
பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற கொடூரமான கொலைச் சம்பவத்துடன் தொடர்புள்ள பிரதான சந்தேக நபர் இன்று சரணடைந்துள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்புப் பிரிவு அறிவித்துள்ளது.
தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள மெகியுன்டானோ மாகாணத்தில் எதிர்வரும் 2010 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மாகாண தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கலுக்கு ஊர்வலமாகச் சென்ற சுமார் 100 இற்கும் அதிகமானோர் துப்பாக்கி நபர்களால் அச்சுறுத்தப்பட்டு கடத்தப்பட்டார்கள்.
கடத்தப்பட்டவர்களில் 57 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். இவர்களில் 18 ஊடகவியலாளர்களும் அடங்குவர்.
இந்நிலையில், பொலிஸாரால் சந்தேக நபராக நோக்கப்பட்ட அம்மாகாணத்தின் ஆளுநர் என்டெல் எம்பாடுவன் இன்று பாதுகாப்புப் பிரிவினரிடம் சரணடைந்துள்ளார்.
இவரை விசாரணைக்கென விமானம் மூலம் அழைத்துச் செல்கையில் இனம்தெரியாத நபர்கள் விமானத்தை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும் கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் இவர் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிலிப்பைன்ஸ் நாட்டில் அண்மைக் காலமாக தேர்தல் காலங்களில் இடம்பெறும் வன்முறைகளில் மிகக் கொடூரமான கொலைச்சம்பவம் இதுவெனக் கூறப்படுகிறது.
அத்துடன், உலகத்தில் வன்முறை அல்லது கொலைச் சம்பவமொன்றில் அதிக எண்ணிக்கையிலான ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்ட முதல் சம்பவம் இதுவென ஊடக அமைப்புகள் குறிப்பிட்டுள்ளதுடன் கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்துள்ளன













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’