வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 25 ஆகஸ்ட், 2012

ஆளும் கட்சிக்கு வாக்களிப்பதன் மூலம் தமிழ் வேட்பாளர்கள் எவரும் தெரிவு செய்யப்பட மாட்டார்கள்: சம்பந்தன்



மிழ் மக்கள் ஆளும் கட்சிக்கு வாக்களிப்பதன் மூலம் தமிழ் வேட்பாளர்கள் எவரும் மாகாண சபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படமாட்டர்கள் எனவே அரசாங்க கட்சிக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டாம் என்று கேட்டுக கொள்கின்றேன். என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கல்லடியிலுள்ள பேச்சியம்மன் ஆலய முன்றலில் நேற்று மாலை நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்துரையாற்றிய இரா. சம்பந்தன், 'கிழக்கு மாகாண சபை தேர்தலில் அரசாங்க கட்சிக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க கூடாது. ஒரு சில தமிழ் மக்கள் அரசாங்க கட்சிக்கு வாக்களிப்பதன் மூலம் அரசாங்க கட்சியில் போட்டியிடுகின்ற எந்தவொரு தமிழரும் தெரிவு செய்யப்படமாட்டர்கள். மாறாக, தமிழ் மக்கள் அரசாங்க கட்சிக்கு அளிக்கும் சொற்ப வாக்கு அரசாங்க கட்சிக்கு உதவும். ஆனால், தமிழர் எவரும் தெரிவு செய்யப்படமாட்டார்கள். இதன் மூலம் வேறு இனத்தவர் தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புக்களே உண்டு. எனவே தான் அரசாங்க கட்சிக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க கூடாது. இந்த விடயத்தை அவர்களுக்கும் எடுத்துக் கூறி அவர்களையும் எமக்கு வாக்களிக்க வைக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது அவசியமான வடமாகாண சபை தேர்தலை நடத்தவில்லை. வட மாகாண சபை தேர்தலை நடத்துவதற்காக பல திகதிகளை அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இப்போது 2013 அடுத்த ஆண்டு புரட்டாசி மாதம் வட மாகாண சபை தேர்தலை நடத்தப் போவதாக கூறுகின்றனர். வட மாகாணம் தமிழ் மக்களுள்ள மாகாணம் அங்கு தேர்தலை நடாத்தினால் நிச்சயம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றியடைந்து விடும் என்ற பயம் அரசாங்கத்திற்கு இருப்பதனாலும் அவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால் தமிழ் மக்கள் கொள்கையில் உறுதியாக இருக்கின்றார்கள் என்ற கருத்து வெளிவரும் சர்வதேசத்தில் தமிழ் மக்களின் உரிமை போராட்டத்தை பொறுத்த வரையில் அவர்களுக்கு பலமாக அமையும் என்பதனாலும் வடமாகாண சபை தேர்தலை நடத்தப் போவதில்லை. தேர்தலை வடமாகாணத்தில் வைப்பது தங்களுக்கு உதவப் போவதில்லை என்பதை அரசாங்கம் கருதுகின்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் மத்திய அரசாங்கத்தில் ஒரு பங்காளியா இருப்பதனால் கிழக்கு மாகாண சபையை கலைத்து அங்கு ஒரு தேர்தலை நடத்தினால் அரசாங்கம் இலகுவாக வெற்றி பெறலாம் என ஜனாதிபதி எதிர்பார்த்தார். சர்வதேச சமூகம் அரசாங்கத்தின் மீது தற்போது செலுத்துகின்ற அலுத்தங்களுக்கு பதில் கூற