தியோக பூர்வமாக தகவல்களை வெளியிட்டனர்.

யாழ்.தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு 16 கட்சிகளும், 16 சுயேச்சைக் குழுக்களும் வேட்பு மனுத்தாக்கல் செய்தன. அவற்றில் 4 சுயேச்சைக் குழுக்களினதும் ஒரு கட்சியினதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. வேட்பு மனுத் தாக்கல் தொடர்பான விண்ணப்பங்களில் பூரணமான தகவல் வழங்கப்படாமையால் அவை நிராகரிக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் 12 சுயேச்சைக் குழுக்களும் 15அரசியல் கட்சிகளும் போட்டியிடவுள்ளன.

இங்கு தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகளின் விவரம் வருமாறு:

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்,
இலங்கைத் தமிழரசுக் கட்சி,
சோஷலிஸ சமத்துவக்கட்சி,
ஐக்கிய தேசியக் கட்சி,
ஜனநாயகத் தேசியக் கூட்டணி,
ஜனசெத பெரமுன,
ஐக்கிய சோஷலிஸக் கட்சி,
எல்லோரும் மக்கள் எல்லோரும் மன்னர்கள் கட்சி,
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி,
பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி,
தமிழர் விடுதலைக் கூட்டணி,
ஜனநாயக ஐக்கிய முன்னணி,
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்,
இடதுசாரி விடுதலை முன்னணி,
ஈழவர் ஜனநாயக முன்னணி.

தேர்தலில் போட்டியிடவுள்ள சுயேச்சைக் குழுக்களின் தலைமை வேட்பாளர்களின் விவரம் வருமாறு:

சந்திரலிங்கம் சத்தியசீலன்,
சண்முகநாதன் மனோகரன்,
பர்னாந்து ஜோஸப் அன்ரனி,
கதிரவேல் செவ்வேள்,
அன்ரனி தங்கா துஷாரா,
காசிப்பிள்ளை செந்தில்வேல்,
பொன்னுத்துரை சிவபாலன்,
அருணாச்சலம் சொக்கநாதன் சந்திரன்,
வல்லி நடராசா,
நாகமுத்து தணிகாசலபிள்ளை,
திலக் உடுகம,
முகம்மது அஹீத் தாஹீர்.

அதேவேளை இலங்கையின் நாடாளுமன்றத்தேர்தலில் வடக்கு, கிழக்கில் உள்ள ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் முதல் தடவையாக அதிக எண்ணிக்கையாக 197 அணிகள் போட்டியில் குதித்துள்ளன. அவற்றில் 115 சுயேச்சைக் குழுக்களாகும். மொத்தமாக 1867 பேர் போட்டியிடுகின்றனர்.

இதில் 31 பேரே இலங்கையின் நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

கொழும்பில், 22 அரசியல் கட்சிகளையும் சுயேட்சைக் குழுக்களையும் சேர்ந்த ஆகக் கூடுதலான 836 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற நிலையில், திகாமடுல்ல மாவட்டத்தில் இரண்டாவது கூடிய எண்ணிக்கையான 660 பேர் போட்டியிடுகின்றனர்.

வடக்கு கிழக்கு ஐந்து தோ்தல் மாவட்டங்களிலும் களம் இறங்கவுள்ள கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள், வேட்பாளர்களின் நிலைவரம்:

யாழ்ப்பாணம் - 15 அரசியல் கட்சிகள் - 12 சுயேட்சைக்குழுக்கள் - 324 வேட்பாளர்கள்

வன்னி - 18 அரசியல் கட்சிகள் - 9 சுயேட்சைக்குழுக்கள் - 306 வேட்பாளர்கள்

மட்டக்களப்பு - 17 அரசியல் கட்சிகள் - 27 சுயேட்சைக்குழுக்கள் - 360 வேட்பாளர்கள்

திருகோணமலை - 17 அரசியல் கட்சிகள் - 14 சுயேட்சைக்குழுக்கள் - 217 வேட்பாளர்கள்

திகாமடுல்லை - 17 அரசியல் கட்சிகள் - 49 சுயேட்சைக்குழுக்கள் - 660 வேட்பாளர்கள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’