வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 24 ஏப்ரல், 2012

புனித பூமி சட்டத்தில் ஏனைய மதஸ்தலங்களை அகற்ற வேண்டுமென குறிப்பிடப்படவில்லை: ஹலீம் எம்.பி.



1981 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட புனித பூமி சட்டத்தில் ஒரு இடத்திலேனும் புனித பூமியிலுள்ள ஏனைய மதஸ்தலங்கள் அகற்றப்பட வேண்டுமென்று குறிப்பிடப்படவில்லையென கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.
தம்புள்ளை பள்ளிவாசல் மீது அண்மையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்டை ரிவர்சைட் வரவேற்பு மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை மத்திய இலங்கை முஸ்லிம் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்று நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், 'தம்புள்ளை நகரில் சுமார் 70 வருடங்களாக இயங்கிவந்த இப்பள்ளிவாசலுக்கு எதிராக அண்மையில் இடம்பெற்ற சம்பவங்களையிட்டு நாங்கள் ஆழ்ந்த கவலையைடைந்துள்ளோம். புனித பூமி சட்டம் 1981ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அப்போதைய பிரதமர் ரணசிங்க பிரேமதாசவினால் கொண்டுவரப்பட்டது. புனித பூமியில் அமைந்துள்ள ஏனைய மதஸ்தலங்களை அகற்றுமாறு அச்சட்டத்தில் ஒரு இடத்திலேனும் குறிப்பிடப்படவில்லை. நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இவ்வாறான இடங்கள் உள்ளன. கண்டி, கதிர்காமம் போன்ற பிரதேசங்கள் இதற்கு உதாரணங்களாகும். முஸ்லிம்கள் இந்நாட்டில் தனி நாடு கேட்டவர்கள் அல்லவென்பதுடன், சிங்கள அரச காலந்தொட்டு அரசனுக்கு மிகவும் நெருங்கியவர்களாக முஸ்லிம்கள் இருந்துள்ளனர். அரச சபையில் பொறுப்பு வாய்ந்த பதவிகளை முஸ்லிம்கள் வகித்துள்ளனர். இவ்வாறிருக்கும்போது குறிப்பிட்ட சிலரால் மேற்கொள்ளப்பட்ட இச்சம்பவத்தினால் முஸ்லிம்கள் ஆழ்ந்த கவலையடைந்துள்ளனர். இது தொடர்பில் ஏதும் பிரச்சினைகள் காணப்படின் அதனை பேசி தீர்;த்துக்கொள்ள வேண்டும். இல்லாவிடின் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாம்' என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’