வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 3 அக்டோபர், 2009

அம்பாறை த.ம.வித்தியாலய கட்டிடம்!!

அம்பாறை த.ம.வித்தியாலய கட்டிடம் உடைக்கப்படுவதைத் தடுக்குமாறு வலியுறுத்து
அம்பாறை தமிழ் மகா வித்தியாலய வகுப்பறை கட்டிடங்கள் உடைக்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரத்தினம் மாகாண ஆளுனரிடம் வலியுறுத்தியுள்ளார்.

இவ்வித்தியாலய வகுப்பறையில் ஒரு பகுதி அப்பிரதேசத்திலுள்ள சாரணர் ஆசிரியர் ஒருவரால் கனரக இயந்திரங்களைக் கொண்டு உடைக்கப்படுவதாக அவர் ஆளுனரிடம் இன்று தொலைபேசி ஊடாகவும்,எழுத்து மூலமும் புகார் செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :

"அம்பாறை கல்வி வலயத்திலுள்ள இவ்வித்தியாலயத்தில் தற்போது 25 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். 6 ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர்.

இப் பிரதேசத்தைச் சேர்ந்த சாரணர் ஆசிரியரான அனுர சாந்த என்பவர் கனரக இயந்திரங்களைக் கொண்டு சில கட்டிடங்களை உடைப்பதாக அறிகின்றேன்.

கடந்த காலங்களில் இப்பிரதேசத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாகவே இவ்வித்தியாலயத்தில் கல்வி கற்றுவந்த மாணவர்கள் தற்போது வேறு பாடசாலைகளில் கல்வி கற்று வருகின்றனர்.

தற்சமயம் இப்பிரதேசத்தில் நல்ல சூழ்நிலை உருவாகி வருவதால் மேற்படி வித்தியாலயத்தை மீண்டும் அதிக மாணவர்களுடன் செயற்படுத்தக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே உடனடியாக வித்தியாலயத்தை அல்லது அதன் ஒரு பகுதியை வேறு தேவைகளுக்குப் பயன்படுத்துவதை தடுத்து நிறுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன்" என அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

அதேவேளை, இது தொடர்பாக மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்காவைத் தொடர்பு கொள்ள முயன்ற போதிலும் அவரது தொடர்பு கிடைக்கவில்லை என இரா.துரைரத்தினம் எமது செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் இது தொடர்பாக, தான் மாகாண முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதையடுத்து அதனை உடனடியாக நிறுத்துவது குறித்த உத்தரவை முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் பிறப்பித்துள்ளதாக மற்றுமொரு மாகாண சபை உறுப்பினரான சோமசுந்தரம் புஸ்பராஜா கூறுகின்றார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’