வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 3 டிசம்பர், 2009

செய்தியறிக்கை


விடுவிக்கப்பட்டுள்ள பிரித்தானியர்கள்
விடுவிக்கப்பட்டுள்ள பிரித்தானியர்கள்

இரானின் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரித்தானியர்கள் விடுதலை

பிரிட்டனைச்சேர்ந்த ஐந்து பாய்மரப்படகு பயணிகளை இரான் விடுவித்திருக்கிறது. இவர்கள் இரானியக் கடற்பரப்பினுள் பயணித்த பின்னர் ஒரு வாரம் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்கள்.

துபாயில் துவங்கவிருந்த ஒரு பாய்மரப்படகு பந்தயத்தில் கலந்து கொள்வதற்காக அவர்கள் பஹ்ரைனிலிருந்து கடலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது இரானியக் கடற்பரப்பினுள் நுழைந்துவிட்டனர்.

அவர்கள் இரானிய கடற்பரப்பினுள் தவறுதலாக வந்துவிட்டனர் என்பது தெளிவாகிறது என்று இரான் தெரிவித்துள்ளது.

இரானியர்கள் இப்போது இந்த பாய்மரப்பயணிகள் மற்றும் அவர்களது சேதமடைந்த படகை சர்வதேச கடற்பரப்பினுள் இழுத்து வந்துகொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் அங்கு ஒரு கப்பல் மூலம் துபாய்க்கு கொண்டு செல்லப்படுவார்கள்.

பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் கருத்து வெளியிடுகையில், இந்த பயணிகளின் அவஸ்தை முடிந்துவிட்டது என்பதில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறியிருக்கிறார்.


நைஜீரிய அதிபர் பதவி விலக வேண்டுமென கோரிக்கை

நைஜீரிய அதிபர் உமரு யாடுவா
நைஜீரிய அதிபர் உமரு யாருவா
நைஜீரிய அதிபர் உமரு யாரடுவா உடல் நலக்குறைவு காரணங்களால் பதவி விலக வேண்டும் என்று சுமார் 50 மூத்த நைஜீரிய அரசியல்வாதிகள் கோரியிருக்கிறார்கள்.

அதிபரின் உடல்நலக்குறைவு ஒரு ஆபத்தான வெற்றிடத்தை தோற்றுவித்துள்ளதாகவும், நாட்டின் முக்கிய அலுவல்களைக் கவனிக்கும் பொறுப்பில் யாரும் இல்லாத ஒருநிலை இருப்பதாகவும், பல நைஜீரிய பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்ட இந்த அறிக்கை கூறுகிறது.

அதிபர் யாரடுவா, இருதய நோய் சிகிச்சைக்காக சௌதி அரேபியாவில் இருக்கிறார்.

நைஜீரிய அதிபரின் தொடரும் உடல் நலப்பிரச்சினைகள், அவரை அவரது பணியைச் செய்ய முடியாமல் அடிக்கடி ஆக்கிவிடுவதை பற்றி அங்கு நிலவும் பொதுவான மனோநிலையை இந்த அறிக்கை பிரதிபலிப்பதாக பிபிசியின் ஆப்ரிக்க ஆசிரியர் கூறுகிறார்.


பாகிஸ்தானின் கடற்படை தலைமையகத்துக்கு அருகில் தற்கொலை தாக்குதல்

பாகிஸ்தானிய கடற்படை தலைமையகம்
பாகிஸ்தானிய கடற்படை தலைமையகம்
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள அந்நாட்டின் கடற்படைத் தலைமையகத்திற்கு வெளியே தற்கொலை தாக்குதல் நடைபெற்றதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த தாக்குதலில் பாதுகாப்பு கடமையில் இருந்த ஒருவர் கொல்லப்பட்டதாகவும், இரண்டு பொதுமக்கள் உள்ளிட்ட மற்ற நால்வர் காயமடைந்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

கடற்படைத் தலைமையகத்துக்கு அருகே வந்த தற்கொலை குண்டுதாரி, பாதுகாப்பு கடமையில் இருந்த காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், அப்போது அவர் தான் கொண்டு வைத்திருந்த குண்டுகளை வெடிக்கச் செய்ததாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆப்கான் எல்லைக்கு அருகே இருக்கும் பகுதிகளில் தாலிபான்களுக்கு எதிராக இராணுவம் முழு அளவிலான இராணுவ நடவடிக்கைகளை கடந்த அக்டோபர் மாதம் துவக்கியதில் இருந்து நடைபெற்ற தொடர்சியான தாக்குதல்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.


