வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 11 டிசம்பர், 2009

எங்கள் பிள்ளைகளைக் காட்டுங்கள் : மனித உரிமைத் தினத்தில் தாய்மார் வேண்டுகோள்


எமது பிள்ளைகளின் படங்களை ஏந்திய வண்ணம் ஊர் ஊராகத் தேடுகிறோம். இறுதிக் கிரியைகள் செய்வதா, இறுதிவரை தேடுவதா என்று தெரியவில்லை. மனசாட்சியுள்ள உங்களை மன்றாடிக் கேட்கின்றோம். தயவு செய்து எங்கள் பிள்ளைகளைக் காட்டுங்கள்..." என காணாமல் போனோரின் தாய்மார் நேற்றுக் கதறியழுது வேண்டுகோள் விடுத்தனர்.

சர்வதேச மனித உரிமைகள் தினமான நேற்று, காணாமல் போனோரைத் தேடியறியும் குழுவினரால் ஊர்வலமும் பொதுக்கூட்டமும் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொழும்பு ஹைட் பார்க் மைதானத்திலிருந்து ஊர்வலம் ஆரம்பமானது.

தமது பிள்ளைகள், கணவன், பெற்றோர் என காணாமல்போன அனைவரினதும் உறவினர்கள் உட்பட பலர் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

ஊர்வலத்தைத் தொடர்ந்து பொதுநூலகக் கேட்போர் கூடத்தில் விசேட கண்காட்சியுடன், கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட காணாமல் போனோரின் உறவினர்கள் கதறியழுத வண்ணம் தமது உருக்கமான வேண்டுகோளை முன்வைத்தனர்.

"மனித உரிமைகள் தினம் இன்று உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. மனித உரிமைகளை வலியுறுத்தும் தினத்தில் நாம் எமது சொந்தங்களை இழந்து தவிக்கிறோம்.

எதற்காகக் கைது செய்தார்கள், எங்கே போனார்கள், எங்கே இருக்கிறார்கள் என்பது பற்றி எந்தவொரு செய்தியும் எங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை. அவர்கள் எங்கிருந்தாலும் பரவாயில்லை. உயிரோடுதான் இருக்கிறார்கள் என்பதை மட்டுமாவது உறுதிப்படுத்துங்கள்" என கலந்து கொண்டோர் மனமுருக கோரிக்கை விடுத்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’