வேண்டும். மக்கள் எங்களுடன் இருக்கின்றார்கள், மக்கள் எம்மை ஆதரிக்கின்றார்கள், மக்கள் எம்மை தெரிவு செய்திருக்கின்றார்கள், மக்கள் எம் மீது நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள் ஏன் எங்கள் மீது அழுத்தங்களை செலுத்து கின்றீர்கள் அதை நீங்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என அரசாங்கம் சர்வதேச சமூகத்திடம் கூறுவதற்காகத்தான் இந்த தேர்தலை நடத்துகின்றோம் என அமைச்சர்கள் பகிரங்கமாக கூறுகின்றனர். கிழக்கு மாகாண சபை தேர்தலை அரசாங்கம் நடத்துவதற்கான ஒரே ஒரு காரணம் இது தான். துரதிஷ்டவசமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து கேட்பதென்ற முடிவை எடுத்த பிறகு முஸ்லிம்கள் மத்தியில் அது ஏற்றுக்கொள்ளக் கூடிய முடிவாக அது அமையவில்லை. முஸ்லிம்களுக்கு தனிப்பட்ட முறையில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. காணி மற்றும் பாதுகாப்பு தொழில் மற்றும் தங்களது பள்ளிவாயல்கள் மற்றும் கலாசாரம் தொடர்பான பிரச்சினைகள் அவர்களுக்குள்ளன. இந்த மாகாண சபையின் ஒழுங்கு தமிழ் மக்களின் நீண்ட கால போராட்டத்தின் காரணமாக உற்பத்தியான ஒரு ஒழுங்கு அதிகார பகிர்வை எதிர்த்த மத்திய அரசாங்கத்துடன் நாங்கள் சேர்ந்து நாங்கள் தமிழர்களுக்கு எதிராக போட்டியிட்டால் அதை தமிழ் மக்கள் ஒரு போதும் ஏற்றக்கொள்ள மாட்டார்கள். ஒரு பகமை எங்களுக்குள் ஏற்படும் என்ற காரணத்தினையும் முஸ்லிம் மக்கள் கூறினார்கள் இவ்வாறான காரணங்களினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று தனித்து போட்டியிடுகின்றது. அரசாங்கம் முன்னர் எதிர்பார்த்தது போன்று இலகுவாக வெற்றியடையக் கூடிய நிலைமை இந்த தேர்தலில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதனால் அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் ஒரு பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த தேர்தலில் இன்று முன்நிலையில் நிற்கின்றது. கூடுதலான உறுப்பினர்களை பெறுகின்ற கட்சியாகவும் கூடுதலான வாக்குகளை பெறுகின்ற கட்சியாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரலாம் என்ற எதிர்பார்ப்பு உண்டு. வடமாகாண தேர்தலை நடத்தியிருந்தால் எந்த முடிவு வந்திருக்குமோ அதே முடிவு கிழக்கு மாகாண சபை தேர்தலிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வந்து விடும் சர்வதேச சமூகத்திற்கு அந்த முடிவு பலம் கொடுத்திருக்கும் சர்வதேச சமூகத்தை ஏற்றக்கொள்ள வைத்து விடும் என்ற பயம் அரசாங்கத்திற்குண்டு. சர்வதேச சமூகத்தினுடைய பங்களிப்பை அவர்களுடைய தீர்மானத்தின் மூலமாக நிறைவேற்றுதற்கு தமிழ் மக்களுடைய தீர்வு அமையப்போகின்றதா அல்லது இலங்கை அரசாங்கம் அவர்களுக்கு முன்னாள் ஒரு சாட்டைக் கூறுவதற்கு ஒரு தவறான கருத்தை கூறுவதற்கு வசதியாக தமிழ் மக்களுடைய தீர்வு அமையப்போகின்றதா இல்லையா என்பதுதான் தமிழ் மக்கள் முன்னிலையிலுள்ள ஒரே