
இதன் அடிப்படையில் யுத்த பிரதேசங்களுக்கு வெளியே இடம்பெற்ற பலவந்தமான அதிகார பிரயோகம், அதிகரித்த அளவு மனித உரிமை மீறல்கள் இடம்பெறச் செய்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் இளைஞர்கள் மீதான சட்டப் புறம்பான கொலைகள், காணாமல் போதல் போன்ற சம்பவங்களை இதற்கு உதாரணங்களாக கொள்ளலாம்.
இலங்கையின் மொத்தச் சனத்தொகை 16 சதவீதமானதாகவே காணப்படும் வேளையில் இந்த கொலைகள் மற்றும் வன்முறைகள் ஏற்புடையதாக இல்லை. இந்த கொலை மற்றும் கடத்தல் வேலைகளை, அரசாங்கத்துடன் இணைந்த துணை இராணுவம் மற்றும் சிறு குழுக்களே மேற்கொண்டு வருவதாக அறிக்கைகள் குறித்து காட்டுகின்றன. இந்த குழுக்கள் அரசியல் நோக்க கொலைகள், மற்றும் கடத்தல்கள், காரணமற்ற கொலைகள் போன்ற சட்டவிரோத செயல்களை அரசாங்கத்துக்காக செய்து வந்தன.
இந்த நிலையில் அரசாங்கம் பாரிய கைது நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இதன்படி அரசாங்கமானது அநாவசிய அவசர கைதுகள், தடுத்து வைப்புகள், முறையற்ற தடுப்பு முகாம்கள், ஊடவியலாளர்களுக்கும், சட்டத்தரணிகளுக்கும் எதிரான வன்முறைகள், சட்டத்துக்கு முரணான செயல்பாடுகள், ஊடகங்களை சுயலாப நோக்கில் பயன்படுத்தல் போன்ற அடிப்படையில் குற்றவாளியாக கருதப்படுகிறது.
இதேவேளை மனித உரிமைகள் கண்காணிப்பாளர்களின் தகவல் அடிப்படையில், ஏராளமான பொதுமக்கள் இராணுவம் மற்றம் துணை இராணுவக்குழுக்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதுடன், அவர்களின் உரிமைகள் மீறப்பட்டு, பல்வேறு துன்புறுத்தல்களுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர். இராணுவத்தினரும் பல சந்தர்ப்பங்களில் பொது மக்கள் மீது நேரடியான அதிகாரங்களை பிரயோகித்துள்ளதுடன், அவர்களை அசௌகரியங்களுக்கு உட்படுத்தியுள்ளனர்.
அந்த நிலையில், இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் மிக்க உயர் மட்டங்கள், பொலிஸ் ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, சட்ட சேவை ஆணைக்குழு போன்ற சுயாதீனக்குழுக்களை நியமிக்க தவறியுள்ளன.
கடந்த வருடம் மே மாதம் இராணுவத்தினர் விடுதலைப்புலிகளை தோற்கடித்து, அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை கொன்றதாக கூறுகின்றனர். இந்த காலப்பகுதியில் அரசாங்கம் பல்வேறு கைது நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், சுதந்திரமாக ஒன்று கூடல், பேச்சு சுதந்திரம், கருத்து வெளியிடும் சுதந்திரம், நடமாட்ட சுதந்திரம் என்பவற்றையும் பாதித்தது.
இதற்கிடையில் இறுதி நேரத்தில் பொது மக்கள் விடுதலைப்புலிகள் அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு செல்ல விடாமல் தடுத்ததுடன், சிறுவர்களையும், வயது வந்தவர்களையும் போராட்டத்தில் கலந்து கொள்ள வைத்தனர். அத்துடன் பொது மக்களின் மத்தியில் தமது ஆயுதங்களை வைத்து, தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இறுதியில் யுத்தம் முடிவுக்கு வரும் தறுவாயில், மே மாதம், விடுதலைப்புலிகள் தெற்கு உள்ளிட்ட இலங்கையின் ஏனைய பிரதேசங்களில் குண்டுத்தாக்குதல்களை நடத்த தீர்மானித்தனர். இந்த தாக்குதல்கள், அரசியல்வாதிகள், சொத்துக்கள் பொது சிவிலியன்களை இலக்கு வைத்ததாக அமைந்தன.
