வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 2 மே, 2012

போருக்கு பின்னரும் ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்படவில்லை: இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்


போ ருக்கு பின்னரான காலகட்டத்திலும் ஊடக ஜனநாயகம், ஊடக சுதந்திரம் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை. படுகொலை செய்யப்பட்ட, காணாமல்போன, கடத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணைகளிலும் முன்னேற்றங்கள் ஏற்படவில்லை" என இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கூறியுள்ளது.
இன்று மே 3 ஆம் திகதி வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்படும் சர்வதேச ஊடக சுதந்திரத்தினத்தையொட்டி இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் அ.நிக்ஸன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஊடக நிறுவனங்கள், ஊடகத்துறையினர் மீதான தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள பிணையில் விடுதலை செய்யப்படுவதும் விசாரணைகளை இழுத்தடிப்பதும் இலங்கையில் வழமையாகி வருகின்றது. ஊடகவியலாளர்களுக்கான தொழில் பாதுகாப்புகள் உரிய முறையில் இல்லை. மிரட்டல், ஊடகவியலாளர்களை பின்தொடர்தல் போன்ற எச்சரிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது. வடக்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ் ஊடகவியலாளர்கள் இந்த பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். ஆகவே ஊடக ஜனநாயகம், ஊடக சுதந்திரம் தொடர்பாக பேசும் அரசாங்கம் இந்த விடயங்கள் குறித்து கவனம் செலுத்தி, விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டும். சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டு சட்டத்தின் நிறுத்தப்பட வேண்டும். சர்வதேச ஊடக சுதந்திரத் தினத்தில் அதற்கான உறுதிமொழிகளை வழங்கி ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்துகின்றோம். ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான சட்டங்கள், ஒழுக்கக்கோவைகள் புதுப்பிக்கப்பட்டு நடைமுறைக்கு வரவேண்டும். அது குறித்து அரசாங்கம் ஊடக அமைப்புகளுடன் கலந்துரையாடுவதும் சிறப்பான ஏற்பாடாகும். அதேவேளை வன்னியில் பாதிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கு உதவிகள் வழங்கப்பட வேண்டும். ஊடக தொழிலை மேற்கொள்வதற்கான கருவிகள் மற்றும் வசதி வாய்ப்புகள் போன்றவற்றை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.வன்னி ஊடகவியலாளர்களின் நலன்களில் அரசாங்கம் மத்திரம் அல்ல பொது அமைப்புகளும் கவனம் செலுத்த வேண்டுமென சர்வதேச ஊடக சுதந்திர தினத்தில் கோரிக்கை விடுக்கின்றோம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’