
நிவாரணக் கிராமங்களில் எந்தவித தொற்று நோய்களும் இல்லையெனவும் நோய் பரவாமல் தடுக்க சகல முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வவுனியா அரச அதிபர் தெரிவித்தார்.
நலன்புரி நிலையங்களுக்கு வரும்போதே பல்வேறு தொற்று நோய்களுடன் வந்தவர்கள் இனங்காணப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தம் இடம்பெற்ற பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு வந்த மக்களிடையே மஞ்சட்காமாலை, தோல் நோய் மற்றும் பொக்குளிப்பான் போன்ற நோய்கள் இருந்தன. இவற்றைக் குணப்படுத்தும் வகையில் விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இவ்வாறான நோய்களைக் கொண்டோர் வேறாக்கப்பட்டு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டன. அதேநேரம் இத்தகைய தொற்றுக்கள் ஏனையோருக்கு பரவாமல் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மழை காலங்களில் நோய்கள் பரவாமலிருப்பதற்காக சுற்றுச் சூழல்கள் துப்புரவு செய்யப்பட்டதுடன் நீர்தேங்கி நிற்பதைத் தடுக்கும் வகையில் வடிகான்கள் புனரமைக்கப்பட்டன. அத்துடன் மக்கள் தங்கியுள்ள கூடாரங்கள் திருத்தியமைக்கப்பட்டன.
இத்தகைய நடவடிக்கைகள் மூலம் தொற்று நோய் பரவுவது தடுக்கப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்திலும் நோய் பரவுவதைத் தடுப்பதற்கான முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வவுனியா அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.



0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’