இந்த நிலையில் அரசாங்கமும், அதன் துணை இராணுவ மற்றும் கோசக் குழுக்களும் மனித உரிமைகள் சாசனங்களின் பின்வரும் சரத்துக்களை மீறியுள்ளன.
முதலாவது ஒரு நபரின் தனிப்பட்ட நடமாட்ட சுதந்திரம் உள்ளிட்ட சுய இறைமை மீறப்பட்டுள்ளது.
இதன் படி இலங்கையில் உள்ள தனிப்பட்ட ஒருவரது மரணத்துக்கு முன்போ, அதன் பிறகோ அவருக்கான மதிப்பு கிடைக்கப்பெறுவதில்லை. அதாவது ஒருவர் கைது செய்யப்பட்டால் அவரது நிலைமை என்ன வென்று யாருக்கும் அறியக்கூடியதாக இல்லை. என்பதுடன், கடந்த கால சம்பவங்களின் அடிப்படையில் முறைபாடுகளை மேற்கொள்வதற்கும் உறவினர்கள் அஞ்சுகின்றனர்.
உதாரணமாக கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 13ம் திகதி அங்குலானையில் இரண்டு பெரும்பான்மை இனத்தவர்கள் கைது செய்யப்பட்டனர். எனினும் அவர்களை பொலிஸார், அவர்களின் பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள் ஒருவரையும் பார்ப்பதற்கு அனுமதிக்கவில்லை. இதற்கிடையில் அந்த இளைஞர்கள் இருவரும் குறிப்பிட்ட தினம் ஒன்றில் துப்பாக்கி சூட்டுடன் சடலங்களாக மீட்கப்பட்டனர்.
அதன் பின்னர் கல்கிஸ்ஸை நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் ஆறு பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தியோகப்பூர்வ தகவல்களின்படி, கைது செய்யப்பட்டவர்கள் ஏற்கனவே பொலிஸாரின் குற்றச் செயல்களுக்கு சாட்சியாக இருந்தவர்கள் எனவும், அதனால் பொலிஸாரின் பாதுகாப்பின் கீழ் இருந்த நிலையிலேயே கொல்லப்பட்டதாகவும் தெரியவருகிறது.
இதேவேளை கடந்த மார்ச் மாதம் 13ம் திகதி திருகோணமலையில் சிறுமி ஒருவரை கடத்தி துஸ்பிரயோகம் செய்து கொலை செய்தமை தொடர்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். எனினும் அவர்களில் இருவர் வனப்பிரதேசம் ஒன்றில் வைத்து விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மற்றும் ஒருவர் தப்பிச் செல்லும் போது பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவித்த அதேவேளை நான்காமவரும் பொலிசாரின் பாதுகாப்பில் இருந்த போதே இறந்து போனார்.
இதேவேளை கடந்த வருடத்தில் அரசாங்கத்துடன் இணைந்து பல இராணுவக்குழுக்கள் செயற்பட்டு வந்துள்ளன.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என்ற பிள்ளையான் தலைமையிலான குழு, மற்றும் அந்த காலப்பகுதியில் அதன் தலைவராக இருந்த கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன், அத்துடன் யாழ்ப்பாணம் மன்னார் மற்றும் வவுனியா பிரதேசங்களில் தமது அதிகாரத்தை செலுத்துக்கின்ற அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தாவின் தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயக கட்சி என்பன செயற்பட்டுள்ளன.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஒரு அரசியல் கடசியாக வந்துள்ள போதும், ஆயுதம் ஏந்திய நிலையிலேயே பயணிக்கிறது. இந்த நிலையில் கடந்த 2008ம் ஆண்டு பிள்ளையானின் பிரத்தியேக செயலாளர் குமாரசாமி நந்தகோபன் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் எந்த விசாரணை அபிவிருத்தியும் காணப்பட்டவில்லை. இந்த கொலை அமைச்சர் கருணாவின் ஆதரவின் கீழ் மேற்கொள்ளப்படடதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளன.
இவ்வாறு பல சம்பவங்கள் முறைபாடுகள் இடம்பெற்றள்ள போதும், அவை தொடர்பில் எந்த விதமான முன்னேற்றங்களும் இடம்பெறவில்லை.
