வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 26 ஏப்ரல், 2013

வடக்கில் மட்டும் அல்ல தெற்கிலும் தேவையின் நிமித்தம் காணிகளை சுவிகரிக்கப்படுகின்றது: பஷில்



ரசாங்கம் வடக்கில் மட்டும் அல்ல தெற்கிலும் தேவையின் நிமித்ததம் காணிகளை சுவிகரித்துவருகின்றது. வீதிகளை நிர்மாணிக்கும்போதும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை கொண்டு நடத்தும்போதும் இவ்வாறு காணிகளை பெறவேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இருக்கின்றது. அதனை விடுத்து வடக்கில் மட்டும் விசேடமாக அரசாங்கம் காணிகளை பெறுவதாக யாரும் எண்ணக்கூடாது என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிக்குமாறு கோருவதன் மூலம் வடக்குத் தேர்தலை தாமதப்படுத்தும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் இறங்கியுள்ளமை தெளிவாகின்றது. மேலும் வடக்குத் தேர்தலுக்கு வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களை நியமிக்கவேண்டுமா? இல்லையா என்பதனை தேர்தல்கள் ஆணையாளரே தீர்மானிக்கவேண்டும். இது தொடர்பில் அரசாங்கம் தீர்மானம் எடுக்க முடியாது என்றும் அவர் கூறினார். வடக்கில் காணிகளை அரசாங்கம் அபகரிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் மற்றும் வடக்குத் தேர்தலுக்கு முன்னர் சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிக்கவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரியுள்ளமை போன்றவை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். வடக்குத் தேர்தலுக்கு முன்னர் சுயாதீன பொலிஸ் மற்றும் சுயாதீன தேர்தல் ஆணைக்குழுக்களை நியமிக்கவேண்டும் என்றும் வடக்குத் தேர்தலை கண்காணிக்க வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களை வரவழைக்கவேண்டும் என்றும் ஐக்கிய தேசிய கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கோரியுள்ளன. இந்நிலையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில் பொதுவாக எதிர்க்கட்சிகள் தேர்தலின் பின்னரே தோல்விக்கான காரணங்களை அடுக்கிகொண்டு செல்வது வழக்கம். ஆனால் வட மாகாண சபைத் தேர்தலை பொறுத்தமட்டில் எதிர்க்கட்சிகள் தற்போதே காரணங்களை தேடுவதற்கு ஆரம்பித்துள்ளன. வடக்குத் தேர்தல் நடைபெறுவதே சந்தேகம் என்று ஆரம்பத்தில் கூறிவந்தனர். உண்மையில் அனைத்து மீள்குடியேற்றங்களை செய்துவிட்டே வடக்குத் தேர்தலை நடத்தவேண்டும் என்றே நானும் தனிப்பட்ட முறையில் கருதினேன். ஆனால் வடக்குத் தேர்தலை செப்டெம்பர் மாதம் நடத்தவேண்டும் என்று ஜனாதிபதி தீர்மானித்துவிட்டார். எனவே வட மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போது எதிர்க்கட்சிகள் சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிக்குமாறு நிபந்தனைகளை விதிப்பதன் மூலம் வட மாகாண சபைத் தேர்தலை தாமதிக்க முயற்சிப்பதாகவே தெரிகின்றது. ஜனாதிபதித் தேர்தலையும் பாராளுமன்றத் தேர்தலையும் வடக்கில் நடத்த முடியுமானால் ஏன் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது? என்று கேள்வியெழுப்பிய எதிர்க்கட்சிகள் இன்று வடக்குத் தேர்தலுக்கு முன்னர் அதனை நியமியுங்கள் இதனை நியமியுங்கள் என்று நிபந்தனை முன்வைப்பது தேர்தலை தாமதப்படுத்தும் நோக்கிலேயே என்பது தெளிவாகின்றது. இதேவேளை வடக்குத் தேர்தலுக்கு வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களை நியமிக்கவேண்டுமா? இல்லையா என்பதனை தேர்தல்கள் ஆணையாளரே தீர்மானிக்கவேண்டும். இது தொடர்பில் அரசாங்கம் தீர்மானம் எடுக்க முடியாது. ஆனால் வடக்குத் தேர்தலுக்கு கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்துவது குறித்து தேர்தல் ஆணையாளர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அபிப்பிராயத்தை கேட்டால் அதன்போது எமது யோசனையை வழங்க தயாராக இருக்கின்றோம். எது எவ்வாறெனினும் உலகில் எந்தவொரு நாட்டிலும் மாகாணத்தின் தேர்தல் ஒன்றை கண்காணிக்க வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்படுவதில்லை. தேசிய மட்டத் தேர்தல்களுக்கே இவ்வாறு சில வேளைகளில் கண்காணிப்புகள் மேற்கொள்ளப்படும். வடக்கில் காணிகள் பெறப்படுவதாக குற்றம் சுமத்தப்படுகின்றது. வடக்கில் காணி பெறப்படுவது தொடர்பில் பாதிக்கப்படுகின்றவர்கள் முறைப்பாடு செய்யலாம். அவ்வாறு செய்தால் அவர்களுக்கான நட்டஈடுகள் மற்றும் நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். மேலும் அரசாங்கம் வடக்கில் மட்டும் அல்ல தெற்கிலும் தேவையின் நிமித்ததம் காணிகளை சுவிகரித்துவருகின்றது. வீதிகளை நிர்மாணிக்கும்போதும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை கொண்டு நடத்தும்போதும் இவ்வாறு காணிகளை பெறவேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இருக்கின்றது. வீதி நிர்மாணம் எனும்போது இவ்வாறு காணிகளை பெறுவது வழக்கமாகும். அவற்றுக்கு உரிமையாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காகவும் காணிகள் பெறப்படும். தெற்கு அதிகவேக வீதிக்காக எத்தனையோ காணிகள் பெறப்பட்டன. அவற்றுக்கு தேவையான நிவாரணங்கள் வழங்கப்பட்டன. தற்போது வடக்குக்கான அதிவேக வீதி நிர்மாணிக்கப்படவுள்ளது. அதற்கு கம்பஹா மாவட்டத்தில் அதிக காணிகள் பெறப்பட்டுள்ளன. அதனை விடுத்து வடக்கில் மட்டும் விசேடமாக அரசாங்கம் காணிகளை பெறமுயற்சிப்பதாக எண்ணக்கூடாது. வீதிகளை நிர்மாணிக்கும்போதும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை கொண்டு நடத்தும்போது காணிகள் பெறப்படும். அரசாங்கம் வடக்கில் மட்டும் காணிகளை சுவிகரிப்பதாக எண்ணக்கூடாது. தேவையின் நிமித்தம் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் காணிகள் பெறப்படும். அவ்வாறு இடம்பெற்றும் வருகின்றது என்றார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’