வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 10 அக்டோபர், 2011

காணிப் பதிவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் ஆதரவு வழங்கத் தயார்: ஆனந்தசங்கரி

காணிப் பதிவு சம்பந்தமான விவகாரத்தினால் வடபகுதி மக்கள் மிகவும் கவலையுற்றுள்ளனர். இதற்கெதிராக கூட்டமைப்பு நடவடிக்கை எடுப்பதாயின் நாம் பூரண ஆதரவு வழங்கத் தயாராகவுள்ளோம். இல்லையேல் இவ்விடயத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு எமக்கு கூட்டமைப்பு ஆதரவளிக்க வேண்டும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் கோரியுள்ளார்.
இது குறித்து சம்பந்தன் எம்.பி.க்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளதாவது, காணிப் பதிவு சம்பந்தமாக ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தின் பிரதியை இத்துடன் இணைத்துள்ளேன். இந்தக் காணிப் பிரச்சினை இன்று மிகப் பெரிய பிரச்சினையாக வளர்ந்துள்ளது. வடபகுதி மக்கள் இது பற்றி மிகவும் கவலையுற்றுள்ளனர். இடம்பெயர்ந்த வடபகுதி மக்களிடமிருந்து தொலைபேசி அழைப்புக்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. என்னால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதம் பெரிதாக எதையும் சாதிக்கப் போவதில்லை.ஓர் உறுதியான நடவடிக்கையே இன்றைய தேவையாகும். காணி சம்பந்தமான விபரங்களை வழங்காது பகிஷ்கரிக்க வேண்டும் என்ற பிரசாரத்தை ஆரம்பிப்பதாக பரிசீலித்துக் கொண்டிருந்த வேளையில், ஒரு சமயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இதற்கு ஏதாவது மாற்றுத்திட்டம் இருக்கக் கூடும் என அஞ்சி எனது ஆலோசனையை நிறுத்தி வைத்துள்ளேன். நீங்கள் இவ்விடயம் சம்பந்தமாக அரசுடன் நடத்துகின்ற பேச்சுவார்த்தையில் ஏற்கனவே எடுத்திருக்க கூடுமெனக் கருதி உங்களுடைய நிலைப்பாட்டை அறியாது எதுவித நடவடிக்கைகளையும் எடுக்க நான் தயங்குகின்றேன். இதைப் பகிஷ்கரிக்கின்ற எண்ணம் அல்லது வேறு நடவடிக்கை எடுப்பதாக இருப்பின் தமிழர் விடுதலைக் கூட்டணியும் புளொட் அமைப்பும் எமது முழு ஆதரவையும் தரத் தயாராக உள்ளோம். அத்தகைய திட்டம் எதுவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இல்லையெனில் இது சம்பந்தமாக எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை எமக்களிக்குமாறு வேண்டுகின்றேன். எமக்கு ஏற்பட்டிருக்கும் இப் பயத்திற்கு காரணம் கடந்த 2011.09.25 அன்று நடைபெற்ற எமது கட்சியின் மாநாட்டில் தமிழரசுக் கட்சி மட்டும் கலந்து கொள்ளாமையே ஆகும். கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் தமிழர் விடுதலைக் கூட்டணியும் புளொட் அமைப்பும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு பூரணமான ஆதரவைக் கொடுத்திருந்தது. இவ்வமைப்புக்களின் வேட்பாளர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ளடங்கியிருந்தனர். ஆனால் துரதிஷ்ட வசமாக இதுவரை தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் ஆகிய அமைப்புக்களின் ஆதரவாளர்கள் தாமாக முன்வந்து கொடுத்த ஆதரவை நீங்கள் ஏற்றுக் கொண்டதாகவோ, அல்லது அச்செயலை மெச்சியதாகவோ இன்று வரை தெரிவிக்கவில்லை. எத்தனையோ விடயங்களில் நானாக நடவடிக்கை எடுத்திருப்பேன். ஆனால் நீங்கள் அரசுடன் எந்தெந்த விடயங்கள் பற்றி பேசுகின்றீர்கள் என்பதனை அறியாமல் தமிழ் பேசும் மக்களுடன் சம்பந்தப்பட்ட எது விடயங்களிலும் எவரும் எதையும் செய்ய முடியாமல் உள்ளது. நீங்கள் அரசாங்கத்துடன் பேசுகின்ற விடயங்களை உங்களுடைய குழுவைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மறைக்க வேண்டுமா என மிக ஆர்வத்துடன் கேட்க விரும்புகின்றேன். என்னை சேர்த்துக் கொள்ளவில்லையென்று நான் முறைப்பட வரவில்லை. ஆனால், நான் அறிய விரும்புவது அரசுடனான உங்களுடைய பேச்சுவார்த்தைக்கு இடையூறு ஏற்படுத்தாது எந்த எந்த விடயங்களில் என்னைப் போன்றவர்கள் தலையிடலாம் என அறிய விரும்புகின்றேன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’