இதற்கிடையில் கடத்தல் மற்றும் காணாமல் போதல் சம்பவங்களை விசாரிப்பதற்காக, ஓய்வு பெற்ற நீதியரசர் திலகரட்னவின் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டது.
எனினும் அது கடந்த வருடம் நவம்பர் மாதாம் காணாமால் போனவர்கள் பொலிஸில் தம்மை முறையாக பதிவு செய்து கொள்ளவில்லை என கூறி விடயத்தை குறித்த குழு தமது விசாரணையை முடித்துக் கொண்டது.
இதேபோன்று மேல் மாகாண சபை தேர்தல் இடம்பெற்ற ஏப்ரல் மாதம் 25ம் திகதி, இலங்கை சுதந்திர கட்சியின் முக்கிய உறுப்பினரான ஆர். துமிந்த சில்வா, வாக்களிப்பு நிலையத்தில் இளைஞர் ஒருவரை சுட்டுக் கொன்றார். எனினும் இது தொடர்பில் எந்த விதமான விசாரணைகளும் மேற்கொள்ளப்படாமலே கைவிடப்பட்டது. இவ்வாறு சட்டங்கள் அரசாங்கத்துக்கு சார்பாக பயன்படுத்தப்படுகின்றன.
இதேவேளை கடத்தல் மற்றும் காணாமல் போகும் சம்பவங்களும் அதிகரித்த வண்ணமே உள்ளன.
அவை எதனையும் மேற்கொள்ளும் அரசாங்க சார்பான குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எவையும் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை. அத்துடன் பல்வேறு வழிகளிலும் கைது செய்யப்படுகின்றனர்கள் துன்புறுத்தப்படல், மனிதாபிமானம் அற்ற வகையில் பலவந்தப்படுத்தப்படல், மற்றும் தண்டனைக்கு உட்படுத்தப்படல் போன்றனவும் மேற்கொள்ளப்படுகின்றன.
இதேவேளை இடம்பெயர்ந்த முகாம்களில் உள்ள மக்கள் தமக்கான சுதந்திரம் இன்றி நெருக்கடியான சூழலில் வாழ்க்கை நடத்துகின்றனர். அவர்கள் மிகவும் அசாதாரணமான ஒரு பிரதேசத்தில் அடைத்து வைக்கப்பட்டு, அவர்களின் சுதந்திரம், உரிமை என்பன முற்று முழுதாக மீறப்பட்டுள்ளன. அத்துடன் சட்டத்துக்கு புறம்பான கைதுகளும்,, தடுத்து வைப்புகளும் அரசாங்கத்தினால் அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதேவேளை ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களுக்கான எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமல், தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்ற அதேவேளை, உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களால் அவர்கள் தமக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தப்படும் போதும், அவை கைவிடப்படுகின்றன.
அத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள் நீதிபதியின் முன்னால் நிறுத்தப்பட வேண்டும், எனினும் இலங்கையில் பெறும்பாலும் அவ்வாறு நடைபெறுவதில்லை.
இதற்கிடையில் பல்வேறு சந்தர்பங்களில் இலங்கை ஜனாதிபதியினால் இராணுவத்தில் இருந்து தப்பி சென்றவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
சட்டங்கள் பொது மக்களின் பாவனைக்கு இல்லாது போயுள்ளமைக்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
அத்துடன் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகளுக்கான குற்றப்பத்திரிகை தாக்கல் உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
அத்துடன் சட்டவிரோத செயல்கள், , அதாவது காணி உள்ளிட்ட சொத்துக்கள் அபகரிக்கப்படல், மற்றும் சுரண்டப்படல், குடும்ப விவகாரங்களில் தலையிடல் போன்ற பல்வேறு முறையற்ற செல்கள் இடம்பெறுகின்றன.
அத்துடன் உள்வீட்டு வன்முறைகள் பெரிதாகி, வெளிமட்ட சக்திகள் லாபம் காணல், கொலை கடத்தல்களின் ஊடாக பொது மக்கள், மனோரீதியான துன்புறுத்தல் மற்றம் துஸ்பியோகங்களுக்கு உள்ளாதல் தண்டனைக்கு உட்படுத்தல் போன்றன பதிவாகியுள்ளன.
