வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
tna லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
tna லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 26 டிசம்பர், 2009

ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கும் தமிழ்க் கூட்டமைப்புக்குமிடையில் நேற்றும் சந்திப்பு- (விரிவான செய்தி)


பிரதான எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நேற்றும் தொடர்ந்து உயர்மட்டப் பேச்சுகள் நடைபெற்றன. நேற்றுமுற்பகல் நடைபெற்ற இப்பேச்சுகளில் ஜெனரல் பொன்சேகாவுடன் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர் எதிரணித் தரப்பில் பங்குபற்றினர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் நாடாளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. ஆகியோர் இப்பேச்சுகளில் கலந்துகொண்டிருந்தனர். கொழும்பு 07, ஐந்தாம் ஒழுங்கையில் உள்ள ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்தில் நேற்றுமுற்பகல் 11மணி முதல் பிற்பகல் 12.30மணி வரை இந்தப் பேச்சுகள் இடம்பெற்றன எனத் தெரியவருகின்றது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கி, அவர் அத்தேர்தலில் வெற்றிபெற்றால், அவரது அரசு தமிழர் விடயத்தில் கைக்கொள்ளக்கூடிய போக்குக் குறித்து இந்தப் பேச்சுகளில் ஆராயப்பட்டதாகத் தெரிகின்றது. தற்போது சிறைவைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளின் விவகாரம், அகதிகள் மீள்குடியமர்வு, அதியுயர் பாதுகாப்பு வலயத்தை நீக்கி அங்கு மக்களை மீளக் குடியமர அனுமதித்தல் என்பன பற்றியும் விரிவாகப் பேசப்பட்டதாகத் தெரியவந்தது. இலங்கை இனப்பிரச்சினைக்கு வெளிநாட்டுத் தலையீடின்றி உள்நாட்டுக்குள் உருவாகும் தீர்வுகுறித்து வலியுறுத்தப்பட்டு வருகின்றமையால், அது குறித்தும் இரு தரப்பிலும் விரிவாக ஆராயப்பட்டது எனவும் தெரியவருகின்றன. உள்நாட்டுக்குள் உருவாகும் தீர்வு ஒன்றை எட்டுவதற்காக ஏற்கனவே இனப்பிரச்சினை விவகாரத்தை ஒட்டி இங்கு முன்வைக்கப்பட்ட சில திட்டங்களைக் கவனத்தில் எடுத்துப் பரிசீலிக்கவும் நேற்றைய சந்திப்பில் உடன்பாடு காணப்பட்டதாகத் தெரியவந்தது. ஜனாதிபதி பிரேமதாஸ காலத்தில் மங்கள முனசிங்க தலைமையிலான குழுவினால் தயாரிக்கப்பட்ட யோசனைத் திட்டங்கள். 2000ம் ஆண்டில் தீர்வுக்கான உத்தேச திட்டமாக அப்போதைய சந்திரிகா அரசு தயாரித்துப் பிரேரித்த தீர்வு யோசனைகள். 2002ல் ரணிலின் அரசு புலிகளுடன் நடத்திய பேச்சுகளை அடுத்து எட்டப்பட்ட ஒஸ்லோ கூட்டறிக்கை இணக்கம். தற்போதைய மஹிந்த ராஜபக்ஷ அரசு இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக நியமித்த அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் சார்பில் சம்பந்தப்பட்ட புத்திஜீவிகள்குழு தயாரித்து சமர்ப்பித்த தீர்வுத்திட்ட யோசனை நகல். இத்தகைய நான்கு முக்கிய அம்சங்களையும் அடிப்படையாகவும், பிரதான ஆவணங்களாகவும் வைத்துக் கொண்டு உள்நாட்டில் தயாரான தீர்வுத் திட்டம் ஒன்றை எட்டுவதற்கு முயற்சிக்கலாம் என்று நேற்றைய சந்திப்பில் இணங்கப்பட்டதாகவும் அறிய வந்தது. மேலும் தொடர்ந்து பேச்சு நடத்துவது குறித்தும் தீர்மானிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

புதன், 4 நவம்பர், 2009

ததேகூ எம்.பிக்கள் அபிவிருத்திக்குத் தடையாக இருக்கப் போவதில்லை: அரியநேத்திரன்


தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அபிவிருத்திக்கு ஒரு போதும் தடையாக இருந்ததுமில்லை; இருக்கப் போவதுமில்லை" என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கூறினார்.