ஒரு கேள்வியாகும். இதை சரியாக தமிழ் மக்கள் விளங்கி வாக்களிக்க வேண்டும். இந்த தேர்தலில் தமிழ் மக்கள் தமது வாக்குகளை அளிக்க வேண்டும். குறைந்தது 75 அல்லது 80 வீதம் வாக்களிப்போமாக இருந்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில் குறைந்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு எட்டு உறுப்பினர்களை பெறலாம். அம்பாறையில் 3 ஆசனங்களையும் திருகோணமலையில் 5ஆசனங்களையும் பெறுவதற்கான சந்தர்ப்பமுண்டு. அதேபோன்று இரண்டு போனஸ் ஆசனங்களையும் பெற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைக்க கூடிய சந்தர்ப்பமுண்டு. இதில் போனஸ் ஆசனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெறுவதற்காக நாம் கூடுதலான வாக்குகளை அளிக்க வேண்டும்' என்றார். இக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர்கள் பலரும் உரையாற்றினர். நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் உரையாற்றுகையில், ஜெனிவாவில் இலங்கையில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அழிவின் ஒரு அத்தியாயமாக இடைவிவாதம் நடக்கவிருக்கின்ற நிலையில், அதனைத் திசைதிருப்பவே கிழக்குமாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுவதாக கூறினார். அவர் மேலும் உரையாற்றுகையில், 'ஜெனிவாவிலே மிக முக்கியமாக இடைவிவாதம் ஒன்று தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அழிவின் ஒரு அத்தியாயமாக நடக்க இருக்கின்றது. கிழக்கு மாகாண சபையை ஒரு வருடங்களுக்கு முன்பாகவே நடத்தி, அவ்விவாதத்தை திசை திருப்புவதற்காக அரசாங்கம் ஒரு தேர்தலை அறிவித்து அதிலே பங்குபற்றவேண்டிய நிர்ப்பந்தமான சூழலிலே நாங்கள் இருக்கின்றோம். ஜெனிவா தீர்மானத்தின் இறுதிக்கட்டம் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறவிருக்கின்ற நிலையில் அனைவரையும் திசை திருப்புவதற்காக வடமாகாணசபைத் தேர்தலை அரசு நடத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஒரு மாதத்திற்கு முன்னர் வவுனியாவில் தங்களது விடுதலைக்காக போராடிய 35 சிறைக்கைதிகள் அங்கிருந்த சிறைக் காவலர்களால் அடித்து நொறுக்கப்பட்டு அவர்களது கை கால்கள் உடைக்கப்பட்டு நிமலரூபன் கொல்லப்பட்ட சூழலில் டில்ருக்ஷன் 16 நாட்களுக்குப் பின்னர் கோமாநிலையில் இருந்து பின் அவரும் கொல்லப்பட்டு இன்னும் இரண்டு கைதிகள் இயங்க முடியாத நிலையில் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். மற்றைய 31பேரின் நிலவரம் என்னவென்று தெரியாத சூழலில் நாங்கள் ஒரு தேர்தலுக்கு முகங்கொடுக்கின்றோம். நாங்கள் நிமலரூபனுடைய இறுதிச் சடங்கிற்கு சென்றிருந்தபோது அவருடைய கால்கள் இரண்டும் அடித்து முறிக்கப்பட்டிருந்ததையும் மிக மோசமாக தாக்கப்பட்டு அவர் கொல்லப்பட்டிருந்ததையும் அவதானித்தோம். டில்ருக்ஷன் 16 நாட்கள் கோமாவில் படுத்திருந்த கட்டிலோடு விலங்கிடப்பட்ட நிலையில், ஆசியாவின் ஆச்சரியமான