அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தள விமான நிலையம் ஆகிய நிர்மாணப் பணிகள் மூலம் சுமார் 2 லட்சத்து 31 ஆயிரத்து 500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவுள்ளது
.
இதன் மூலம் எதிர்வரும் ஐந்து வருடங்களுக்குள் நாட்டின் பொருளாதாரம் இரண்டு மடங்காக உயர்த்தப்படவிருப்பதாக துறைமுக மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் கே. வி. பி. ரஞ்சித் த சில்வா நேற்றுத் தெரிவித்தார்.
துறைமுகம் மற்றும் விமான நிலையத்தினூடாக 26,500 பேர் நேரடியாகவும் 2 லட்சத்து 5 ஆயிரம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினைப் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.
தகவல் தொடர்பாடல் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்றுக்காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் துறைமுக மற்றும் விமான நிலையங்களுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு தற்கால திட்டங்கள் அபிவிருத்திச் செயற்பாடுகள் குறித்து விளக்கமளித்தனர்.
அங்கு கருத்துத் தெரிவித்த இலங்கைத் துறைமுக அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் பிரியத் பந்து விக்கிரம கூறுகையில்,
"அம்பாந்தோட்டை துறைமுக கட்டுமானப் பணிகள் 04 கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதில் முதற்கட்டம் குறித்த திகதியிலும் 12 மாதங்களுக்கு முன்னதாகவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ்வருடம் நவம்பர் முதல் துறைமுக நடவடிக்கைகளை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளோம்.
அம்பாந்தோட்டையில் துறைமுகம் அமைக்கப்படவிருப்பது அறிய வந்தது முதல் இதுவரை 24 முதலீட்டாளர்கள் அங்கே முதலீடுகளை மேற்கொள்ள முன்வந்துள்ளனர்.
இத்துறைமுகத்தினூடாக நேரடியாக 25 ஆயிரம் பேரும் மறைமுகமாக 2 லட்சம் பேரும் தொழில்வாய்ப்பினை பெறுவர்.
அத்துடன் கொழும்பு துறைமுகத்தை விரிவூபடுத்தும் செயற்திட்டம் இம்மாத இறுதிக்குள் முழுமைப்படுத்தப்படும் வகையில் அமுல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது இங்கே ஒரே தரத்தில் 10 கப்பல்களை நங்கூரமிடமுடியும். விரிவுபடுத்தும் திட்டம் முழுமை பெற்றதும் ஒரேநேரத்தில் 90 கப்பல்கள் நங்கூரமிடமுடியும்" என்றார்.
இலங்கை விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உபதலைவர் கமல் ரத்வத்த பேசுகையில்,
"2012 ஆம் ஆண்டு நவம்பர் முதல் விமான சேவைகளை ஆரம்பிக்கும் வகையில் மத்தள விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஒரே இடத்தில் 10 விமானங்கள் நிறுத்தி வைக்கக் கூடிய வகையில் மிகவும் விசாலமாக அமைக்கப்படும். இவ்விமான நிலையத்தில் ஏ 318 ரக எயார் பஸ் தலையிறங்க கூடிய வகையில் சீன அரசாங்கத்தின் உதவியுடன் ஒரு பாதை அமைக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் 1500 பேர் நேரடியாகவும் 5 ஆயிரம் பேர் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பினை பெறவுள்ளனர்" என்றார். _
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’