நேற்று நடைபெற்ற வெல்லாவெளி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போது இதனை தெரிவித்தார் அவர்,

"அபிவிருத்தி என்ற போர்வையில் நில ஆக்கிரமிப்பு இடம்பெறுமானால் அதற்கு இடமளிக்க முடியாது" என்றும் குறிப்பிட்டார்.

வெல்லாவெளி பிரதேச செயலாளர் எஸ்.உதயசிறீதர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய அரியநேத்திரன்,

"கடந்த காலங்களில் எமது மாவட்டத்தில் நிலவிய சூழ்நிலை ,எமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்நோக்கிய பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல்கள் காரணமாகவே கடந்த 3 வருடங்களாக கொழும்பில் தங்கியிருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டதையும் மக்கள் நன்கு அறிவார்கள்.

தற்போது சமாதான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது.அதனை சாதகமாகப் பயன்படுத்தி தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் காணிகளையும் அபகரிக்க முற்படுகின்றது. இதற்கு அனுமதிக்க முடியாது.

ஏற்கனவே எமது பகுதியில் வாழ்ந்து இடம்பெயர்ந்தவர்கள் எந்த இனமாக இருந்தாலும் மீள்குடியேறுவதில் எமக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. ஆனால் வெளியாரின் திட்டமிட்ட குடியேற்றத்திற்கு இடமளிக்க முடியாது.

குறிப்பாக மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட எல்லையில் கெவலியாமடுவிலுள்ள தமிழர்களுக்குச் சொந்தமான காணிகளிலும், மட்டக்களப்பு மாவட்ட எல்லைக்குள் உள்ள காணிகளிலும் அத்துமீறி குடியேற்றத்திற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இக்குடியேற்றம் உட்பட கிழக்கு மாகாணத்தில் இப்படியான குடியேற்றங்கள் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து இது பற்றிய அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி செயலகம் கிழக்கு மாகாணத்திலுள்ள சகல மாவட்ட செயலாளர்களையும் கேட்டுள்ளது." என்றும் குறிப்பிட்டார்.

இக்கூட்டத்தில் வெல்லாவெளி பிரதேச சபைத் தலைவர் எஸ்.ஸ்ரீதர் மற்றும் அரச திணைக்கள அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டு பிரதேச அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்ந்தனர்.

சுமார் மூன்று வருடங்களின் பின்னர் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டது, இதுவே முதலாவது தடவை என்பது குறிப்பிடத்தக்கது

ஐக்கிய தேசிய முன்னணியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணையுமா?:நாளை முடிவு


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரச கட்சிக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் எதிர்க்கட்சிகள் அடங்கிய ஐக்கிய தேசிய முன்னணி அணி திரண்டுள்ளது. இதில் ததேகூ இணைவது குறித்த முடிவு நாளை தெரியவரும் என அந்தக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் வீரகேசரி இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.

இந்தப் புதிய கூட்டு முன்னணியில் இணைவது என தமிழ்த் தேசிய கட்சியின் சார்பில் கொள்கையளவில் முடிவு ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், இது குறித்த இறுதித் தீர்மானம் இன்னும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்கூட்டம் நாளை கொழும்பில் கூடி, இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என அந்த முக்கியஸ்தர் மேலும் தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினை மாற்ற வேண்டும் என்பதே ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கிய நோக்கமாகக் கருதப்படுகின்ற போதிலும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு தமிழ் மக்களின் அரசியல் நலன்களை முதன்மைப்படுத்துவதாகவே இருக்கின்றது.

இந்த நிலையில் ஐக்கிய தேசிய முன்னணியில் எந்த வகையில், என்ன வகையான முடிவோடு இணைந்து செயற்படுவது என்பது குறித்து நாளைய கூட்டத்தில் விரிவாக ஆராய்ந்து தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அந்த முக்கியஸ்தர் தெரிவித்தார்.

நாடு திரும்பிய ததேகூ உறுப்பினர்களிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை


கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக வெளிநாட்டில் தங்கியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் இருவர் இன்று முற்பகல் நாடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில் தங்கியிருந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், லண்டனில் தங்கியிருந்த யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோரே இன்று நாடு திரும்பினர்.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக இந்தியாவிலும்,நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இரு வருடங்களுக்கு மேலாக இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் தங்கியிருந்து இறுதியாக லண்டனிலும் தங்கியிருந்தனர்.

குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் செல்வம் அடைக்கலநாதன் விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும்,இன்று மாலை வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வது பற்றி அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

நாடு திரும்பிய இவர்கள் இருவரும் இன்று நாடாளுமன்ற அமர்விலும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் கடந்த சில மாதங்களாக லண்டனில் தங்கியிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தனும் அடுத்த சில நாட்களில் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.ஜெயானந்தமூர்த்தி, எஸ். கஜேந்திரன் ஆகியோர் நாடு திரும்புவது தொடர்பாக தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

குற்றப்புலனாய்வுப் பிரிவு தாக்கல் செய்த வழக்கிலிருந்து தமிழ் கூட்டமைப்பு -எம்.பி.க்கள் நால்வரும் விடுதலை


தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கெதிராக குற்றப் புலனாய்வு பொலிஸாரினால் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று கொழும்பு பிரதம நீதிவான் நிசாந்த ஹப்பு ஆராச்சி முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்போது குறித்த நான்கு தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களையும் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய்வதாக அறிவித்தார்.

பிரதிவாதிகளின் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா நேற்று மன்றில் கூறுகையில், 08.10.2002 ஆம் ஆண்டில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான கனகலிங்கம் சிவாஜலிங்கம், சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி, அரியநேத்திரன் பாக்கியசெல்வம், செல்வராஜா கஜேந்திரன் ஆகிய நான்கு எம்.பி.க்களும் அரசியல் அமைப்பு பிரிவு 157 (அ) பிரிவை மீறியதன்மூலம் நாட்டுப் பிரிவினைக்கு ஆதரவளித்து வெளிநாடுகளில் நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்ச்சிகளில் உரையாற்றியதன் காரணமாக பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் தவறு புரிந்திருப்பதாகவும், அதனை விசாரணை செய்ய வேண்டுமெனவும் குற்றப்புலனாய்வு பிரிவு தெரிவித்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. எனது கட்சிக்காரர்கள் 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இலங்கை அரசின் இறமைக்கு எதிராக தனிநாட்டு கோரிக்கையை முன்வைத்து வெளிநாடுகளில் உரையாற்றிமைக்காக இரண்டரை வருடங்கள் கழித்தபின்னரே முன்னாள் பொலிஸ்மா அதிபர் ஜயந்த விக்கிரமரத்ன குற்றத்தடுப்புத் திணைக்களத்துக்கு முறைப்பாடு செய்திருந்தார்.

இலங்கையில் பலபாகங்களிலும் இடம்பெற்ற பொங்குத் தமிழ் நிகழ்வுகளில் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்களாகவும், பிரதி அமைச்சர்களாகவும், பாராளுமன்ற உறுப்பினர்களாகவும், அரசியல் கட்சிகளின் தலைவர்களாகவும் இருப்பவர்கள் உரையாற்றியிருந்தபோதிலும் குறிப்பிட்ட நான்கு கட்சிக்காரர்கள் மாத்திரமே குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை நீதிக்கு புறம்பான விடயமாகும். குறித்த இந்த வழக்கை விசாரணை செய்யும் அதிகாரமானது இந்த நீதிவான் நீதிமன்றத்துக்கு இல்லையென்பதுடன் மேன் முறையீட்டு நீதிமன்றத்துக்கே உள்ளது எனவும் சுட்டிக்காட்டினார். மேலும் தனது கட்சிக்காரருக்கெதிரான குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கு வலிதான எந்தவொரு நேரடிச் சான்றோ, சூழ்நிலைச் சான்றோ இல்லாது தனியாக பதிவு செய்யப்பட்டதாக கூறப்படும் ஒலிநாடாவில் மாத்திரம் தங்கி நின்று குற்றச்சாட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் இதுவரை எந்தவிதமான வலிதான சான்றும் முன்வைக்கப்படவில்லை. எனவே, குறித்த இவ்வழக்கை தள்ளுப்படி செய்து விடுதலை செய்ய வேண்டுமென்றும் சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராஜா கேட்டுக்கொண்டார்.