இந்தியாவின் அனைத்து சுகாய் விமானங்ளின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது

சுகாய் விமானம்
சுகாய் விமானம்
இந்திய விமானப் படைக்கு சொந்தமான சுகாய் 30 ரக போர் விமானம் ஒன்று சில தினங்களுக்கு முன்பு வழமையான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது விபத்துக்குள்ளானதை அடுத்து, விமானப்படையில் உள்ள சுமார் 100 சுகாய் விமானங்களின் இயக்கங்களும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் வடிவமைக்கப்பட்ட இந்த நவீன சுகாய் ரக விமானம் ஒவ்வொன்றிலும் தாம் முன்னெச்சரிக்கை சோதனைகளை நடத்திவருவதாக இந்திய விமானப் படை பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

திங்கட் கிழமையன்று ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற விமான விபத்தில் விழுந்து நொறுங்கிய இரு விமானிகளும் உயிர்தப்பினர். இந்த ஆண்டு சுகாய் விமானம் விபத்துக்குள்ளாவது இது இரண்டாம் முறையாகும்.

செய்தியரங்கம்

கூடுதலான அமெரிக்க துருப்புக்களை எதிர்ப்போம்:தாலிபான்கள்

தாலிபான் போராளி ஒருவர்
தாலிபான் போராளி ஒருவர்
ஆப்கானுக்கு கூடுதலாக 30 ஆயிரம் படையினரை அனுப்புவது என்ற அமெரிக்க அதிபர் ஒபாமாவின் முடிவு, தங்களின் எதிர்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்று ஆப்கானில் உள்ள தாலிபான்கள் கூறியுள்ளனர்.

அமெரிக்காவின் போர் உக்திகள் வெற்றி பெறாது என்றும், இது வெளிநாட்டுத் துருப்புக்கள் மத்தியில் அதிக அளவில் உயிர் இழப்பைத்தான் ஏற்படுத்தும் என்றும் தாலிபான்கள் ஒரு அறிக்கையில் கூறியுள்ளனர்.

தாலிபான்களால் வெல்ல முடியாது என்ற செய்தியை வலுவாக எடுத்துக் கூறவும், கிளர்சியை விட்டு கௌரவமான வழியில் வெளியேற அவர்களுக்கு ஒரு பாதையை அமைக்கவும் தான் கூடுதலாக கொடுக்கப்படும் வளங்களை பயன்படுத்த விரும்புவதாக ஆப்கானில் உள்ள அமெரிக்க மற்றும் நெட்டோ நேசப் படைகளின் தளபதியான ஜெனரல் ஸ்டான்லி மெக்கிரிஸ்டல் தெரிவித்துள்ளார்.


18 மாதங்களில் நாட்டின் பாதுகாப்பை பொறுப்பேற்க முடியும் என்கிறார் ஆப்கானின் வெளியுறவு அமைச்சர்

ஆப்கானில் இருக்கும் அமெரிக்க படையினர்
ஆப்கானில் இருக்கும் அமெரிக்க படையினர்
சர்வதேச உதவியுடன், ஆப்கன் ராணுவப்படைகள் நாட்டின் பாதுகாப்புக்கு 18மாதங்களில் பொறுப்பேற்றுக்கொள்ளத் தொடங்க முடியும் என்று ஆப்கன் வெளியுறவு அமைச்சர் ரங்கின் டட்பார் ஸ்பண்டா கூறியுள்ளார்.

ஆயினும், அண்டை நாடான பாகிஸ்தானின் ஆட்சியாளர்கள், இந்த திட்டமிடப்பட்ட துருப்பு அதிகரிப்பு அதன் எல்லைகளுக்குள் ஒரு மோசமான விளைவையே ஏற்படுத்தும் என்ற தமது கவலையை மீண்டும் வெளியிட்டிருக்கிறார்கள்.

