வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 24 பிப்ரவரி, 2010

சாதனை நாயகன் சச்சினின் அடுத்த உலக சாதனை


நமது சாதனை நாயகன் சச்சினின் அடுத்த உலக சாதனை. ஒருநாள் ஆட்டங்களில் அதிகபட்ச ஸ்கோர் அடித்துள்ளார், அதுவும் 200*. முதல் முறையாக இரட்டை சதம் அடித்த பெருமையும் இவரை சேர்ந்துவிட்டது. தான் தான் கிரிக்கெட் உலகின் முடிசூடிய ராஜா என்று மீண்டும் அழுத்தமாக நிரூபித்துவிட்டார் இன்று.

உலக கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துகொண்டிருந்த ஒரு விஷயம், யார் முதலில் இரட்டை சதம் அடிப்பார் என்பது. சச்சினால் மட்டுமே இது முடியும் என்பதும் அதில் பலரது நம்பிக்கை. அதை இன்று நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாம் ஒருநாள் போட்டியில் இனிதே நிறைவேற்றியுள்ளார் அதிரடியாய், அதுவும் 147 பந்துகளில், கடைசி வரை ஆட்டமிழக்காமல்.

மட்டையில் பட்ட பந்துகள் அனைத்தும் பவுண்டரிகளுக்கு அனுப்பி பந்துவீச்சாளர்களின் வாய், வயிறு, மூளை என அனைத்திலும் புளி கரையவிட்டுவிட்டார். அவரது அதிகபட்ச ஸ்கோரான 186 யை தாண்டியதும் உற்சாகமும் மகிழ்ச்சியும் பீறிட்டது. எங்கள் ஆபீசில் மேட்ச் ஓடாததால் (TV யே இல்லை..!) கீழ் ப்ளோரில் இருந்த வேறொரு ஆபீசிற்கு சென்று நண்பர்களுடன் மேட்சை பார்த்தேன். கண்டிப்பாக 200 நிச்சயம் என்று முடிவு செய்து ஆட்டத்தை ரசிக்க ஆரம்பித்தோம். ஆனால் இறுதியில் நம் வயிற்றில் புளியை கரைத்தது, காரணம் தோனி. அவர் தன் சிறப்பான ஆட்டத்தால் பந்துகளை கபளீகரம் செய்ய, ஒரு கட்டத்தில் 199 லேயே சச்சின் வெகுநேரம் காத்திருந்தார்.

என்னதான் தோனி சிக்ஸ்சும், ப்போருமாக அடித்தாலும் எங்கள் வாயிலிருந்து பல கேட்ட வார்த்தைகளைத்தான் வாங்கி கட்டிக்கொண்டார். ஓவர் முழுக்க ஆடிவிட்டு, கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்துக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் தான் வந்தார், ஆம்லா. தனது சிறப்பான பீல்டிங் மூலம் தோனி அடித்த இறுதி ஓவரின் இரண்டாவது பந்தை Four செல்லாமல் தடுத்து நம் மக்களிடத்தில் கைத்தட்டு வாங்கினார். அடுத்த பந்திலே தான் சச்சின் அந்த அற்புதத்தை நிகழ்த்தினார். 199 லிருந்து ஒரு சிங்கிள் எடுத்து 200 வது ரன்னை அடைந்து உலக சாதனை நிகழ்த்தினார். கைத்தட்டல்களும், விசில்களும், உற்சாக வாழ்த்துக்களும் அந்த ஏரியாவையே உலுக்கியது. நங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. கண்டிப்பாக நீங்களும் அதே மனநிலையில் தான் இருந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

இன்னும் தென்னாப்பிரிக்க அணியின் பேட்டிங் ஆரம்பிக்கவில்லை. நமது அணியின் மொத்த ஸ்கோரான 401 ஐ அவர்கள் துரத்திப்பிடிப்பது கடினமே என்றாலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அவர்கள் அதை நிகழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த நாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு முக்கிய நாளாக அமைந்துவிட்டது. அதற்கு முழுக்காரணமும் நமது மாஸ்டர் ப்ளாஸ்டர் சச்சினையே சேரும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’