சிரேஷ்ட சட்டத்தரணியின் வேண்டுதலையடுத்து குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தரப்பில் ஆஜராகிய பொலிஸ் அதிகாரி அவர்களால் நடாத்தப்பட்ட புலன் விசாரணையின் மேலதிக அறிக்கையை நேற்று சமர்ப்பித்ததுடன் குறித்த விசாரணைக்காக சட்டமா அதிபரின் ஆலோசனையை தான் பெற்றுக் கொண்டதாகவும், நான்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் குற்றங்களை நிரூபிப்பதற்கு அவசியமான எந்தவொரு வலிதான நேரடிச் சான்றோ சூழ்நிலைச் சான்றோ இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லையென்றும் குறிப்பிட்டார். இந்நிலையில், இருதரப்பு சமர்ப்பணங்களையும் நன்கு அவதானித்த கொழும்பு பிரதம நீதிவான் நிசாந்த ஹப்பு ஆராச்சி சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராஜாவின் வாதத்தை ஏற்று குறித்த நான்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களையும் அவர்களுக்கெதிரான குற்றச்சாட்டிலிருந்து விடுதலையளித்து தீர்ப்பு வழங்கினார்.

செவ்வாய், 6 அக்டோபர், 2009

மூன்று வருடங்களின் பின் மட்டு. திரும்பும் ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர்கள்

கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக தமது பாதுகாப்பின் நிமித்தம் கொழும்பில் தங்கியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள தற்போது மட்டக்களப்பு திரும்பியுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் நிலவிய சூழ்நிலை காரணமாகவும், தமக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் காரணமாகவும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், த.கனகசபை, தங்கேஸ்வரி கதிர்காமர், எஸ்.ஜெயானந்தமூர்த்தி (தற்போது லண்டனில்) ஆகியோர் கொழும்பில் தமது குடும்பத்தினருடன் தங்கியிருந்தனர்.

மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர்களில் பா.அரியநேத்திரன், த.கனகசபை ஆகியோர் நேற்று திங்கட்கிழமை மட்டக்களப்பு திரும்பியுள்ளனர். மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி கதிர்காமரும் ஓரிரு நாட்களில் மட்டக்களப்பு திரும்பவிருப்பதாகத் தெரிய வருகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் நேற்று திங்கட்கிழமை மாவட்ட செயலகத்திற்கு சென்று அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் உட்பட பல அதிகாரிகளைச் சந்தித்தார்.

ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் போது, கிழக்கு மாகாண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்நோக்கும் அச்சுறுத்தல்கள் குறித்து அவரது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இதன் போது அங்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு தொடர்பான உறுதிமொழி மற்றும் உத்தரவாதங்களையடுத்தே குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டக்களப்பு திரும்ப முடிவெடுத்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

திங்கள், 5 அக்டோபர், 2009

சதாசிவம் கனகரட்னத்தின் புதல்வர் விடுதலைப் புலி உறுப்பினர் என்கிறது லக்பிம


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரட்னத்தின் புதல்வர் ஒர் சிரேஸ்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் என புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர் என லக்பிம ஆங்கில வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.பல்வேறு தற்கொலைத் தாக்குதலுடன் குறித்த நபருக்கு நேரடித் தொடர்பு காணப்படுவதாக புலனாய்வுப் பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர் எனவும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் உள்ளிட்டோரின் தாக்குதல்களுடன் தொடர்புடைய கிரி என்ற நபர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரின் புதல்வர் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~, பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்~ மேலும் பல முக்கிய அரசாங்க அதிகாரிகளை படுகொலை செய்வதற்கு கிரி சூழ்ச்சித் திட்டம் தீட்டியதாகவும் கிரி என்ற விடுதலைப் புலி உறுப்பினருக்கு ஆதரவாக செயற்பட்ட இராணுவ உயரதிகாரிகளிடம் நடத்திய விசாரணைகளின் மூலம் பல்வேறு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன எனவும் லக்பிம ஆங்கில வார இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது தந்தையான, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரட்னத்தின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து கொண்டு தாக்குதல் திட்டங்களை தீட்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், தன்னார்வ தொண்டு நிறுவனமொன்றின் முக்கியஸ்தர் ஒருவருக்குச் சொந்தமான அத்துருகிரிய வீடொன்றிலும் கிரி தங்கியிருந்தமை தெரியவந்துள்ளது எனவும் லக்பிம ஆங்கில வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சனி, 3 அக்டோபர், 2009