இலங்கை நாட்டில் மரணத்தை தழுவினார். நாங்கள் தமிழீழத்திற்காக போராடி ஆயிரம் ஆயிரம் உயிர்களுக்கு மண்ணள்ளிப்போட்டு பூப்போட்டு தரவையிலும் தாண்டியடியிலும் கோமாரியிலும் ஆயிரம் உயிர்களை புதைத்துவிட்டு வடக்கும் கிழக்கும் இணைந்திருந்த தாயக மண்ணின் பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் அதிகாரங்களை பெறுவதற்காக இங்கு கூடியிருக்கின்றோம். இந்தியாவில் இருக்கின்ற மொழிவாரி அடிப்படையிலான மாகாணங்களில் கூட சில அதிகாரங்கள் ஏதோவொரு வகையில் இருக்கின்றது. ஆனால் எங்களுடைய மண்ணில் நாங்கள் ஒரு ஆட்சிமுறையையும் அதிகாரப்பகிர்வையும் எதிர்பார்த்திருக்கின்ற சூழலில் இலங்கை அரசு எங்களுக்கான எந்தவொரு அதிகாரத்தையும் தரமுடியாத சிங்கள இனவாத வெறியோடு இருக்கின்றது. நாங்கள் இந்த தேர்தலில் பங்குபெறாவிட்டால் சில சக்திகள் இந்த இடங்களில் அமர்ந்து கொள்ளும். இதை தவிர்ப்பதற்காகவே நாங்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றோம். ஒரு அரசாங்க அதிபரை நியமனம் செய்வதற்கோ இடமாற்றம் செய்வதற்கோ அவருக்கு ஒரு அறிவுரை வழங்கவோ முடியாத ஒரு முதலமைச்சரை கொண்ட ஒரு மாகாண சபை, ஒரு உதவி அரசாங்க அதிபரையோ கிராமசேவகரையோ இடமாற்றம் செய்ய முடியாத முதலமைச்சரை கொண்ட ஒரு மாகாண சபை, ஒரு கல்விப் பணிப்பாளரையோ ஒரு ஆசிரியரையோ தான் விரும்பியவாறு நியமிக்க முடியாத, இடமாற்றம் செய்ய முடியாத முதலமைச்சரை கொண்ட ஒரு மாகாண சபை இதுவாகும். எந்த அதிகாரங்களை எப்படி நடைமுறைப்படுத்தலாம் என்பதற்கு ஒரு திட்டமில்லாத பெறுமதியற்ற ஒரு மாகாணசபைக்காக நாங்கள் உங்கள் முன் நின்று பேசுகின்றோம். நீங்கள் அதை கேட்டுக்கொண்டிருக்கின்றீர்கள். வடக்கு கிழக்கு என்பது வரலாற்று ரீதியாக சரித்திரபூர்வமாக எங்களது தாயக மண்ணாகும். மூன்று ஜே.வி.பி. உறுப்பினர்கள் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் காரணமாக மிக எளிமையாக பிரிக்கப்பட்ட வடக்கு கிழக்கின் கிழக்கு மாகாணத்தில் தனியொரு தேர்தலுக்கு நாங்கள் முகங்கொடுக்க இருக்கின்றோம். இந்த தேர்தலில் வென்று நாங்கள் இந்த மக்களுக்கு என்ன செய்யப்போகின்றோம் என்பது உங்கள் மத்தியிலுள்ள பலமான கேள்வியாகும். நாங்கள் அடைய இருக்கின்ற இலட்சியத்தினுடைய ஒரு பாதையாக வாக்குச்சீட்டை பயன்படுத்த வேண்டிய தேவைக்குள் நாங்கள் தள்ளப்பட்டிருக்கின்றோம். இலங்கை சட்டக் கல்லூரியினுடைய அனுமதிப் பரீட்சைக்கான ஒரு புத்தகத்தில் மாகாண சபைகள் 13ஆவது திருத்தச்சட்டம் பற்றிய சரியான தலைப்பு இருந்தது. வடக்கு கிழக்கிலே இருக்கின்ற தமிழர்கள் தன்னாட்சி கேட்டு போராடியதன் விளைவாக உருவாக்கப்பட்டதே இந்த மாகாண சபைகளாகும். ஆனால், அது இன்று அவர்களுக்குப் பெறுமதியாக இல்லை. இலங்கையில் சிங்கள மக்கள் வாழ்கின்ற இடங்களில் ஏனைய ஏழு மாகாண சபைகளும் இயங்கிக்கொண்டிருக்கின்றன. யாருக்காக இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டதோ தீர்வு முயற்சி எடுக்கப்பட்டதோ அவர்கள் அதை ஆளவும் முடியாமல் பயன்படுத்தவும் முடியாமல் திணறுகின்றார்கள். 