வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 22 பிப்ரவரி, 2010

தமிழ் மக்களை இந்தியா பலிவாங்கியது – த.தே.கூட்டமைப்பு அதற்கு துணைபோனது : சிவாஜிலிங்கம்,ஸ்ரீகாந்தா


தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் வலுத்துவருகின்றன.

இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகளை சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோர் முன்வைத்தனர்.

தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரில் இன்று திங்கட்கிழமை கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெற்றது.

தமிழ் மக்களைக் கொலை செய்ய துணைபோன இந்தியாவுக்கு உடந்தையாகவும் சோனியாவின் காங்கிரஸ் அரசாங்கத்தின் விருப்பத்திற்கேற்பவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இயங்கியதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஊடகவியலாளர் மாநாட்டின்போது குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக எந்தவொரு பகிரங்க விவாதத்திற்கும் தான் தயாராக இருப்பதாக அவர் அறிவித்தார்.

“இந்த யுத்தத்தை ஆரம்பித்தது இந்தியா தான் என்றுஜனாதிபதி மகிந்த ராஜப்ஷவே சொல்லியிருந்தார்.

உங்களுக்குத் தெரியும், மாவில் அறு பிரச்சினையிலிருந்ததான் இது தொடங்கியது.

அந்த நேரத்தில் அதாவது 2006ஆம் ஆண்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தூதுக்குழு இந்தியாவுக்கு சென்றது. எனினும் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க முடியவில்லை. அதே ஆண்டு டிசம்பர் மாதம் கூட்டமைப்பின் தூதுக்கழு இந்தியப் பிரதமரை சந்தித்தது.

அதன் பின்னர் கிட்டத்தட்ட 28 மாதங்களாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தூதுக்குழு இந்தியாவுக்கு காலடி எடுத்து வைக்கவில்லை. 2007 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 15 இற்கும் அதிகமான வெளி நாடுகளுக்குச் சென்று யுத்தத்தை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்த மூவரும் (இரா.சம்பந்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், மாவை சேனாதிராஜா) இந்தியாவுக்கு செல்லாததற்கான காரணம் என்ன?

அவர்களின் குடும்பத்தினர் இந்தியாவில் தான் வசிக்கிறார்கள். இந்தியாவுக்கு சென்றபோதும் மறந்தும் புதுடில்லிக்கு செல்லாததற்கான காரணம் என்ன?

எங்களால் இந்தியாவுக்கு சென்று அங்குள்ள முக்கிய பிரதிநிதிகளை சந்திக்க முடியுமாக இருந்தால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஏன் அந்த முயற்சியை எடுக்கவில்லை?

இதிலிருந்து இந்திய அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே இவர்கள் செயற்படுகிறார்கள் என்பது புலனாகிறது.

அதுவரை இந்திய அரசாங்கத்திடம் எதுவும் கோராதவர்கள் 2009 ஆண்டு ஏப்ரல் மாதம் சந்திப்புக்கான கோரிக்கை விடுத்தார்கள். அதற்காக எமது உறுப்பினாகள் 14 பேர் கூடினார்கள். இவர்களில் 13 பேர் அங்கு போகக் கூடாது என எதிர்த்தார்கள்.

இரா.சம்பந்தன், சுரேஷ் பிரேமச் சந்திரன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன் ஆகியோ புதுடில்லிக்குச் சென்றனர்.

நான் இலண்டனிலிருந்து அவசரமாக வந்து, இந்தியா துரோகமிழைக்கிறது. செல்ல வேண்டாம் எனச் சொன்னேன்.

இந்த வேண்டுகோள் எனக்கூடாக விடுதலைப் புலிகளால் இவர்களுக்கு விடுக்கப்பட்டது.

புலிகளால் நேரடியாகவும் கூட அவர்களுக்கு செய்தி அனுப்பப்பட்டது.

ஆனால் அதனையும் மீறிச் சென்றார்கள் என்றால் அதற்கான காரணத்தை நீங்களே தீர்மானித்துக்கொள்ளங்கள்.

இந்திய பொதுத் தேர்தலிலே தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வெற்றிபெறச் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட ஏமாற்று முயற்சிகளிலே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பகடைக்காய்களாக பாவிக்கப்பட்டது.

இவர்களும் அதில் விரும்பி கலந்துகொண்டார்கள் என்பதுதான் எங்களுடைய பகிரங்க குற்றச்சாட்டு. இதைப்பற்றி வேண்டிய நேரத்தில் வாதாடவும் தயாராகவுள்ளோம்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்தா உரையாற்றுகையில்,

சோனியா அரசுக்கு விசுவாசமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழு இருக்க வேண்டும் என இந்தியா விரும்புகிறது.

கிளர்ச்சியாளர்கள், தட்டிக்கேட்பவர்கள், இந்தியாவின் துரோகத்தைப் பற்றி கடந்த காலத்தில் பேசியவாகள் இருக்கக் கூடாது என்பதில் சோனியா காங்கிரஸ் அரசாங்கம் தீர்மானமாக இருக்கிறது என்றார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன பார்வையாளராக வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’