வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 8 ஜூலை, 2011

தமிழர் விரோத செயற்பாடுகளை நிறுத்தாவிடின் வட-கிழக்கு மக்களை அணிதிரட்டி நடவடிக்கை: சம்பந்தன்

Fதமிழர் தாயகப் பிரதேசங்களில் அரங்கேற்றப்பட்டு வருகின்ற அனைத்து தமிழர் விரோத நடவடிக்கைகளையும் அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும்.
தவறினால் வடக்கு, கிழக்கு மக்களை அணிதிரட்டி அரசுக்கு எதிரான பிரசாரங்கள், நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இதன் மூலம் அரசாங்கமும் தோற்கடிக்கப்படும். இதற்கு நானே தலைமையேற்பேன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எம்.பி.யுமான இரா. சம்பந்தன் நேற்று சபையில் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்தார்.

தமிழ் மக்களை ஒடுக்கி தீர்வினை இல்லாது செய்யும் நோக்கத்திலேயே யுத்தம் முன்னெடுக்கப்பட்டது என்றே எமது மக்கள் நம்புகின்றனர்.
இந்நிலையில் எமது மக்களின் நம்பிக்கையைப் பெற்றுக் கொள்ளும் வகையில் அரசாங்கம் செயற்பட்டு பிரிவில்லாத இலங்கைக்குள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான தீர்வினை முன் வைக்க வேண்டும். அதற்கு நாம் முழு அளவிலான ஒத்துழைப்பை நல்க தயாராகவே இருக்கின்றோம் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை வடக்கு கிழக்கின் நிலைமை மற்றும் அரசியல் தீர்வு ஆகியவற்றை உள்ளடக்கி சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்றை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே சம்பந்தன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

நாடு சுதந்திரமடைந்து 6 தசாப்தங்களுக்கும் அதிகமாக இடம்பெற்று வருகின்ற முரண்பாடுகளால் சகல இன மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் தமிழ் மக்கள் இதில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலைமை இனியும் தொடரக் கூடாது.
தமிழர் பிரச்சினைக்கு தீர்வு எந்தவகையில் அமைய வேண்டும். எப்படியான தீர்வைக் கொடுக்க வேண்டும். அதற்கான தேவைகள் என்ன என்பன குறித்தெல்லாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது மூன்று முக்கிய உரைகளின்போது தெளிவுபடக் கூறியிருந்தார்.
சர்வகட்சிக் குழுவை அமைத்து அதன் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்ட சந்தர்ப்பத்திலும் யுத்தம் நிறைவடைந்து மறுதினமான 2009 மே மாதம் 19ஆம் திகதி இந்த சபையிலும் மற்றும் ஐ.நா. செயலாளர் நாயகம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோதுமே அவரது தீர்க்கமான உரைகளில் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
அதுமட்டுமல்லாது ஏனைய அரசுகளால் வழங்கப்பட முடியாத அரசியல் தீர்வினை தமது அரசு வழங்க வேண்டும். அதற்கான தருணமும் வந்துள்ளது என்றும் கூறியிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன காலத்தின் பின்னர் இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துக்கே மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரம் கிட்டியிருக்கின்றது.
இவ்வாறு பெரும்பான்மையை கொண்டுள்ள ஜனாதிபதிக்கு திருத்தங்களை முன்வைப்பதற்கும் தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்குமான இயலுமை இருக்கின்றது. எனவே தமிழ் மக்களால் எதிர்பார்த்திருக்கின்ற அபிலாஷைகளை நிறைவேற்றவும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையிலான அரசியல் தீர்வையும் உடனடியாக முன்வைப்பதற்கும் ஜனாதிபதி தயாராக வேண்டும்.

அவ்வாறு இடம்பெறும் பட்சத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பினை வழங்கத் தயாராகவே இருக்கின்றது. அடக்கி ஒடுக்கி அரசியல் தீர்வினை இல்லாது செய்யும் ஒரு நோக்கத்திலேயே யுத்தம் முன்னெடுக்கப்பட்டது என்பதை தமிழ் மக்கள் நம்புகின்றனர்.

