இலங்கை விவகாரம் தொடர்பில் கருத்துக்களை வெளியிட முன்னர் எம்முடனும் கலந்தாலோசிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளையிடம் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். அதேவேளை, செனல் 4 விவகாரம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசாரணைகளை நடத்தி அதனை பொய்யென நிரூபித்தமையை ஆணையாளர் நவநீதம் பிள்ளை வரவேற்றுள்ளார்.
ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை பேரவையின் அமர்வுகளில் கலந்துகொண்டுள்ள அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளையை நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்து பேச்சுநடத்தினார். அமைச்சருடன் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸும் இச்சந்திப்பில் கலந்துகொண்டார். இந்த சந்திப்பு தொடர்பில் ஜெனிவாவில் இருந்தவாறு அமைச்சர் மஹிந்த சமரசிங்க கருத்து வெளியிடுகையில் நவநீதம் பிள்ளையுடனான சந்திப்பின்போது செனல் 4 விவகாரம், இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான வசதிகள், நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் செயற்பாடுகள் மற்றும் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுதல் போன்ற விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டன. நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கான வசதிகள் தொடர்பிலும் மீள்குடியேற்றல் வேலைத்திட்டம் குறித்தும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளைக்கு விரிவாக விளக்கமளித்தோம். இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் வேலைத்திட்டம் குறித்தும் விரிவாக எடுத்துக்கூறினோம். செனல் 4 வீடியோ காட்சி போலியானது என்பதனை உறுதிபடுத்தியமையை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நாயகம் வரவேற்றார் என்று கூறினார்.
-




0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’