
இலங்கையிலிருந்து இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்றச் சென்ற 300 பேர் கொண்ட குழுவினர் புனித மக்கா நகரில் உரிய தங்குமிட வசதிகள் வழங்கப்படாததன் காரணமாக நிர்க்கதி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக, தெரியவருகிறது.
முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அங்கீகாரம் பெற்ற ஹஜ் முகவர் நிலையம் ஒன்றினால் அழைத்துச் செல்லப்பட்ட இக்குழுவினர் தங்குவதற்கு முகவர் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஹோட்டலில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த வேறு ஒரு குழுவினர் தங்கியுள்ளதாகவும் இதனையடுத்து இலங்கைக் குழுவினர் வீதியோரங்களில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் பைலாவின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து மக்கா நகரிலிருந்து 15 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள ஹோட்டல் ஒன்றில் குறித்த ஹாஜிகளை தற்காலிகமாகத் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேல் மாகாண சபை உறுப்பினர் ஏ.ஜே.எம்.முஸம்மில் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஜே. மீரா முகைதீனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, இது பற்றித் தமக்கு உத்தியோகபூர்வமாக எந்த முறைப்பாடுகளும் தெரிவிக்கப்படவில்லை எனவும் தற்போது ஹஜ் கடமைக்காகச் சென்றுள்ள திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க். வை.எல்.எம்.நவவி இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’