வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 16 ஏப்ரல், 2011

2009 ஆரம்பத்தில் பத்தாயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்: ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை

யு த்தத்தின் கடைசி கட்டத்தில் அரச படையினரும் தமிழீழ விடுதலைப் புலிகளும் சர்வதேச மனித உரிமை சட்டங்களை மீறிச் செயற்பட்டுள்ளதான நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள் உள்ளதாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொதுமக்கள் உயிரிழப்பு இல்லாத கொள்கையுடன் மனிதாபிமான மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டதாக அரசாங்கம் கூறியது. ஆனால் அதற்கு முரணாக அரசாங்கத்தினாலும் தமிழீழ விடுதலைப் புலிகளினாலும் சர்வதேச மனிதாபினமாச் சட்டங்கள், சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் ஆகியவை (நிரூபிக்கப்படின்) பரந்தளவில் மீறப்பட்டதாக சுட்டிக்காட்டும் நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகளை நிபுணர் குழு கண்டறிந்துள்ளது என' அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்று பேர் கொண்ட நிபுணர் குழு கடந்த செவ்வாய்க்கிழமை தனது அறிக்கையை ஐ.நா. செயலாளர் நாயகத்திடம் சமர்ப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

அவ்வறிக்கையின் சில பகுதிகள் ஊடகங்களுக்கு கசிந்துள்ளன.
2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி வரையிலானகாலப்பகுதியில் இராணுவத்தினர் வன்னி நோக்கி முன்நகர்ந்த போது பரந்தளவிலான எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் இதனால் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அப்பாவி பொதுமக்களை மனித கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டதாகவும் தமது கட்டுப்பாட்டிலிருந்து தப்பிச் செல்ல முற்பட்டவர்களை கொலைசெய்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
'இந்த இராணுவ நடவடிக்கை வன்னி மக்களை தொந்தரவுக்குள்ளாக்கியது. சுமார் 330,000 பொதுமக்கள் குறைந்து செல்லும் நிலப்பரப்புக்குள் அகப்பட்டனர். எறிகணைத் தாக்குதகளிலிருந்து அவர்கள் தப்பியோடினர். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளினால் பணயக் கைதிகளாக்கப்பட்டனர்.
ஊடகங்களையும் யுத்தத்தை விமர்சித்தவர்களையும் பல்வேறு வழிகளில் அரசாங்கம் அச்சுறுத்தி மௌனமாக்க முயன்றது' என மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'அரசாங்கம், பொதுமக்களை ஒன்றுகுவியுமாறு ஊக்குவித்த 3 மோதல் தவிர்ப்பு வலயங்களிலும் அதிக எண்ணிக்கையிலான எறிகணைத் தாக்குதல்களை நடத்தியது. கனரக ஆயுத பாவனையை நிறுத்துவதாக அறிவித்த பின்னரும் தாக்குதல்கள் நடந்தது. ஐ.நா. நிலையம், உணவு விநியோகத் தொடர் மற்றும் காயமடைந்தவர்களையும் அவர்களின் உறவினர்களையும் ஏற்றிச் செல்வதற்காக வந்திருந்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பல்களுக்கு அருகிலும் அது எறிகணைத் தாக்குதல்களை நடத்தியது.

இத்தாக்குதல்களின் பாதிப்பு குறித்து அதன் சொந்த புலனாய்வு அமைப்பின் மூலமும் ஐ.நா. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஏனையோரின் அறிவித்தல்கள் மூலமும் தெரிந்துகொண்டும் அது எறிகணைத் தாக்குதல்களை நடத்தியது. யுத்தத்தின் கடைசி கட்டத்தில் அரசாங்கத்தின் எறிகணைத் தாக்குதல் காரணமாக இறந்தனர்.' என நிபுணர்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மோதல் வலயத்தில் சிக்கியிருந்த பொதுமக்களின் எண்ணிக்கையை வேண்டுமென்றே அரசாங்கம் குறைத்து மதிப்பிட்டதாகவும் 2009 ஜனவரி

முதல் மே மாதம் வரை பத்தாயிரக கணக்கானோர் உயிரிழந்ததாகவும் அவர்களில் பலர் இறுதி நாட்களில் உயிரிழந்ததாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மறுபுறம் தமிழீழ விடுதலைப் புலிகள், மோதல் வலயத்தின் ஆபத்துக்கு மத்தியிலும் பொதுமக்களை அங்கிருந்து வெளியேற விடாமல் பணயக் கைதிகளாக பயன்படுத்தியதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் 'தமக்கும் முன்னேறி வரும் இலங்கை இராணுவத்திற்கும் இடையிலான மனித கேடயமாகவும் பொதுமக்களை புலிகள் பயன்படுத்தினர்.