நலன்புரி முகாம்களிலுள்ள தமிழ் மக்களை விடுவிப்பதுடன் இடம்பெயர்ந்த முஸ்லிம்களை மீளக் குடியேற்ற வேண்டும்


இடம்பெயர்ந்து முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை விடுதலை செய்வது குறித்தும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கு உரிய தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும் தமிழ், முஸ்லிம் கட்சிகள் கூட்டாக அறிக்கையொன்றை விடுத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்களின் தலைவரும் சிரேஷ்ட உறுப்பினருமான இரா.சம்பந்தன் நேற்று கேசரிக்குத் தெரிவித்தார். இதேவேளை, தமிழ், முஸ்லிம் கட்சிகள் 5 ஒன்றிணைந்து கூட்டாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன. அதில் நாட்டில் இடம்பெயர்ந்துள்ள இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் அரசமைப்புக்கு முரணாக சர்வதேச மனித உரிமை சட்டங்களை மீறி பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சட்டவிரோதமானது என சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் ஆர். சம்பந்தன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையில் அதன் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழர் விடுதலை கூட்டணியின் சார்பில் வீ.ஆனந்தசங்கரி, ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் மனோ கணேசன், அகில இலங்கை தமிழ் ஐக்கிய முன்னணி சார்பில் கே.விக்னேஸ்வரன் ஆகியோர் ஒப்பமிட்டு இவ்வறிக்கையில் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் இரா.சம்பந்தன் தெரிவித்தார். * வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் சொந்த இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். * வடக்கிற்கும் கிழக்கிற்கும் சில பகுதிகளுக்கும் நடைமுறைப்படுத்தப்படும் நடமாடும் சுதந்திரத்துக்கான கட்டுப்பாடு தளர்த்தப்பட வேண்டும். * வட மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு உடனடி இயல்பு வாழ்க்கை ஏற்படுத்தப்பட வேண்டும் என்பன வலியுறுத்தப்பட்டுள்ளன.

இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கை சுதந்திரமடைந்த நாளிலிருந்து தமிழ் பேசும் மக்கள் பல தசாப்த காலமாக கொடுந் துயரை அனுபவித்து வருகிறார்கள். அவர்கள் இனப்பாகுபாட்டையும், வன்முறையையும், இனச் சுத்திகரிப்பையும் எதிர்கொள்கின்றனர். 1983 இல் இடம்பெற்ற இனப் படுகொலையின்போது, அரசாங்கத்தின் ஒரு பகுதியினரும் அதில் ஈடுபட்டிருந்தனர். இனப்படுகொலைகளாலும் கடந்த 34 வருட கால இலங்கை இனரீதியான உள்நாட்டு யுத்தத்தாலும் வடக்கு கிழக்கில் வாழ்ந்த தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களும் ஏனையோரும் இன்னும் நாட்டின் ஏனைய பகுதி மக்களும் கூட பலியெடுக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, தமிழ் மக்கள் இத்தகைய துன்பங்களால் பெருமளவு சலிப்படைந்துள்ளனர். போரின் இறுதிக் கட்டத்தில் வன்னி மக்கள் எல்லையற்ற துன்பத்தை அனுபவித்துள்ளனர். போர் முடிவடைந்துள்ள இந்த நிலையிலும்கூட அவர்களுடைய துன்பம் இன்னும் தீர வில்லை. நாட்டில் எங்கும் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் மரண அச்சுறுத்தல்கள், பொது மக்கள் படுகொலைகள், ஊடகவியலாளர்களும் ஏனையோரும் காணமற் போதல் என்பவற்றுக்கு மத்தியிலும் நாம் இந்த இடம்பெயர்ந்து முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பாக உடனடியாகவும் கூட்டாகவும், முன்னுரிமை கொடுத்து செயற்பட வேண்டுமென கருதுகின்றோம்.