கடந்த வருடம் மே மாதம் யுத்தம் நிறைவடைந்த பின்னரும் சிறுவர் போராளிகள் கைது செய்யப்பட்டனர், எனினும் அவர்கள் சிலர் விடுவிக்கப்பட்ட போதிலும் பெரும்பான்மையானவர்களின் நிலைமை என்ன வென்று இதுவரையில் தகவல் வெளியாகவில்லை
எனினும் அரசாங்கம் அவர்களின் புனர்வாழ்வுக்காக குறிப்பிடத்தக்க வினைத்திறனான முனைப்புகளை மேற்கொண்டுள்ளது என்பதுடன், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியும் தமது சிறுவர் போராளிகளை விடுவித்துள்ளதுடன், இன்னும் சிலர் மீதமாக உள்ளமையும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயம்.
இதேவேளை நாட்டில் சுதந்திரமான ஊடக செயல்பாடுகளுக்கும், கருத்து வெளியிட்டு சுதந்திரத்துக்கும் பாரிய பாதிப்புகள் காணப்படுகின்றன. பல்வேறு ஊடகவிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அரசாங்கத்துக்கு எதிரான ஊடகவியலாளர்கள் கடத்தப்படல் மற்றும் காணாமல் போதல் போன்ற சம்பவங்களும் இடம்பெறுகின்றன.
அத்துடன் சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பிலும் குறிப்பிடத்தக்க திருப்பங்கள் இடம்பெறவில்லை.
இதேவேளை இலங்கையில் இணையத்தளம் சுதந்திரமும் குறிப்பிடத்தக்க அளவு குறைந்த மட்டத்திலேயே காணப்படுகிறது. சில செய்தி இணையத்தளங்கள் குறிப்பாக தமிழ்நெற் போன்றன இலங்கையின் தணிக்கை செய்யப்பட்டுள்ளன. அத்துடன் இனிவரும் காலத்தில் பல இணையத்தள தணிக்கை வேலைகளை செய்யவிருப்பதாகவும் கூறப்படுகிறது. அது இணையத்தள ஊடக சுதந்திரத்துக்கு எதிராக பாரிய பங்கம் விளைவிப்பாக அமையும்.
ஒன்று கூடல் மற்றும் பேரணி நடத்தும் சுதந்திரம், சங்கம் அமைக்கும் சுதந்திரம், மதப்பின்பற்றல் சுதந்திரம், போன்றனவும் குறிப்பிட்ட சில குழுக்களுக்கே காணப்படுகின்றன.
இதற்கிடையில் இடம்பெயர்ந்த மக்கள் தமக்கான பூரண சுதந்திரத்துடன் குடியமர்த்தப்பட வேண்டியவர்கள். எனினும் அவர்கள் முறையாக குடியமர்த்தப்படாமல் உள்ளமையும் நெருக்கடியான நிலையில் வாழ்கின்ற தன்மையையும் இலங்கையில் காணக்கூடியதாக இருக்கிறது.
குறிப்பாக இந்திய வம்சாவளி மக்களுக்கான தனியான குடியுரிமை ஆவணங்கள் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக அந்த மக்களுக்கான ஆள் அடையாள அட்டை இல்லாமை, போன்ற சிக்கல்கள் எழுந்துள்ளன. இதனால் தற்போது அவசரகால சட்டம் அமுலில் உள்ள நிலையில், மேலதிகமாக அவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படுகின்றனர்.
இதன் காரணமாக கடந்த ஆண்டில் மாத்திரம் 70 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுபான்மை மக்களின் தேர்தல் மற்றும் அரசியல் பிரவேசங்கள் குறைமட்டத்தில் காணப்படும் அதேவேளை, இந்த நிலைமை எதிர்வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுகிறது.
இதற்கிடையில் அகதிகளுக்கான அந்தஸ்த்து வழங்காமை, நாட்டில் இருந்து தப்பி செல்லும் சம்பவங்கள், சிறுவர் பெண்கள் மீதான வன்முறைகள், மதிப்பளிக்காமை, தனிநபர் நெருக்கடி ( சன நெரிசல்) போன்றனவும் பதிவாகியுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள மனித உரிமைகள் தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’