13 ஆவது திருத்தச் சட்டத்திலே கல்வி, சுகாதாரம், கிராமிய அபிவிருத்தி, நீர்ப்பாசனம் போன்ற துறைகளில் சிறுசிறு அதிகாரங்களை இந்த மாகாணசபை செய்ய முடியும். அதையும் ஆளுனரிடம் கொடுத்து மத்திய அரசிடம் கொடுத்து சட்டமாக்கல் சபையான நாடாளுமன்றத்தில் தீர்மானம் எடுத்ததன் பின்னரே நடைமுறைப்படுத்த முடியும். தேசிய பாதுகாப்பு, போக்குவரத்து, தொலைக்காட்சி, வானொலி, அஞ்சல் தொடர்புகள் எல்லாமே மத்திய அரசின் கீழ் இருக்கும். தமிழர்கள் கடந்த 60 ஆண்டுகளாக போராடினோம். 30 ஆண்டுகளாக அகிம்சை ரீதியாகவும் 30 ஆண்டுகள் ஆயுத ரீதியாகவும் போராடினோம். அதனால் பெற்றது கிழக்கிற்கும் வடக்கிற்கும் தனியான மாகாணசபைகளாகும். அதிகாரங்கள் சரியான முறையில் எங்களுக்கு வழங்கப்படாத சூழலில் நாங்கள் ஏன் இந்த தேர்தலில் பங்குகொள்கின்றோம். ஏனென்றால் கடந்த நான்கு ஆண்டுகளாக யார் இந்த மண்ணில் ஆட்சி நடத்தினார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அவர்களால் அரசாங்கத்தோடு ஒட்டியிருந்து என்னவகையான அதிகாரங்களை ஆட்சி முறையை எங்கள் மக்களுக்கு வழங்க முடிந்தது. அவர்களால் எதைச் செய்ய முடிந்தது. நாங்கள் அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் என்று அரசாங்கம் கருதுகின்ற நிலையில் உங்;களுக்கான தீர்வை தரவேண்டுமென்று தெளிவாக இருக்கின்ற நாங்கள் எப்படி இந்த ஆட்சி முறையில் மக்களுக்கு நல்லதை செய்ய முடியும்? நாங்கள் வீடு கட்டித் தருவோம், வீதியமைத்துத் தருவோம், வேலை பெற்றுத் தருவோம் அதனால் நீங்கள் எங்களுக்கு வாக்களியுங்கள் என்று சொன்னால் அதை நீங்கள் நம்ப வேண்டாம். நாம் தமிழர்கள் எங்களுடைய உரிமைப்போராட்டம் இன்னும் முடியவில்லை. இத்தனை ஆண்டுகள் சென்றாலும் வடக்குகிழக்கு என்ற எங்கள் தாயக மண்ணில் எங்கள் இன விடுதலைக்காக ஜனநாயக வழியில் போராடிக்கொண்டிருக்கின்றோம். அந்தப் போராட்டத்தின் ஒரு வடிவமாக இந்த தேர்தலை நாங்கள் சந்திக்கின்றோம். இந்த தேர்தலின் மூலம் தமிழர்கள் ஓரணியாக இணைந்திருக்கின்றார்கள் என்ற செய்தியை உலகிற்கு எங்களால் சொல்ல முடியும். இதைத் தவிர எங்களால் எதுவும் சொல்ல முடியாது. நாங்கள் வாக்களிப்பதன் மூலம் தமிழ் தேசியத்தை நேசிக்கின்ற தேசியவாதிகள் இந்த மண்ணிலே நிலையாக வாழ்கின்ற மக்களுக்கான எதிர்காலத்தை உருவாக்கக்கூடிய வகையில் தங்களுடைய குரல்கள் ஒலிக்கக்கூடிய வகையில் வருவார்கள். அதற்கான சந்தர்ப்பத்தை நாங்கள் உருவாக்க வேண்டும். அதற்கான ஒரு கட்டமாகவே இந்த தேர்தலை நாங்கள் சந்திக்கின்றோம். ஆகவே ஒரு தமிழனாக ஒரு தமிழனுக்கு வாக்களிக்கின்றேன் என்கின்ற உணர்வோடு எம்மவர்களை வாக்களிக்க வையுங்கள். இது எமது போராட்டத்தின் ஒரு வடிவம் என்பதை அவர்களுக்கு சொல்லுங்கள்' என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’