இதன் கீழ் ஒப்பமிட்டுள்ள நாம் அனைவரும் சகித்துக் கொள்ள முடியாத இந்நிலைமையினை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றோம். நாட்டிலுள்ள இடம்பெயர்ந்த இலட்சக் கணக்கான தமிழ் மக்கள் அரசியலமைப்புக்கு முரணாக சர்வதேச சட்டங்களை மீறி பலவந்தமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளமை சட்டவிரோதமானது என்று சுட்டுக் காட்ட விரும்புகின்றோம். இம்மக்கள் உடனடியாக அம்முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டு அவர்களது வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். அத்தோடு அவர்கள் தங்களது பாரம்பரிய தொழில்களான விவசாயம் மற்றும் மீன்பிடி போன்றவற்றில் ஈடுபட எத்தகைய தடையுமின்றி அனுமதிக்க வேண்டும். அல்லது அவர்கள் தமது உறவினர் நண்பர்களது வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும், அல்லது அவர்கள் தமது சட்டபூர்வமான உரிமையைப் பயன்படுத்தி தாங்கள் விரும்பிய இடத்துக்குச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். இவர்களில் குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதான குற்றச்சாட்டை எதிர்நோக்குபவர்கள் எதுவித தாமதமுமின்றி நீதிமன்றம் முன் நிறுத்தப்பட வேண்டும். இடம்பெயர்ந்த மக்கள் நீண்ட நாட்களாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அந்த முகாம்களுக்கு உறவினர்கள், மதகுருமார், பாராளுமன்ற உறுப்பினர்கள் , மாகாண சபை உறுப்பினர்கள், சிவில் சமூகத்தினர், ஐ.நா. நிறுவன பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பன செல்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டுமென நாம் வலியுறுத்துகிறோம்.

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு கடந்த இரண்டு தசாப்தங்களாக கடும் துன்பங்களை எதிர்கொண்டுவரும் முஸ்லிம் மக்கள் அவர்களது சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்ல அனுமதிக்கப்படுவதோடு, அங்கு அவர்கள் தமது பொருளாதார, சமூக வாழ்வை எவ்வித இடையூறுமின்றி வாழ வழி செய்ய வேண்டும்.அதேபோன்று கிழக்கிலும் இடம்பெயர்ந்து கடும் துயரை அனுபவிக்கும் மக்களையும் அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

வடக்கிற்கும் கிழக்கின் சிலபகுதிகளுக்கும் நடைமுறைப்படுத்தப்படும் நடமாடும் சுதந்திரத்துக்கான கட்டுப்பாடு தளர்த்தப்படல் வேண்டும். குறிப்பாக, வட மாகாணத்தில் அடிப்படை உரிமை மீறல் நடவடிக்கைகள் விலக்கப்படல் வேண்டும்.

வட மாகாணத்தில் பல பகுதிகளிலும் ஊரடங்குச் சட்டமும் பல்வேறு கட்டுப்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்படுவது நியாயப்படுத்தப்பட முடியாதவைகளாகும். இதனால், அங்கு எவ்வித தாமதமுமின்றி உடனடியாக இயல்பு வாழ்க்கை ஏற்படுத்தப்படல் வேண்டும். நாட்டில் சில பகுதிகளில் வாழும் மக்கள் இன்னமும் அச்சத்துடனேயே உள்ளார்கள். அவசரமான விடயங்களுக்குக்கூட அவர்கள் செல்வதில்லை. இதனால், சமூக செயற்பாடுகள் தொடர்பான பணிகள் தடைப்பட்டுள்ளன. மேலும் இராணுவ நிர்வாகம் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், தளர்த்தப்பட வேண்டும். சமூக, பொருளாதார, இயல்புவாழ்வு மீளத் திரும்பும் வகையில் சிவில் நிர்வாகம் சீரமைக்கப்படல் வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனி, 12 செப்டம்பர், 2009

த.தே.கூ. உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் : ஜனாதிபதியிடம் புகார்


கல்முனை மாநகர சபையில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு, தற்போது அரசாங்கத் தரப்பிலுள்ள முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் அச்சுறுத்தல் விடுத்திருப்பதாக ஜனாதிபதியிடம் புகார் செய்துள்ளது. கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே மேற்படி புகார் செய்யப்பட்டுள்ளது. மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஹென்றி மகேந்திரன் உட்பட தமது கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் இந்த அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பது குறித்து ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது தாங்கள் சுட்டிக் காட்டியதாகவும் நடவடிக்கை எடுப்பதற்கு விபரங்களைச் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி கேட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுவதைத் தடுப்பதற்கான ஒரு அச்சுறுத்தல் முயற்சியாகவே இதனைக் கருத வேண்டியிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.