வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 18 ஜூன், 2011

ஜனாதிபதி மஹிந்தவுக்கு அமெரிக்க நீதிமன்றம் அழைப்பாணை

சி த்திரவதையினால் பாதிக்கப்படுவோரை பாதுகாக்கும் அமெரிக்க சட்டத்தின்கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்றில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அமெரிக்க சமஷ்டி நீதிமன்றமொன்று அழைப்பாணை பிறப்பித்துள்ளது.

இலங்கையில் 3 வெவ்வேறு சம்பவங்களில் கொல்லப்பட்ட சிலரின் உறவினர்களால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் 30 மில்லியன் அமெரிக்க டொலர் நஷ்ட ஈடு கோரி அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கிலேயே ஹேக் உடன்படிக்கையின்கீழ் மேற்படி நீதிமன்றம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பாணை பிறப்பித்துள்ளது.
ஜனாதிபதிக்கான அழைப்பாணை, இலங்கையின் நீதியமைச்சின் செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஹேக் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட நாடுகளில் அமெரிக்காவும் இலங்கையும் அடங்குகின்றன.

மாணவர் ரஜிஹர் மனோகரன், பிரேமாஸ் ஆனந்தராஜா , ரி.தவராஜா ஆகியோரின் உறவினர்கள் இவ்வழக்கை தாக்கல் செய்திருந்தனர்.

ரஜிஹர் மனோகரன் 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொல்லப்பட்ட மாணவர்களில் ஒருவராவார். ஆனந்தராஜா 2006 ஜூன் மாதம் மூதூரில் கொல்லப்பட்ட அக்ஷன் கொன்ட்ரோலா பெய்ம் நிறுவனத்தின் ஊழியர்கள் 17 பேரில் ஒருவராவார் என்பது குறிப்பிடத்தக்கது. ரி.தேவராஜாவின் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது மோதல் தவிர்ப்பு வலயத்திலிருந்த பதுங்குக் குழியொன்றில் வீழ்ந்த எறிகணையினால் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நீதிக்குப் புறம்பான கொலைகளால் இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையின் முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இவ்வழக்கில் பிரதிவாதியாக குறிப்பிட்டுள்ளனர்.
ரஜிஹர் மனோகரனின் தந்தை கலாநிதி காசிப்பிள்ளை மனோகரன், பிரேமாஸ் ஆனந்தராஜாவின் மனைவி கலைச்செல்வி லவன், மற்றும் ரி.தேவராஜா குடும்பத்தினரின் உறவினரான ஜெயகுமார் ஐயாதுரை ஆகியோர் இவ்வழக்கை தாக்கல் செய்துள்ளனர்.
இனஅழிப்புக்கு எதிரான தமிழர்கள் அமைப்பின் அனுசரணையுடன் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அமெரிக்காவின் முன்னாள் உதவி பிரதி சட்டமா அதிபர் புரூஸ்பெய்ன் கடந்த ஜனவரி 28 ஆம் திகதி இம்மனுக்களை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’