வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
பெரியசாமி சந்திரசேகரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெரியசாமி சந்திரசேகரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 4 ஜனவரி, 2010

அமைச்சர் சந்திரசேகரனின் இறுதிக் கிரியை இன்று: பல்லாயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி

மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ. சந்திரசேகரனின் இறுதிக்கிரியை இன்று தலவாக்கலை பொது மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
பூரண அரச மரியாதையுடன் இன்று பிற்பகல் 4 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தலவாக்கல்லை லிந்துல நகரசபை மண்டபத்தில் நேற்று முன்நாள் சனிக்கிழமை மாலை முதல் வைக்கப்பட்டுள்ள அமைச்சரின் பூதவுடலுக்கு மஹிந்த ராஜபக்ஷ நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் பூதவுடல் வைக்கப்பட்டிருந்த தலவாக்கல்லை லிந்துலை நகரசபை கட்டிடத்திற்கு வருகை தந்திருந்தார்.

இ.தொ.கா. பொதுச் செயலாளரும் இளைஞர் வலுவூட்டல் மற்றும் சக, பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான், பிரதியமைச்சர்களான முத்து சிவலிங்கம், எஸ். ஜெகதீஸ்வரன், மத்திய மாகாண தமிழ் கல்வியமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன், ஊவா மாகாண சபை உறுப்பினர் ஏ.அரவிந்த்குமார், ம.ம. முன்னணி அரசியல் அமைப்பாளர் எல். பாரதிதாசன் முதலானோர் ஜனாதிபதியை வரவேற்றார்கள்.

அமரர் சந்திரசேகரனின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, திருமதி சாந்தினி சந்திரசேகரன் மற்றும் அமைச்சர் சந்திரசேகரனின் தாயார், பிள்ளைகள் எல்லோருக்கும் ஆறுதல் கூறினார்.

அஞ்சலி செலுத்திய பின்னர் நகரசபை மண்டபத்தின் முன்றிலில் குழுமியிருந்த மக்களைச் சந்திப்பதற்காக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஜனாதிபதியை அழைத்துச் சென்றார்.

அங்கு சென்ற ஜனாதிபதியை சோகத்துக்கு மத்தியிலும் மகிழ்ச்சி பொங்க குழுமியிருந்த மக்கள் கையசைத்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்கள்.
பின்னர் ஜனாதிபதி ஹெலிகொப்டர் மூலம் கொழும்பு திரும்பினார்.

நேற்றைய அஞ்சலி நிகழ்வில் பங்கு கொண்டோர் நேற்று தலவாக்கல்லை லிந்துலை நகரசபை மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த அமரர் சந்திரசேகரனின் பூதவுடலுக்கு பிரதியமைச்சர்கள் வீ. புத்திரசிகாமணி, நவீன் திஸாநாயக்க, செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ். இராஜரட்ணம், இ.தே.தோட்டத் தொழிலாளர் சங்கத் தலைவர் எம். நடராஜபிள்ளை உட்பட பலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

கட்டுக்கடங்காத கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை மலையகத்தின் பல பாகங்களிலுமிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வருகை தந்திருந்ததோடு கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் பொலிஸார் பெரும் சிரமத்தை எதிர்நோக்க வேண்டியிருந்தது.

வெள்ளி, 1 ஜனவரி, 2010

அமைச்சர் பெரியசாமி சந்திரசேகரன் மாரடைப்பால் காலமானார்


சமூக அநீதி ஒழிப்புத்துறை அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான பெரியசாமி சந்திரசேகரன் இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார்.
இறக்கும் போது அவருக்கு வயது 52 ஆகும்.

இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, அமைச்சரை உடனடியாக கொழும்பின் நவலோக வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்ற போதும் அங்கு அவர் உயிர்பிரி;ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



மலையகத்தில் பிரபல அரசியல்வாதியாக திகழ்ந்த அவர்,பல்வேறு போராட்டங்களிலும் பங்குபற்றியவராவார்.

1957 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் திகதி பிறந்த சந்திரசேகரன், முதன்முதலாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மூலம் அரசியலுக்கு பிரவேசித்தார்.

இதற்கு முன்னர் அவர் வகித்து வந்த சமாதான நீதிவான் பதவியே அவரை சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்துக்கு கொண்டு சென்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இருந்து விலகிய அவர் மலையக மக்கள் முன்னணியை தோற்றுவித்து, புளொட் அமைப்புடன் இணைந்து முதலாவது மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார்.

இதன் பின்னர் நாடாளுமன்றத்திற்கு தெரிவான அவரின் ஆசனம் மூலமே 2001 ஆம் ஆண்டு சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அரசாங்கம் ஆட்சி அமைக்க கூடியதாக இருந்தது.

இந்தநிலையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கிவந்த அவர், தற்போது அரசாங்கத்தின் அமைச்சராக இருந்து வந்தார்.

இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் சந்திரசேகரன் உலகளாவிய ரீதியில் தமிழ் தலைவராக மதிக்கப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் பிரதிநிதியாகவும் செயற்பட்டு வந்தார்.மலையகத்தில் தனி அலகு கொள்கையை இவரின் கட்சி கொண்டிருந்ததுடன் மலையகத்தின் பிரச்சினைகளை வெளயுலகிற்கும் கொண்டு சென்றது.