யுத்த காலம் முழுவதும் கட்டாயமாக ஆட்சேர்க்கும் கொள்கையை அது (தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ) அமுல்படுத்தியது. ஆனால் யுத்தத்தின் கடைசி கட்டத்தில அந்நடவடிக்கை மிக அதிகரித்தது. 14 வயதான சிறார்கள் உட்பட அனைத்து வயதுப் பிரிவினரும் சேர்க்கப்பட்டனர்.

தமீழீழ விடுதலைப் புலிகள் தமது பாதுகாப்பிற்காக பொதுமக்களை பதுங்கு குழிகளை அமைப்பதற்கு பலாத்காரமாக பயன்படுத்தினர். இதன் மூலம் பேராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான வித்தியாசத்தை குறைத்து பொதுமக்களுக்கு மேலதிக தீங்கை ஏற்படுத்தினர்.

2009 பெப்ரவரி முதல் மோதல் வலயத்திலிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட பொதுமக்களை அருகில்வைத்து சுட்டுக்கொல்ல ஆரம்பித்தமை யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை குறிப்பிடத்தக்களவு அதிகரிக்கச் செய்தது. அவ்வியக்கம் பெரும் எண்ணிக்கையான இடம்பெயர்ந்த மக்கள் உள்ள பகுதிகளிலிருந்து ஆட்டிலறிகளை ஏவியது. அத்துடன் அது இடம்பெயர்ந்த மக்கள் மற்றும் வைத்தியசாலைகள் போன்ற பொதுமக்களுக்கான நிலைகளுக்கு அருகில் இராணுவ கருவிகளை சேர்த்த்து வைத்தது. மோதல் வயத்திற்கு வெளியே தற்கொலைத் தாக்குதல்களை நடத்தும் கொள்கையை அது தொடர்ந்து பின்பற்றியது' என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டிருக்கக்கூடிய 5 வகையான பாரிய குற்றங்கள் தொடர்பான நம்பத் தகுந்த குற்றச்சாட்டுகள் இருப்பதாக நிபுணர் குழு கூறியுள்ளது.

1) பரந்தளவிலான எறிகணைத் தாக்குதல் நடத்தி பொதுமக்களை படுகொலை செய்தமை.

2) வைத்தியசாலைகள் மற்றும் மனிதாபிமான நிலையங்கள் மீது எறிகணைத் தாக்குதல் நடத்தியமை.

3) மனிதாபிமான உதவிகளை மறுத்தமை.

4) இடம்பெயர்ந்த மக்கள் மற்றும் புலிச் சந்தேக நபர்கள் உள்ளிட்ட மோதலினால் பாதிக்கப்பட்டவர்களின் மனித உரிமைகளை மீறியமை.

5) யுத்த வலயத்திற்கு வெளியே ஊடகங்கள் மற்றும் அரசாங்கத்தை விமர்சிப்போர் மீதான அடக்குமுறை உட்பட மனித உரிமை மீறல்
ஆகியனவே அரசாங்கத்தின் மீதான 5 வகை குற்றச்சாட்டுகளாகும்.

அதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகள் மீது 6 வகையான நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள் உள்ளதாக ஐ.நா. நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

1) பொதுமக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தியமை

2) தமிழீழ விடுதலைப் பு புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பிச் செல்லும் பொதுமக்களை கொலை செய்தமை.

3) பொதுமக்கள் நிலைகளுக்கு அருகாமையில் இராணுவக் கருவிகளை பயன்படுத்தியமை

4) சிறார்களை பலாத்காரமாக படையில் இணைத்தமை.

5) பலவந்தமாக ஊழியர்களை வேலையில் ஈடுபடுத்தியமை

6) தற்கொலைத் தாக்குதல்கள் மூலம் பொதுமக்களை படுகொலை செய்தமை ஆகியனவே மேற்படி குற்றச்சாட்டுகளாகும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’