வவுனியா நலன்புரி நிலையங்களிலிருந்து வருகை தந்த யாழ்.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 1264 பேரை இன்று இரவு சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டதுடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் முற்பணமாக தலா 5000 ரூபாவை வழங்கினார்.
அந்த மக்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அவர்களது தேவைகள் மற்றும் குறைபாடுகளைக் கேட்டறிந்து கொண்டதுடன் உரிய பதிவுகள் மேற்கொள்ளப்பட்டதும் உடனடியாகச் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சாவகச்சேரி கலாச்சார மண்டபத்தில் கூடியிருந்த மக்கள் மத்தியில் உரை நிகழ்த்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பெரும் துன்ப துயரங்களை அனுபவித்த பின்னர் இன்றைய தினம் சொந்த இடங்களில் மீள்குடியமர்வதற்காக வந்துள்ளீர்கள் எனவும் இன்று வழங்கப்பட்ட 5000 ரூபாவைத் தவிர மேலும் 20 ஆயிரம் ரூபா பிரதேச செயலாளர் அலுவலகத்தால் வழங்கப்படும் எனவும் தெரிவித்ததுடன் 6 மாத காலத்திற்கு உலருணவுப் பொருட்கள் தொடர்ச்சியாக வழங்கப்படுவதுடன் வீட்டுப் பாவனைப் பொருட்களும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
கடந்த காலத்தில் நடைபெற்ற துன்ப துயரங்களை ஒரு கெட்ட கனவாக மறந்து எதிர்காலம் குறித்த நம்பிக்கையுடன் புதிய வாழ்க்கையைத் தொடங்குமாறு கேட்டுக் கொண்டதுடன் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி அனைவரும் ஒற்றுமையுடன் முன்செல்வோம் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேலும் தெரிவித்தார்.
இன்று வருகை தந்துள்ள 410 குடும்பங்களுக்கும் சாவகச்சேரி பிரதேச செயலகத்தினரால் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டதுடன் அம்மக்களின் பதிவுகளைத் துரிதமாக மேற்கொண்டு அவர்களைச் சொந்த இடங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளைச் சாவகச்சேரிப் பிரதேச செயலாளர் திரு.ஸ்ரீனிவாசன் தலைமையிலான பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம சேவகர்களும் வழங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.



0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’