![]() | |
| இலங்கை அகதிகள் |
இலங்கை முகாம்களுக்கான உதவி நிறுத்தப்படும் - பிரிட்டன் அறிவிப்பு
இலங்கையின் வடபகுதியில், சுமார் இரண்டரை லட்சம் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு அவசர உதவிகளை தவிர ஏனைய அனைத்து உதவிகளையும் நிறுத்தப் போவதாக பிரிட்டிஷ் அரசாங்கம் கூறியுள்ளது.
அங்கிருக்கின்ற மிகப்பெரிய முகாமுக்கு பிரிட்டிஷ் அமைச்சர் மைக் ஃபொஸ்டர் அவர்கள் விஜயம் செய்து திரும்பியதை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.
அதே நேரம் பருவ மழைக்காலத்தில் அங்கு ஏற்படக் கூடிய எந்தவிதமான வெள்ளமும் வடிந்தோடும் வகையில் தேவையான வடிகால் வசதிகளை தாம் முகாம்களில் அமைப்பதாக இலங்கை அரசாங்கம் கூறுகின்றது.
ஆனால், அதனுடன் பிரிட்டனும், ஐநாவும் உடன்படவில்லை.
மனிக்ஃபார்ம் முகாமுக்கு விஜயம் செய்த பிரிட்டிஷ் அமைச்சர் மைக் ஃபொஸ்டர், அங்கு கடுமையான மழை பெய்தால், பெரும் அழிவும், தொற்றுநோய் பரவலும் ஏற்படும் என்று அச்சம் வெளியிட்டுள்ளார்.
முகாமில் உள்ளவர்களில் சுமார் 70 வீதமானவர்கள் அங்கிருந்து வெளியேறும் பட்சத்தில், அவர்களுக்கு ஆதரவு வழங்கக்கூடிய குடும்பங்களுடன் சென்று தங்குவதற்கான வசதியுடையவர்கள் என்றும் அவர் கூறுகிறார்.
அந்த முகாம்களில் தமது நிலலைமை குறித்து பேசுவதற்கு ஆர்வத்துடன் இருந்த மக்களுடன் பிபிசிக்கு பேசும் வாய்ப்பு கிடைத்தது.
அங்கு நிலைமைகள் மிகவும் மோசம் என்றும், நல்ல குடிநீர் கிடையாது என்றும், போதுமான வடிகால் வசதி கிடையாது என்றும், அதிக வெப்பம் காரணமாக மக்கள் பலர் நோயில் வீழ்வதாகவும், அங்கிருந்த பெண்கள் மாறி மாறி கூறினார்கள்.
முடிந்தவரை விரைவாக எங்களை எங்கள் வீடுகளுக்கு அனுப்புங்கள் என்று ஒருவர் கூறினார்.
மனிக்பார்ம் முகாமில் இரண்டு லட்சத்து நாற்பதினாயிரம் பேர் இன்னமும் இருப்பதாக கூறுகின்ற அரசாங்கம், இதுவரை இருபதினாயிரம் பேர் மீள்குடியேற்றப்பட்டு விட்டதாக, அல்லது விடுவிக்கப்பட்டு விட்டதாக கூறுகிறது.
கவலைப்படவில்லை
வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் உள்ளவர்களுக்கான உதவியை ஐக்கிய ராஜ்ஜியம் நிறுத்தினாலும், வேறு பல நாடுகள் இலங்கைக்கு தொடர்ந்து உதவ தயாராக இருப்பதாகவும் இந்த முடிவால் தாம் கவலைப்படவில்லை என்றும் இலங்கை சமாதானச் செயலகத்தின் பணிப்பாளர் ராஜீவ விஜயசிங்க பி பி சியின் சிங்கள சேவையான சந்தேஷியாவிடம் தெரிவித்தார்.
மனித மேம்பாட்டு பட்டியலில் இந்தியாவுக்கு இடம் 134
![]() | |
| பொருளாதார வளர்சியின் பயன்கள் இந்தியாவில் பலரை எட்டவில்லை |
கல்வி, உள்ளூர் வாங்குதிறன் மூலம் கணக்கிடப்படும் தனி நபர் வருமானம் மற்றும் சராசரி ஆயுட் காலம் ஆகிய மூன்று காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் மனித மேம்பாட்டு குறியீட்டில் இந்தியா 134 ஆவது இடத்தில் உள்ளதாக ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டிலும் இந்தியா இதே நிலையில் தான் இருந்தது. இலங்கை இந்தப் பட்டியலில் 102 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
சில ஆண்டுகளாக உலகின் இரண்டாவது வேகமான பொருளாதார வளர்சியைப் பெற்று வரும் இந்தியா ஏன் மனித வள மேம்பாட்டில் பின்தங்கியுள்ளது என்று சென்னை பல்கலைக் கழக பேராசிரியர் சீனிவாசன் அவர்கள் தெரிவித்த கருத்துக்களை இன்றைய நிகழ்சியில் நேயர்கள் கேட்கலாம்.
முல்லை பெரியாறு விவகாரம் -மத்திய அரசு விளக்கம்
![]() | |
| மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் |
முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக புதிய அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, வனப்பகுதியில் ஆய்வு நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பதன் மூலம், சட்ட நடைமுறைகளில் தலையிடவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்துக்கு தனிப்பொறுப்பு வகிக்கும் இணை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் சார்பில், இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக, தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கு இடையிலான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், புதிய அணை தொடர்பான ஆய்வுக்கு அனுமதியளித்ததை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப் போவதாக தமிழக அரசு நேற்று அறிவித்தது. அந்த நிலையில், அமைச்சர் ஜெயராம் ரமேஷ் சார்பில் இன்று அறிக்கை வெளியாகியுள்ளது.
பெரியார் புலிகள் சரணாலயம் அமைந்துள்ள வனப்பகுதியில், முல்லைப்பெரியாறு அணை தொடர்பான ஆய்வு நடத்த, வனப்பாதுகாப்புச் சட்டப்படி கேரள அரசு அனுமதி கோரியிருந்தது. அமைச்சர் ஜெயராம் ரமேஷ் தலைமையிலான தேசிய வனவிலங்கு வாரிய நிலைக்குழு, அந்தக் கோரிக்கை குறித்து கடந்த செப்டம்பர் 16-ம் தேதி ஆய்வு நடத்தியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலைக்குழுவின் பரிந்துரைப்படி, சட்டரீதியான ஆய்வுக்குப் பிறகு, கேரள அரசு ஆய்வு நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அந்த அனுமதி, ஆய்வு நடத்துவதற்காக மட்டுமே தவிர, சட்டம் மற்றும் நிர்வாக ரீதியாகப் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைப் பாதிக்கும் வகையில் அந்த அனுமதி வழங்கப்படவில்லை என்று அமைச்சர் ஜெயராம் ரமேஷ் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், அமைச்சரின் அந்தக் கூற்றை நிராகரித்துள்ளார், திமுகவின் நாடாளுமன்றக் கட்சித் தலைவரும், ஏற்கெனவே, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராகப் பதவி வகித்தவருமான டி.ஆர். பாலு.

















0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’