
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை அடுத்து யாழிலிருந்து தீவுப்பகுதிகளுக்குச் செல்லும் அல்லைப்பிட்டி மற்றும் பொன்னாலை ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த சகல சோதனை நடவடிக்கைகளும் முற்றாக நீக்கப்பட்டுள்ளதுடன் தீவுப்பகுதிக்கான கடற்றொழில் பாஸ் அனுமதியும் அகற்றப்பட்டுள்ளது.
கடந்த கால யுத்த நடவடிக்கைகளால் யாழிலிருந்து பண்ணை ஊடாக தீவுப்பகுதிகளுக்கும் பொன்னாலை ஊடாக காரைநகருக்கும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஏற்படுத்தப்பட்டிருந்த சோதனைச்சாவடிகளில் இன்றுமுதல் பிரயாணம் செய்யும் பொதுமக்களுக்கான சோதனை நடவடிக்கைகள் அனைத்தும் முற்றாக நீக்கப்பட்டுள்ளன.
யுத்த நடவடிக்கைகளால் யாழ். குடாநாட்டில் மக்கள் பாவனைக்கு விடுவிக்கப்படாதிருக்கும் பிரதேசங்கள் பொது மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் தடைகள் மற்றும் வீதி சோதனைகள் உட்பட பொதுமக்களுக்கு இடையூறாகவுள்ள காவலரண்கள் என்பன அண்மை நாட்களாக அமைச்சர் தேவானந்தா அவர்கள் உரிய அதிகாரிகளுடன் நடத்திவரும் பேச்சுவார்த்தை நடவடிக்கைகளை அடுத்து அகற்றப்பட்டு வருவது தெரிந்ததே. அண்மையில் கீரிமலைக்கு அண்மையிலுள்ள இராணுவ தடுப்புச் சாவடியும் பருத்தித்துறை உயர் பாதுகாப்பு வலயமும் அகற்றப்பட்டு பொது மக்களுக்கு ஏற்ற வகையில் இலகுபடுத்தப்பட்டிருந்திருந்தது.
இதன் மற்றுமோர் கட்டமாக கடந்தவாரம் தீவுப்பிரதேசங்களுக்கும் பொன்னாலை பிரதேசத்திற்கும் விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோர் பொது மக்களுக்கு இடையூறாகவுள்ள மக்கள் பாவனையற்ற முக்கிய பிரதேசங்கள் பாதுகாப்பு தடைகள் என்பவற்றை நேரடியாக சென்று அவதானித்ததுடன் இவை தொடர்பாக தீவக மற்றும் பொன்னாலை பிரதேச கடற்படை கட்டளை அதிகாரிகளுடனும் பேச்சு வார்த்தை நடாத்தியிருந்தனர்.
இந் நிலையில் இன்றையதினம் முதல் யாழிலிருந்து காரைநகர் மற்றும் யாழிலிருந்து பண்ணை ஊடான சகல தீவுப்பகுதிகளுக்கும் செல்லும் அல்லைப்பிட்டி உட்பட சகல சோதனை நடவடிக்கைகளும் முற்றாக நீக்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக இன்றையதினம் தீவுப்பகுதிகளுக்கான போக்குவரத்தை மேற்கொண்ட இலங்கைப் போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பஸ்களில் பயணம் மேற்கொண்ட பயணிகள் எவ்வித சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமலும் வாகனங்களில் இருந்து இறக்கப்படாமலும் பயணத்தைத் தொடர அனுமதிக்கப்பட்டனர். மேலும் வேலணை ஊர்காவற்றுறை பிரதேசங்களில் கடற்றொழில் மேற்கொள்ள விசேட பாஸ் அனுமதி எதுவும் இன்றி குடாநாட்டின் ஏனைய பிரதேசங்களைப் போன்று கடற்றொழல் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்டுவரும் தொடர் நடவடிக்கை காரணமாக அடுத்து வரும் சில தினங்களில் யுத்த நடவடிக்கைகளால் ஏற்படுத்தப்பட்டிருந்த மீதமிருக்கும் பல்வேறு தடைகளும் கட்டங்கட்டமாக அகற்றப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’