தமிழர்களுக்கு எதிரான செயற்பாடு அரங்கேற்றம்

இது இவ்வாறிருக்க தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. நில அபகரிப்புகள், உரிமை மறுப்புக்கள், சுதந்திரமின்மை, கட்டுப்பாடு என அனைத்து வகையிலும் தமிழருக்கு எதிரான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இது அரச ஆதரவுடனேயே இடம்பெற்று வருகின்றன.
இந்த மோசமான நடவடிக்கைகள் செயற்பாடுகள் அனைத்தும் உடனடியõக நிறுத்தப்பட வேண்டும். நம்பிக்கை இழந்துள்ள தமிழ் மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற்றுக்கொள்ளும் வகையில் அரசு நடந்துகொள்ள வேண்டும்.
தமிழர் விரும்பாதவற்றையும் வடக்கு கிழக்கில் இடம்பெற்று வருகின்ற எதிரான செயற்பாடுகளை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் எமது மக்கள் சக்தியைத் திரட்டி அரசுக்கு எதிரான பிரசாரத்தையும், போராட்டங்களையும் முன்னெடுப்போம். இதற்கு நானே தலைமையேற்றிருப்பேன். எமது நடவடிக்கைகளின் மூலம் நாம் அரசாங்கத்தை தோற்கடிப்போம்.
இலங்கை 1947இல் சுதந்திரமடைந்து சிறிது காலத்திலிருந்தே 1956, 1958, 1977, 1980 மற்றும் 1983 ஆகிய ஆண்டுகளில் இடம்பெற்று பெரும் எண்ணிக்கையிலான தமிழ் மக்களை பெரிதும் பாதித்த இனக்கலவரம் எனும் கொடுமைக்கு உள்ளாகி வருகிறது. இலங்கைப் பிரசைகள் என்ற வகையில் நியாயமாகவும் சமமாகவும் நடத்தப்படுவதற்கும் தமது நியாயமான அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாசார அபிலாஷைகளைப் பூர்த்தி செய்தவாறு பாதுகாப்பாகவும் கௌரவத்துடன் வாழ்வதற்கான அடிப்படை உரிமைக்குமான தமிழ் மக்களின் தொடர்ச்சியான கோரிக்கைகளே இவ்வாறான வன்முறைக்கான அடிப்படைக் காரணமாகும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையாக வாழும் தமிழ் மக்களினால் அவர் தம் ஜனநாயகத் தீர்ப்பு மூலம் 1956 முதல் நடைபெற்ற சகல பாராளுமன்ற மற்றும் மாகாண, மாவட்ட மற்றும் உள்ளூராட்சி மட்டத் தேர்தல்களிலும் இக் கோரிக்கை தொடர்ச்சியாக அங்கீகரிக்கப்பட்டு வந்துள்ளது. மேலும் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் தமிழ் மக்களின் இந்த ஜனநாயகத் தீர்ப்பினை அங்கீகரிப்பதற்குத் தவறியமையும் இலங்கைப் பிரசைகளாக நியாயமாகவும் சமமாகவும் நடத்தப்படல் வேண்டும் எனத் தமிழ் மக்கள் விடுத்த தொடர்ச்சியான கோரிக்கைகளுமே தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட இவ்வாறான இனக் கலவரங்களுக்கான மூலகாரணம் ஆகும். மேலும் இலங்கைப் பிரசைகளாக நியாயமாகவும் சமமாகவும் நடத்தப்படல் வேண்டும் எனக் கோரி தமிழ் மக்கள் சுதந்திரம் கிடைத்த காலம் முதற்கொண்டு 1970 களின் நடுப் பகுதி வரை நடத்திய அரசியல் போராட்டங்கள் சமாதானமானவையாகவும் அஹிம்சை வழியிலானதாகவும் இருந்து வந்துள்ளது. மேலும் தமிழ் மக்களுக்கெதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட தொடர்ச்சியான வன்முறைகள், தமிழ் மக்களின் நியாயமான அரசியல் மற்றும் ஏனைய அபிலாஷைகளை அரசியல் ரீதியாக நிறைவேற்றத் தவறியமை மற்றும் நாடு எந்த அரசியலமைப்பின் கீழ் சுதந்திரம் அடைந்ததோ அந்த அரசியலமைப்பினை நீக்கி விட்டு தமிழ் மக்களின் கருத்தொருமிப்பின்றிப் புதிய அரசியலமைப்பினை இயற்றியமை ஆகியவையே சுய நிர்ணய உரிமைக்கான கோரிக்கைக்கும் சுமார் மூன்று தசாப்தகாலம் நீடித்த தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டங்களுக்கும் இட்டுச் சென்றது. இவ் ஆயுதப் போராட்டமானது இந்நாட்டிலுள்ள சகல இனங்களையும் சார்ந்த பொதுமக்களுக்குப் பெருமளவு தீங்கு ஏற்படுத்தி கட்டுக்கடங்காத வன்செயல்களுக்கும், உள்ளூர் மற்றும் பிராந்திய தலைவர்களின் படுகொலைகளுக்கும் வழிவகுத்ததோடு, இக் கட்டுக்கடங்காத வன்செயல்களினால் இலங்கைப் பிரசைகள் என்ற வகையில் நீதிக்கும் சமத்துவத்திற்குமான தமிழ் மக்களது போராட்டத்தின் நியாயத்தன்மை மழுங்கடிக்கப்பட்டது.
இவ் ஆயுதப் போராட்டமானது 2009 மே மாதத்தில் தோற்கடிக்கப்பட்டு முடிவுக்கு வந்துள்ளது. இப்போது இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. பிரிவுபடாத ஐக்கிய இலங்கையில் சம பிரசைகளாக வாழ்வதற்கான தங்கள் விருப்பினைத் தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர். இப்பிணக்கு சம்பந்தப்பட்ட பிரதான விடயங்களை கையாள்வதற்கும் நீண்ட காலமாகப் புரையோடிப் போயுள்ள இப்பிரச்சினைக்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வொன்றை உருவாக்குவதற்கும் பல நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இலங்கை வாழ் பல்வேறு சமூகங்களுக்கும் மக்களுக்கும் மத்தியில் உண்மையான நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வொன்றை உருவாக்குவதற்கும் இப்பிணக்கு சம்பந்தப்பட்ட பிரதான விடயங்களை கையாள்வதற்குமான அவசரத் தேவை மீது இச்சபையினதும் அரசாங்கத்தினதும் நாட்டினதும் கவனத்தை ஈர்ப்பதே இப்பிரேரணையின் நோக்கமாகும்.
1956 ஆம் ஆண்டு கட்டவிழ்த்து விடப்பட்ட இவ்வன்செயல் மற்றும் அதன் பின்னைய தொடர்ச்சி ஆகியவை காரணமாக பெருமளவில் இலங்கைத் தமிழ் மக்கள் இலங்கையிலிருந்து வெளியேறி உலகம் பூராகவுமுள்ள ஏனைய நாடுகளில் புலம்பெயர்ந்தவர்களாகி அல்லது தஞ்சம் தேடுபவர்களாகி இருப்பதனாலும் இப்போக்கினை தடுத்து நிறுத்தி, இந்நாட்டைச் சேர்ந்தவர்களான உண்மையில் இந்த நாட்டுக்கு சட்டபூர்வமாக உரித்துடையவர்களான இலங்கைத் தமிழ் மக்கள் இலங்கையில் தொடர்ந்து வாழக் கூடியதாகச் செய்வது அவசியமானதாகும்.