இதற்கிடையே, நேட்டோவின் தலைவர், ஆண்டர்ஸ் பாக் ராஸ்முசென், கூட்டணியின் உறுப்பு நாடுகளும் அதன் கூட்டாளிகளும் 2010ம் ஆண்டில் ஆப்கானிஸ்தானுக்கு குறைந்தது 5000 கூடுதல் படையினரை அனுப்பப்போவதாகக் கூறியிருக்கிறார்.


போபாலில் விஷவாயு கசிவு ஏற்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு

போராடும் ஆர்வலர்கள்
போராடும் ஆர்வலர்கள்
1984 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி இரவு, இந்தியாவின் போபால் நகரில் இருந்த அமெரிக்க நிறுவனமான யூனியன் கார்பைட் ஆலையில் ஏற்பட்ட விஷ வாயு கசிவில் பலர் இறந்தனர்.

இந்தச் சம்பவம் இடம் பெற்று 25 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும், இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கான முழுமையான நிவாரணம் இன்னமும் கிடைக்கவில்லை என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

பாதிக்கப்பட்டவர்களின் சம்மதம் இல்லாமலேயே இந்திய அரசு யூனியன் கார்பைட் நிறுவனத்துடன் இழப்பீட்டுக்கான ஒப்பந்தத்தை செய்து கொண்டது என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்துகிறார்கள்.

இது தொடர்பில் போபால் விஷவாயு கசிவுச் சமபவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பல ஆண்டுகளாக குரல் கொடுத்துவரும் ஜென்னி டாலி அவர்கள் தமிழோசையிடம் தெரிவித்த கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறி வருவது ஏன்?

தங்கக் கட்டிகள்
தங்கக் கட்டிகள்
உலக அளவில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருக்கிறது. அதுவும் கடந்த சில மாதங்களில் தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

தங்கத்தின் தேவைக்கும் உற்பத்திக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி இருப்பதும், அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதுமே தங்கத்தின் விலை ஏற்றத்துக்கு முக்கிய காரணம் என்று சென்னை பொருளாதாரப் பள்ளியின் முன்னாள் இயக்குநர் டாகட்ர் யூ ஷங்கர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு அமெரிக்காவில் துவங்கிய உலகப் பொருளாதார நெருக்கடியின் காரணமாக மக்களிடையே தங்கத்தின் முதலீடு செய்வது என்பது பாதுகாப்பானது என்கிற எண்ணமும் தங்கத்தின் தேவையை உயர்த்தியுள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

அமெரிக்காவின் ஏற்றுமதியை விட இறக்குமதியின் அளவு மிகவும் அதிகமாக இருப்பதாலேயே அமெரிக்க டாலரின் வீழ்ச்சிக்கான காரணமாகவும் அமைந்துள்ளது என்றும் அவர் கருத்து வெளியிடுகிறார்.

இன்னும் பத்தாண்டுகளுக்கு டாலரின் மதிப்பு உயருவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் அவர் கூறுகிறார்.

இதே வேளை சீனாவின் ஏற்றுமதி மிக அதிக அளவில் இருப்பதாகவும், அவர்களிடம் இருக்கும் இரண்டாயிரம் பில்லியன் டாலர்கள் அளவுக்கான கையிருப்பை இதுவரை அமெரிக்க அரசின் முதலீடுகளில் செய்து வந்ததாகவும், அங்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பிறகு அந்த பணத்தில் தங்கம் வாங்க முன்வந்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டுக்கிறார்.

டாலருக்கு மாற்றாக வேறு ஒரு நாணயம் இன்னமும் உலகளவில் ஏற்றுக் கொள்ளாத நிலை இருப்பதாலும், சர்வதேச வர்த்தகம் இன்னமும் டாலரிலேயே செய்யப்பட்டு வருவதாலும் தங்கம் ஒரு பாதுகாப்பான வைப்பாக கருதப்படுகிறது என்றும் அவர் கருத்து வெளியிடுகிறார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’