யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து, அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் சரணாகதியடைந்துள்ள அப்பாவி தமிழ் மக்கள் சுதந்திரமாக இடம்நகர முடியாதவாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச அனர்த்த குழுவின் தகவல் தொடர்பாடல் பொறுப்பாளர் அன்று ஸ்ட்ரோஹ்லின் தெரிவித்துள்ளார்.
வடக்கில் அமைக்கப்பட்டுள்ள இடம்பெயர் முகாம்களிலிருந்து தப்பிச் செல்ல முயற்சிப்போரை அரசாங்கப் படையினர் துப்பாக்கியினால் சுடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பெனிக்பாம் இடம் பெயர் முகாமில் இடம்பெற்ற சம்பம் இதற்கு கட்டியம் கூறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முகாம்களில் சுகாதாரம், குடிநீர், தங்குமிட வசதி என பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகள் உருவாகியுள்ளதாகவும், எதிர்வரும் பருவப் பெயர்ச்சி மழைக் காலத்தில் இந்த நிலைமை மேலும் மோசமடையக் கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
10000 இடம்பெயர் மக்கள் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போதிலும், குறைந்தபட்சம் 3300 பேர் ஓரு முகாமிலிருந்து மற்றுமொரு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தங்களுக்கு தகவல் கிட்டியுள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணிய அல்லது புலி உறுப்பினர்களை கண்டறியும் நோக்கில் நடைபெறும் விசாரணைகள் உரிய முறையில் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.
அரச சார்பற்ற நிறுவனங்கள், ஊடகங்கள் உள்ளிட்ட அமைப்புக்கள் இடம்பெயர் முகாம்களுக்குச் செல்ல தொடர்ச்சியாக காணப்படும் கட்டுப்பாடுகள் பெரும் சிக்கல் நிலையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முகாம்களில் நிலவும் மோசமான நிலைமை மீண்டுமொரு கிளர்ச்சியை ஏற்படுத்த வலிகோலும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இடம்பெயர் முகாம் மக்கள் எதிர்நோக்கி வரும் அவலங்கள் தொடர்பில் சர்வதேச சமூகம் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’