வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 5 ஏப்ரல், 2010

தேர்தலையிட்டு கடும் பாதுகாப்பு உஷார் நிலையில் இராணுவம்



எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறும் பாராளுமன்றத் தேர்தல் நீதியானதாகவும் சுதந்திரமாகவும் இடம்பெறுவதை உறுதிப்படுத்துவதற்காக சுமார் 60 ஆயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ள நிலையில் வன்முறைகள் அதிகரிக்குமானால் பொலிஸாருக்கு உதவுவதற்காக 20 ஆயிரம் படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் தனியார் நிலையமான (சி.எம்.ஈ.வி.) இதுவரை தேர்தல் வன்முறை தொடர்பான 325 சிறிய சம்பவங்களை பதிவு செய்துள்ளது. இதில் சுடுகலன்கள் 50 சம்பவங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பிரசாரத்தில் ஈடுபடுபவர்கள் மத்தியிலான மோதல்களால் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ள போதும் இதுவரை மரணம் எதுவும் இடம்பெற்றிருக்கவில்லை. தேர்தல் தொடர்பான பாதுகாப்புக் கடமையில் ஏற்கனவே சுமார் 60 ஆயிரம் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் அவர்களுக்கு உதவ இராணுவம் தயார் நிலையில் இருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
அதிகளவு வன்முறைகள் இடம்பெற்ற பகுதிகளில் நாம் பாதுகாப்பை அதிகரித்திருக்கிறோம். வாக்களிப்பு நிலையங்களுக்குள் இராணுவம் கடமையில் ஈடுபடுத்தப்படமாட்டாது. குழப்பம் இடம்பெறக் கூடிய பகுதிகளில் அவர்கள் எமக்கு உதவியளிப்பவர்கள் என்றும் பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.
இதுவரை தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக 270 முறைப்பாடுகள் தமக்குக் கிடைத்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், 200 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். பாராளுமன்றத் தேர்தலில் 225 ஆசனங்களைக் கைப்பற்ற 7620 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். 36 அரசியல் கட்சிகளும் 306 சுயேச்சைக்குழுக்களும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’