அம்மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும் அவர்களது கௌரவத்தை மீள ஏற்படுத்துவதும் ஆள்வதற்கான வாய்ப்பைக் கொண்டிருப்பதன் மூலம் தமது சட்டபூர்வ அரசியல், சமூக, பொருளாதார, கலாசார அபிலாஷைகளை அவர்கள் பூர்த்தி செய்யக் கூடியதுமான ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வொன்று இருந்தால் மாத்திரமே இது சாத்தியமாகும்.
ஆயுதப் போர் நடைபெற்ற கால முழுவதும் குறிப்பாக அதன் இறுதி வருடங்களிலும் இறுதிக் கட்டங்களிலும் அதிக எண்ணிக்கையான தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டு அல்லது அங்கவீனமாக்கப்பட்டு, பல இலட்சக்கணக்கான தமிழ் பொதுமக்கள் இடப்பெயர்வுக்கு உட்பட்டு, அவர்களுடைய வீடுகளும் ஏனைய சொத்துக்களும் அழிக்கப்பட்டு, அவர்கள் நிர்க்கதிக்குள்ளாக்கப்பட்டு அடிப்படை வசதிகளுடன் தமது வாழ்வை மீளத் தொடங்க முடியாது.
தற்போதைய சூழ்நிலையில் தம்மைத் தாமே காத்துக் கொள்ள முடியாதுள்ள இந்தளவு பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தமது வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்பக் கூடிய வகையில் அவர்களது அவசர தேவைகளை நிவர்த்தி செய்யக் கூடிய எந்தவொரு வடிவமைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலும் இல்லை.
இம்மக்கள் வரலாற்றுக் காலந்தொட்டு வாழ்ந்து வரும் பகுதிகளில் அரசினாலும் அதன் முகவர்கள் மற்றும் அரசியல் செல்வாக்குடையோர்களாலும் காணி, சமய வழிபாட்டிடங்கள், கலாசார முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு துறைகள் தொடர்பான, அம்மக்கள் மீது அரசியல், சமூக பொருளாதார மற்றும் கலாசார ரீதியாக பாதகமான தாக்கங்களை ஏற்படுத்துகின்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றமையாலும் இவற்றுக்கு பரிகாரம் காணாத விடத்து அது நீண்ட காலத்தில் அவர்களின் எதிர்கால வாழ்வில் பெரும் தீங்கேற்படுத்தும். இப்பிரச்சினைகளனைத்தையும் தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.
(ஐ) முரண்பாட்டிற்கு காரணமான அடிப்படை விடயங்களை தீர்ப்பதற்கான ஏற்றுக் கொள்ளக் கூடியதொரு அரசியல் தீர்வொன்றை துரிதமாக காண வேண்டும். (ஐஐ) இடம்பெயர்ந்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் தமது வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்பவும் மீள ஆரம்பிக்கவும் உதவும் பொருட்டு வடிவமைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலொன்றை துரிதகதியில் நடைமுறைப்படுத்தவும்.
(ஐஐஐ) தமிழ் மக்கள் மீது பாதகமான அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாசார தாக்கங்களை ஏற்படுத்துகின்ற பல்வேறு நடவடிக்கைகளை மாற்றியமைப்பதற்கும் சீர்செய்யவும் மற்றும் நிவர்த்தி செய்யவும் அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது என்றார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’