சிறீலங்கா அரசுக்கு எதிராக சர்வதேசம் சதி செய்கிறது என்று கூறுகின்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அதனை ஐ.நா சபைக்குச் சென்று அம்பலப்படுத்த ஏன் தயங்குகிறார்? இந்தக் குற்றச்சாட்டுகளை அவர் அலரி மாளிகையில் இருந்தபடி புலம்புவதில் என்ன பலன் கிட்டப்போகிறது? என கேள்வி எழுப்பியிருக்கிறார் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல.
யுத்தத்திற்குப் பின்னர் ஜனாதிபதி தன்னை சர்வதேச சண்டியராகக் காட்ட முயல்கிறார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவிக்கையில்:
யுத்தம் இடம்பெற்றபோது அரசை விமர்சித்தவர்கள் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டனர். தற்போது அரசின் அருவருக்கத்தக்க செயல்கள் குறித்து தகவல்கள் வெளிவருகின்றபோது, சர்வதேச சமூகத்துடன் இணைந்து எதிர்க்கட்சி முன்னெடுக்கும் சதியின் ஒரு பகுதி இதுவென தெரிவிக்கப்படுகின்றது.
அரசின் ஸ்திரத்தன்மைக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் சதியே இதுவென ஜனாதிபதி கவலையடைந்துள்ளார் என்றால், அவர் இதனை ஐக்கிய நாடுகள் சபையில் முறியடித்திருக்க வேண்டும், அம்பலப்படுத்தியிருக்க வேண்டும். இதனை செய்வதற்கு ஐ.நாவே சிறந்த பொருத்தமான இடம்.
ஆனால், ஜனாதிபதியோ அழைப்பை ஏற்று நியூயோர்க் சென்று சர்வதேச கூட்டத்தொடரில் உரையாற்றாமல், இதற்குப் பதில் பாடசாலை சிறுவர்களையும், கிராம சேவையாளர்களையும், மருத்துவர்களையும் அலரி மாளிகைக்கு அழைத்து சர்வதேச சதி என அலறுகின்றார்.
இவர்கள் சதிகாரர்களை கண்டுபிடிக்க முடியுமா? முறியடிக்க முடியுமா? ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவிருந்த வேளை, யுத்த நிறுத்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட பின்னர் ஐ.நாவிற்குச் சென்று உரையாற்றினார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவும் ஆழிப்பேரலை குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றினார். ஜனாதிபதி மேற்குலக நாடுகளை சதிகாரர் என்கிறார்.
எனினும், அவர்களை சந்திக்க தயங்குகிறார்; அஞ்சுகிறார். நாடொன்றின் தலைவர் இவ்வாறுதானா நடந்துகொள்ளவேண்டும். யுத்தத்திற்குப் பின்னர் தன்னை சர்வதேச சண்டியராகக் காண்பிக்க முயலும் ஆசையில் ஜனாதிபதி தனது தேசக் கடமைகளை கைவிடுகிறார்.
சர்வதேச இராஜதந்திர உறவுகள் சீர்குலைந்து வருகின்றன. பொருளாதாரம் வீழ்ச்சியடைகின்றது. முழு நாட்டினதும் அபிவிருத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தருணத்தில் இராஜதந்திர ரீதியில் விவேகத்துடன் செயற்படவேண்டும். தனது நாட்டின் நலன் குறித்து சிந்திக்கும் தலைவர் ஒருவர் தனக்கு உதவிய எப்போதும் உதவக்கூடிய உலகிற்கு தன்னை சண்டியராகக் காண்பிக்க முயலமாட்டார்.
மேற்குலகை எதிர்த்த கியுபாவின் தலைவர் பிடல் காஸ்ட்ரோ கூட ஐ.நா. கூட்டத் தொடரில் கலந்துகொண்டுள்ளார். நாட்டின் பிரச்சினைகள் குறித்த விவாதித்து தீர்வு காண்பதற்கான சிறந்த இடம் அதுவென்பதாலேயே அவர் அங்கு சென்றுள்ளார் என்றார்.
-




0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’